எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா 

 

ஓடிவரும் ஆறும் ஊற்றெடுக்கும் நீரும்

ஆடிவரும் காற்றும் அனைவருக்கும் உதவும்

கூவிநிற்கும் குயிலும் குதித்தோடும் முயலும்

யாவருக்கும் இன்பம் நல்கிவிடும் நயமாய் !

 

மயிலென்போம் குயிலென்போம்

வண்ணமிகு கிளியென்போம்

தனியான குணங்கொண்டால்

அன்னமென உயர்த்திடுவோம்

கருடனை வணங்கிடுவோம்

காக்கைக்குச் சோறிடுவோம்

பெருமைநிறை பறவையென

உரிமையாய் உரைத்துநிற்போம் !

 

கூவிநிற்கும் கோழியினை

குழம்புவைத்துச் சுவைத்துவிட்டு

கோழியது பொருமையை

கொண்டாடி மகிழ்ந்திடுவர்

வீட்டிலே வளர்த்தெடுக்கும்

வெள்ளாடு தனைவெட்டி

விருந்துண்டு மகிழ்ந்துவிட்டு

விரிவுரைகள் செய்துநிற்பர் !

 

அஃறிணை என்று

அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு

உயர்திணை என்று

உவப்பாகப் பேசிநிற்கும்

உலகத்து மனிதர்களின்

உண்மைமுகம் வரும்பொழுது

அஃறிணை எதுவென்று

அப்போது  அறிந்திடலாம் !

 

உயிர்கொன்று உயிர்வளர்த்தல்

உயர்வான செயலன்று

எனவுரைக்கும் வள்ளுவத்தை

உயர்பீடம் வைக்கின்றோம்

உயர்வான குறள்சொல்லும்

உயர்வான தத்துவத்தை

உள்ளமதில் பதிக்காமல்

உதாசீனம் செய்கின்றோம் !

 

கருணையைக் கடவுளென்போம்

அன்புதான் அனைத்துமென்போம்

உயிர்களைக் காப்போமென்று

உறுதியும் எடுத்து நிற்போம்

விலங்குக்குச் சங்கம்வைப்போம்

வேள்விகள் வேண்டாமென்போம்

நலம்பற்றி சொல்லிவிட்டு

நாம்மட்டும் மாறமாட்டோம் !

 

மனமுள்ள மனிதர்களே மாறிவிட முனையுங்கள்

தினமுமே பாவமதை செய்துவிட முனையாதீர்

அனுதினமும் நல்லவற்றை மனமெண்ணி ஆற்றுங்கள்

ஆண்டவனின் அருள்கிடைக்க அன்புதனை அணையுங்கள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *