-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய படத்தை எடுத்திருப்பவர் திரு. லோகேஷ்வரன் ராஜேந்திரன். இப்படத்தைத் தேர்வுசெய்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி உரியது.

hen and rooster

பெட்டைக்கோழியும் கொண்டைச்சேவலும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள நேரம்பார்த்து நிற்பதுபோல் தோன்றுகின்றது. தள்ளி நின்றிருக்கும் மற்றொரு சேவல்தான் இச்சண்டையில் வெற்றியாளர் யார் என்பதை முடிவுசெய்யும் நடுவரோ?

நம் ஊகம் இருக்கட்டும். கவிஞர்கள் காத்திருக்கிறார்கள் படத்திற்குத் தோதாகப் பாப்புனைய! அவர்களின் கருத்தையும் அறிந்துவருவோம்!

*****

”அடுத்தவர் சண்டையைத் தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும் மடமையை மனிதரிடம் கற்றனவோ இந்தக் கோழிகள்?” என்று வேதனையோடு வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

மனிதனிடம் கற்றது…

அடுத்தவர் மோதிட வேடிக்கையாய்
அதனைப் பார்த்தே ரசித்திடுவான்,
தடுத்திட வராமல் தள்ளிநின்று
தூண்டி விடுவான் அரசியலில்,
அடுத்தே அவனிடம் வளர்ந்ததாலே
அந்த குணமே கோழிகட்கும்,
தடுக்கும் எண்ணம் இல்லாமல்
தொடர விட்டிடும் சண்டையையே…!

*****

”என்னைத் தூற்றுவார் தூற்றட்டும்; புதுமைப்பெண்ணென்று போற்றுவார் போற்றட்டும்! சமத்துவம் பிறக்கச் சண்டைதான் வழியென்றால் சமர் செய்வேன்; சமரசம் செய்யேன்!” என்று சிலிர்த்துநிற்கும் வீரக்கோழி இது!” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

அச்சம் என்பது மடமையடா
கொண்டை சிலிர்த்து கோபமாய்
பார்ப்பதினால்!
அஞ்சிடும் பெட்டைக் கோழி நான்
என்று நினைத்தாயோ!
பெண் விடுதலை சொன்ன
கவிபாரதி ஊர் பிறந்த
பறவையடா நான்!
வீர மங்கை வேலு நாச்சியார்
புகழ் சொல்லும்
தமிழகக் கோழியடா நான்!
அரவணைக்கும் மாந்தருக்கு
அன்புத் தோழியடா நான்!
அநியாயம் செய்பவர்க்கு
செந்தணலடா நான்!
சமத்துவம் பிறப்பதற்கு
சண்டை தான் வழியென்றால்
சண்டைக் கோழியென!
சமர் செய்து வென்றிடுவேன் !
தூற்றுவார் தூற்றட்டும்!
புதுமைப் பெண்ணென்று
போற்றுவார் போற்றட்டும் !

*****

”கத்தியின்றி இரத்தமின்றி வெற்றுக்காலுடன் நாங்கள் நடாத்தும் இப்போரே உண்மையான அகிம்சைப் போர். காட்டுக்கோழியாயிருந்தால் காலனிடமிருந்து தப்பியிருப்போம்; நாட்டுக்கோழியானதால் நித்தமும் கண்டம் எமக்கு!” என்று தன் சுயசரிதையைச் சோகம் தோய்ந்த நயமுடன் செப்பும் கோழிச்சேவலைக் காண்கிறோம் பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதையில். 

சேவலின் கூவல்

வைகரையில் கூவியுனைஎழ வைத்துன்
துயில்கலைந்ததும் கேளுமடா என்சரிதம்!

செந்நிறக் கொண்டை சிவந்தயென் கண்கள்..
நிமிர்ந்தயென்பார்வை மிடுக்கானநடை கொண்ட..
“கோழி” யெனும்பெயரே சேவலெனைமட்டும் குறிக்குமாம்!
“சேவல்” “மயில்” “நாடு” யெனப் பன்பெயரென் புகழ்சொல்லும்!

பெட்டைக்கோழியிடம் மட்டற்ற ஆதிக்கம்பெற…ஆணவ ஆண்கோழிகள் சண்டையிடுவது இயற்கையானால்…
கோழியெனைச் சூதாக வைத்தாடுவது தகுமா?.மீண்டும்!
பாவிமனிதனெனும் பழிவேண்டச் சேவல்சூதாட்டம் வேணுமா?

சிவன்குமரப் பெருமானின் கொடியிலேறியதால்..எனைவைத்து..
சூதாட்டம்கூட “தென்திருவிளையாட்டானது”?..சூதில்நான்..
வெற்றிபெற்றால் “வெற்றி” யெனப் பெயர்படுவேன்!
தோல்வியெனில் “கோச்சை” யென நானறிவேன்!

செந்நீரைச் சிந்தியெந்தன் சேவலுயிர் போனாலும்..
செந்தமிழன் வீரமென்று சீராட்டுமென் தென்திருநாடு!காலில் கத்திகட்டிக் கட்டாலிகள் விளையாடும்..
கள்ளாட்டம் புத்திகெட்டமானுடனின் செயலாகும்!வெற்றுக்காலுடன் கத்தியின்றி ரத்தமின்றி யான்பெறும்..
வெற்றியென்பது உண்மையகிம்சை வெற்றியாகும்!

காட்டமான சண்டையில் வெற்றிபெற என்னினத்தை..
காளிமுன்பு காவுகொடுத்தான் கயவனொருவன்!காட்டுக்கோழியானால் காலனெனைத் துரத்தமாட்டான்!
நாட்டுக்கோழியானதால் நித்தம்நித்தம் ஆயுள்கண்டம்!

கோதாவில் கழுத்தறுந்து உயிரிழந்த பரிதாபத்தால்..
கடாயில்பல மசாலாவுடன் கோழிநான் குருமாவானேன்!
நெட்டைக்கழுத்தை நீட்டியென் பகைவன்மேல் பறந்து..
பட்டைதீட்டிய கத்தியால் எதிரிக்கழுத்தை அறுத்ததால்..
குலத்தைக் கெடுக்க வந்த கோடரிபோல்..என்..
இனத்தை நானேகெடுத்து வாழ்வில் இழுக்குற்றேன்!

பதார்த்த குணசிந்தாமணி படித்தவர் என்னிடமரும்..
மருத்துவகுணமுண்டென்று மருந்தாகயெனைச் சமைத்துண்டார்!

சாமக்கோழியென் அலறும் அறைகூவலுனக்கு..
சமையல்கட்டினுளென் வேதனையறிய வைக்குமடா!

சேவற்கொடியோன் அருளீன்ற என்னுயிரை…இனியும்..
காவல்காக்கமுடியா தென்பது இயற்கைவிதியாமோ?..

*****

”தன்னினத்தைத் தான் மாய்க்கும் பொல்லாக் கயமையினைக் கோழியினமான எம்மிடமும் திணித்து, எம்மைச் சண்டையிட வைத்து இரசிக்கின்றானே பாவி மனிதன்! எவ்வுயிரும் வாழவேண்டும் எனும் நல்லுளங் கொண்டு பொன்னுலகு சமைப்போம்; போரிடலை மாய்ப்போம்!” என்று நல்லுரை நவில்கிறது திரு. இளவல் ஹரிஹரனின் கவிதையில் வரும் சேவல்.

தமிழ்க்கடவுள் முருகனவன்
  தனிக்கொடியில் விளங்கியதும்
அமைதியினைக் கிழித்தபடி
  அதிகாலைக் கூவியதும்

உறங்குகின்ற உயிர்களெலாம்
    உன்குரலால் விழித்ததுவும்
நிறங்கொண்ட செங்கொண்டை
    நிமிர்ந்திடவே நடந்ததுவும்

கிராமத்து வீடுகளில்
    கிளரழகைக் கொடுத்ததுவும்
வராமலேயே போனதென்ன
    வண்ணமிழந்த சித்திரமாய்!

கலாசாரப் பெயர்சூடி
    காலினிலே கத்திகொண்டு
விழாமேடை சந்தைத்திடலில்
    வீறுகொண்ட வேங்கையெனச்

சண்டையிடும் சேவலென
     சாதிமாறிப் போனதென்ன…
வன்கொடுமை தனைக்காட்ட
     வன்மமுடன் வளர்ந்ததென்ன…

தன்னினத்தைச் சண்டையிட்டுத்
     தான்மாய்க்கும் காட்சியினை
கண்ணிறைய ரசிக்கின்ற
     கயமைதான் மனிதனிடம்…

தன்குணத்தைப் பிறவுயிர்கள்
     தலைமீதே ஏற்றிவிட்டுப்
பந்தயத்துச் சேவலெனப்
     பாயவிடும் மாயமென்ன…

எவ்வுயிரும் தம்முயிராய்
    எண்ணவைக்கும் உயர்ந்ததொரு
தெய்வமனங் கொண்டுவாழத்
    தேடல்புரி மனிதனவன்

சேவற்கட்டு புரிவதென்ன
      சேர்ந்தவுயிர் அழிவதென்ன…
ஆவலுடன் பந்தயத்தில்
      அநியாயஞ் செய்வதென்ன…

இந்நிலைமை மாறிடவே
     எவ்வுயிரும் வாழ்ந்திடவே
பொன்னுலகைச் செய்திடுவோம்
     போரிடலை மாய்த்திடுவோம்.

பறவைகளின் வாயிலாய் நல்ல வாழ்வியல் சிந்தனைகளைச் சிறக்கச் சொல்லியிருக்கின்றனர் நம் கவிஞர்கள். அவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தேர்வு செய்திருப்பது…

வீம்புச் சண்டைவேணாண்டா மச்சானே! – சித்தே
விழுந்தமுன்னா எழும்ப மாட்டம் மச்சானே!

நாம் விழுந்தா அவனுக்கென்ன மச்சானே – வந்து
நம்ம மண்ணைப் புடிச்சுக்குவான் மச்சானே!

இப்பதானே வந்திருக்கோம் மச்சானே! – அட
இதுக்குள்ளயேன் வம்புச் சண்டை மச்சானே!
தப்புன்னாலும் தவறுன்னாலும் மச்சானே! –நாம
தக்க வைப்போம் நம்ம மண்ணை மச்சானே!

எட்டி நின்னு புதினம் பார்த்து மச்சானே! – நாம
எப்ப வீழ்வமெண்டிருக்கான் மச்சானே!
விட்டமுன்னா நம்ம மண்ணை மச்சானே! – அத
மீட்கிறது சுலபமில்ல மச்சானே!

மத்தியிலே நின்னுக்குவான் மச்சானே! – தான்
மன்னனென்று பீத்திக்குவான் மச்சானே!
புத்திகெட்டு விழுந்தமுன்னா மச்சானே! – நம்ம
பூமி பறி போயிடும்டா மச்சானே.

போனவங்க போகட்டும்டா மச்சானே! – நம்ம
பூமி இப்போ முக்கியம்டா மச்சானே!
ஆனதெல்லாம் ஆகட்டும்டா மச்சானே! – ஆனா
அந்நியன் வந்தாளலாமோ மச்சானே?!

ஒற்றுமையா இருந்திடலாம் மச்சானே! – நமக்கு
உள்ளதின்னும் சிலகாலம் மச்சானே!
வெற்றி காண வேணுமுன்னா மச்சானே! – அதுக்கு
வேளை வரும் பொறுத்திருடா மச்சானே!             

நம்மிடம் குறைவாயிருப்பது ஒற்றுமை. அதனாலன்றோ வெள்ளையன் நம் மண்ணை எளிதில் கொள்ளையிட முடிந்தது.

அதுகண்டு உளம்நொந்து, ஒற்றுமையின் பெற்றியைப் பாடவந்த பாரதி,

”ஒன்றுபட் டால்உண்டு வாழ்வு நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம்வந் தாற்பின்
நமக்கெது வேண்டும்?” என்றான். 

பாரதி நமக்கு போதித்த அந்த ஞானத்தையே இந்தக் கோழியும் தன்னருகில் சண்டைக்குச் சிலிர்த்துநிற்கும் தன் (சேவல்) மச்சானிடம் பக்குவமாய்ச் சொல்கிறது.

கோழியின் வழியே மானுட சமூகத்திற்கு(ம்) நல்லறிவு கொளுத்தியிருக்கும் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 101-இன் முடிவுகள்

  1. புதியதொரு கோணத்தில் கவிதை படைத்து சிறந்த கவிஞராகத் தேர்வு பெற்றுள்ள திரு.எஸ்.கருணானந்தராஜா அவர்களுக்கும், கவிதைகளைப் படைத்த பிற கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்

Leave a Reply to சச்சிதானந்தம்

Your email address will not be published. Required fields are marked *