புதுவைப் பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!
மு. இளங்கோவன்
புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், புகழ்பெற்ற ஆய்வாளருமான முனைவர் அ. அறிவுநம்பி இன்று (09.04.2017) மாரடைப்பால் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். காரைக்குடியில் பிறந்த பேராசிரியர் அ. அறிவுநம்பி, காரைக்குடி அழகப்பர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராக இணைந்து, பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர் பொறுப்புகளை வகித்தவர். பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கல்விப்பயணமாகப் பலநாடுகளுக்குச் சென்று வந்தவர்.
இன்னும் இரண்டு மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அ.அறிவுநம்பி இன்று திடுமென இயற்கை எய்தியமை தமிழகத்துக் கல்வியாளர்களைப் பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாளை 10.04.2017 (திங்கள்) மாலை 4.30 மணிக்குப் புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் உள்ள கலைவாணி நகர் இல்லத்திலிருந்து உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக வந்து பேராசிரியர் அ. அறிவுநம்பிக்கு அஞ்சலி செலுத்தியவாறு உள்ளனர்.