விடியலை நோக்கி
முல்லைஅமுதன்
வானத்தை மழைக்காக
நிமிர்ந்து பார்த்த ஒரு காலத்தில்
உணவு போட்டது ஒரு விமானம்.
பிறிதொரு நாளில்
சுற்றிவளைப்பு நடந்த மாலைப்பொழுதில்
குண்டு போட்டது.
நண்பனும் மடிந்தான்.
விமானம்
அமைச்சரை,
நாட்டின் தலைவரை
அழைத்துவந்த
விமானம் என
அவன்
அடையாளம் காட்டினான்.
விமானத்தில்
வந்தவர்கள்
நின்றவர்களுடன்
ஊருசனம்
மடியும் வரை
நின்றே இருந்தனர்.
இன்றுவரை
இனம்
அழியவிட்ட விமானம்
மீண்டும் வரலாம்.
கைகள்-
துருதுருத்தபடி
கற்களுடன் காத்தே நிற்கிறது.