-மேகலா இராமமூர்த்தி

வெற்றிகரமான நூறாவது வாரத்தை எட்டியிருக்கிறது படக்கவிதைப் போட்டி. இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கியவர்கள் ஒவ்வொரு வாரமும் சளைக்காது கவிமழை பொழிந்துவரும் வல்லமையின் வல்லமைமிகு கவிஞர்களே. உங்கள் அனைவருக்கும் வல்லமை மின்னிதழ் தன் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து மகிழ்கின்றது.

உங்கள் நல்லாதரவு தொடரட்டும்! தமிழின் தொல்கலையான கவிதைக் கலை செழிக்கட்டும்!

dancing lady

அழகு முத்திரை காட்டும் அபிநயத் தாரகை ஒருவரை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் திருமிகு. ஷாமினி. இதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு நங்கையரும் நம் நன்றியறிதலுக்கு உரியவர்கள்.

வண்ணவுடையில் காண்போர் எண்ணங்கவரும் ஆரணங்கின் ஆட்டத்தைக் கண்டு ஆடாத மனமும் உண்டோ?

எழிலுடை புனைந்து இனிமையாய்க் காட்சிதரும் இந்தக் காரிகை குறித்து நம் கவிஞர்கள் தம் தூரிகையில் தீட்டியிருக்கும் கவிஓவியத்தை இரசித்து வருவோம்!

******

’பாவையிவள் பாதங்களின் பாதையில் இலக்கியம் நடைபயில்கின்றது; கைவிரல்களின் எழிலில் பாக்கள் பரதம் ஆடுகின்றது’ என்று இரசனையோடு கவிதை புனைந்திருக்கிறார் திருமிகு. திலகவதி.

சித்திரப்பாவையின் விழிகள் இரண்டும்
செப்புமொழிகளைப் பேசுதடி….
இதழ்கள் இரண்டில் மொழிவார்த்தையின்
இனிமை கூடுதடி…
தோள்களின் வனப்பில் இலக்கணம்
நழுவிப்போகுதடி…
கைவிரல் எழிலில் பாக்கள்
பரதம் ஆடுதடி…
மெல்லிய இடைதனில்
நளினங்கள் ஆயிரம் கூடுதடி…
பாதங்களின் பாதையில்
இலக்கியம் நடை பயிலுதடி…..
கூந்தலின் இழையில் காப்பியம்
உயிர்த்துவம் பெற்றதடி…..!

******

”தமிழரின் அவலம் துடைக்கப் பாரெங்கும் மேடையமைத்து உரிமைக்குரல் முழக்கிக் கரகமும் பரதமும் நிழ்த்திய மகிழ்வில் வெற்றியொடு திருக்கரம் உயர்த்தும் தமிழ்த்தாய் இவளல்லவோ!” என்று வியக்கிறார் திரு. சச்சிதானந்தம்.

திருக்கரம் உயர்த்திடும் தமிழ்த்தாய் வாழ்க!

கரகம் மயிலொயி லாட்டக் கலையென,
பரதமும் பாமர மனங்களைத் தொடும்படி,
மரபு மடைகளை உடைத்துத் தகர்த்து,
தெருவில் துணிவுடன் மேடை அமைத்து,
இரவும் பகலும் நடனம் தொடுத்து,
பரவும் தமிழரின் அவலம் துடைக்க,
உரிமைக் குரலை எழுப்பிய நிறைவில்,
விரிசெங் கனகப் புன்னகை சிந்தித்,
திருக்கரம் உயர்த்திடும் தமிழ்த்தாய் வாழ்க!

******

ஆண்டவன் தொடங்கிய ஆட்டத்தை காண்போர் வியக்கும் இக்கலையரசி தொடர்வது அழகன்றோ? என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

ஆடு மயிலே…

ஆண்டவன் தொடங்கிய ஆட்டமிது
அணங்கிவள் தொடர்வது அழகன்றோ,
காண்பவர் வியந்திடும் கண்ணழகும்
காட்சிக் கினிய முகமதுவும்,
வேண்டிய உணர்ச்சி காட்டிடுமே
வேதனை மனத்தில் தீர்த்திடுமே,
தூண்டிடும் இன்பம் நிலைத்திடுமே
தெய்வக் கலையிது வாழியவே…!

