உதயம் காணா இதயம்
நாகினி
விதையாய் விழுந்து கதையாய் போனது
அன்பின் பிம்பம் கன்றிட நோகுது
தெம்பு தராமல் வம்பு வளர்ந்திட
என்னதான் காரணம் சின்னதாய்ச் சண்டையோ!
சண்டையும் இல்லையே மண்டையும் காயுதே
பிணக்குகள் தொடர்ந்திடும் கணக்குகள் புரியாமல்
ஒற்றுமை மனங்களில் வேற்றுமை வளர்வதேன்
விடுகதை வாழ்வினில் நடு(ம்)கதை சாதியோ!
சாதியோ மதமோ சாதித்து பிரிவினை
நோய்தனைப் பரப்பியே பாய்தனில் விழச்செயும்
பாதகப் படுகுழி வாதகம் சேர்வதால்
நேசக் கரங்களும் பாசக் கயிற்றினில்!
கயிற்றினில் தொங்கிட வயிற்றினில் அடித்திங்கு
நசுக்கிடும் காதலை பொசுக்கிடும் நிலையால்
உதயம் காணா இதயம் துடித்து
வெந்து விழிநீருடன் நொந்து உலவுதே!
… நாகினி