******

”உலகத்தின் ஆதி இவள்; சிவனின் பாதி இவள்; அந்தமே இல்லாத சோதி இவள். மயிலென ஒயிலாய் ஆடும் இந்த நங்கையின் நடனம் அகிலத்தைக் காக்கும் அன்பின் நர்த்தனம்!” என்று பதம் பிடிக்கும் பாவையைப் புகழ்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

”ஆடல் காணீரோ ” நர்த்தனம் ஆடும் நங்கை இவள்!
உலக இயக்கத்தின் ஆதி இவள்!
அந்தமே இல்லாத
சோதி இவள்!
சிவனுக்கே சீவன் தந்த
சக்தி இவள்!
இதயம் நடமிடும் பெண்ணாலே !
மயிலின் நடனம் பெண்ணாலே!
காற்றின் நடனம் பெண்ணாலே!
அன்பின் நர்த்தனம் பெண்ணாலே!
பெண்ணின் ஆட்டம் என்றும்
அகிலத்தை காப்பதற்கே!
தாளம் தப்பாத ஆட்டம்!
தன்னலமில்லா ஆட்டம்!
கண்ணசைவில் கடவுளின்
கருணை தெரியுதம்மா!
காலசைவில் கடவுளின்
பாதம் தெரியுதம்மா!
அனைத்தும் அன்னையின் கையில்
என அழகாய் புரியுதம்மா!

******

”பெண்ணே! பாடலின் வரிகளுக்கேற்ப வில்லெனும் புருவத்தை வளைத்து நளினமாய் நட(ன)மாடும் நீ, நடராசனின் ஆடற்கலைக்கோர் அற்புத எடுத்துக்காட்டு; உன் அரங்கேற்றம் கண்டு கிறங்கியிருக்கும் இந்த மன்றம் ஆசிவழங்கி உன்னைப் பாராட்டும்!” என்று நன்மொழி நவில்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

நாட்டிய அரங்கேற்றம்

ஆசானிடம் ஆசிபெற்று பரதமெனும்..
**ஆடற்கலை அறவேபயின்ற அற்புதமேயுன்..
அரங்கேற்றம்கண்ட கலைஞர்கள் பலரால்..
**அரங்கம் நிரைந்து வழிந்ததம்மா!

ஆடும்கலைபயின்று அபிநயம்காட்டு முன்னழகால்
**ஆடற்கலைக்கு நீயோர் எடுத்துக்காட்டானாய்
நடனத்தின் தலைவன் நடராசனின்
**நல்லாசிகள் என்றுமுனக்கு உண்டு!

உன்விழிகள் பேசுமதன் பொருளை..
**உணர பன்புலமை வேண்டுமம்மா!
உன்நடனத்தைக் கண்டுவிட்டால் ஒருகணம்..
**தன்னிலை மறந்து தடுமாற்றம் கொள்ளுதம்மா!

கணுக்காலை கண்தரிசிக்க உடல்வளையும்..உன்
**கைக்குறிகள் நடனசூட்சுமத்தை விளக்கும்!
நடனத்தால் பேசுகின்றயுன் நளினத்தால்..
**நடனரங்கம் இமயம்போல் மெளனமாகும்!

பாடலின் வரிகளுக்கேற்ப வளைந்தயுன்புருவம்..
**பாவம்ராகம்தாளம் ஸ்ருதியனைத்தும் சேர்க்குதம்மா!
தத்தித்தத்தி நீயாடும் நடனத்தால்..விழி..
**பொத்திப்பொத்திமூடாமல் காண்பவரைக் காக்குதம்மா!

அரங்கம் வியக்க ஆனந்தக்கூத்தாடி..உன்
**அங்கமாறின் அபிநயத்தால் பரதக்கலையெழும்!
பாதங்கள் பலமாய் தரையையுதைக்கும்..
**பாவம்தனைக்கண்டு கைதட்டும் ரசிகர்கூட்டம்!

உன் சதங்கைகளின் சத்தத்தால்..
**உள் அரங்கத்தின் அமைதி அதிகமாகும்!
உன் கைவிரல்பல முத்திரைகாட்ட..அந்த
**ஆடலறங்கமிப்போது ஆசிவழங்கும் அரங்கமானதோ?

******

பரதக்கலை மயிலே! நீ நாட்டியப் பேரொளி பத்மினியா? நளின நர்த்தகி வைஜெயந்தியா? கோவலனின் மனங்கவர்ந்த மாதவியா? இல்லை… மாதவத்தோனின் மா தவங்கலைத்த மேனகையா? என்று கேள்விகளால் கவி வேள்வி செய்கிறார் திரு. சி. ஜெயபாரதன்.

நாட்டியப் பேரொளி
நடிகை பத்மினியோ ?
நளின நர்த்தகி
வைஜயந்தி மாலாவோ ?
நாட்டியக்
கலையரசி கமலாவோ ?
காலைத் தூக்கி
கரத்தில் கனல் ஏந்தி
ஞாலத்தில்
அசுரன் மேல்
ஒற்றைக் காலில் ஆடும்
நெற்றிக்கண்
தில்லைப் பெருமானா ?
அண்ட சராசரங்கள் அத்தனையும்
ஆடும் அகிலத்தில்
உன்னாட்டம் அரங்கேறுதா ?
கலைக் கண்ணால்
சுட்டுக் கோவலனை
மயக்க வந்த
மாதவியா ? இல்லை
மகரிஷியின்
தவங் கலைக்க வந்த
மேனகையா ?
மீன்விழி ஊர்வசியா ?
நிறுத்தாமல் ஆடு !
நெஞ்செல்லாம் கொதிக்க !
உன்னாட்டம் நின்றால்
என்னிதயம்
நின்று விடும்
பரதக் கலை மயிலே !

அபிநயிக்கும் அழகரசியின் எழிலுருவம் நம் கவிஞர்களைக் கலாரசிகர்களாக மாற்றிச் சந்தக் கவிமழையைச் சிந்த வைத்திருக்கின்றது. பாராட்டுக்கள் கவிமணிகளே!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தேர்வு செய்திருப்பதை இனிக் காண்போம்!

பெண்மை

நறுமுகை ஏகிய குழலும் – அணி
கலன்கள் பூட்டிய உடலும் – குறு
மென்னகை நெளியும் இதழும் – நூல்
இடையில் பட்டுடைக் கட்டும் தவழ
மருளும் விழிக ளுடனே வந்திடும்
பெண்ணின் இனமே யென
நினைத் தாயோ தமிழ்மகனே!
தேவை யொன்று வந்தால் – மென்
தோள்களும் மலையென நிமிரும்! மலர்
வளைகளும் போர்க் கலனாகும்! யெம்
சிரிப்பினில் தீச்சுடர் தெறிக்கும்!
குளிரச் சுரக்கும் நீர் தான்
ஆழிப் பேரலை யாகும் – யாம்
விளக்காய் வெளிச்சம் தரவோ – எரி
தழலாய் சுழன்று வரவோ – அது
உந்தன் கைவிரல் முனையில்!

”தமிழ்மகனே! மென்னகை நெளியும் இதழும், பட்டுடை மிளிரும் இடையும் கொண்ட வெறும் அழகுப் பதுமை என்றா என்னை நினைத்தாய்? ஒருக்காலும் இல்லை! அவசியம் நேர்ந்தால் மயிலெனும் மென்சாயல்கொண்ட நான், வன்புயலென மாறிக் கயவரைச் சிதைக்கும் புதுமையும் நிகழ்த்துவேன்!” என்று போர்ப்பறை முழக்கும் பெண்ணரசியைத் தன் கவிதையில் கம்பீரமாய்ப் படைத்துக்காட்டியிருக்கும் திருமிகு. ஹேமாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி 100-இன் முடிவுகள்

  1. அழகிய கவிதை ஒன்றைப் படைத்து இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி.ஹேமா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    போட்டியில் கலந்து கொண்ட பிற கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  2. பெண்ணை தாயாய் நினைக்கும்
    தமிழினம் நாங்கள்!
    தாயின் அடி பற்றி எங்களை சீராட்டும்
    தாரமும் தாய் தானே!
    அமுதத் தமிழில் அழகுக் கவிதை தந்த
    அன்புச் சகோதரி திருமதி ஹேமாவிற்கு
    உளமார்ந்த வாழ்த்துக்கள்!

  3. வென்றவர்க்கும் பங்கு கொண்டவர்க்கும் 100 வாரக் களம் கண்டவர்க்கும் உடன் நின்றவர்க்கும் வாழ்த்துகள்.

  4. படக்கவிதைப் போட்டிக்குப்
    பலர் பாட்டெழுதி
    முதற்பாடல் தேர்ந்தெடுத்து
    வாரக் கவிஞருக்குள்
    வல்லவரைக் கண்டு வாழ்த்துவது
    வல்லமையில்
    நூறாம் முறையாகச்
    சீராக வந்துள்ளது
    பாராட்ட வேண்டிய தமிழ்ப்
    பணியப்பா.

    சி. ஜெயபாரதன், கனடா

Leave a Reply to ஹேமா

Your email address will not be published. Required fields are marked *