கண்ணனை நெஞ்சே கருது…. (பாடல் – மகாநதி ஷோபனா)
கிரேசி மோகன்
கண்ணனை நெஞ்சே கருது….
—————————————
எழுதியது அடியேன் பாடி &இசையமைத்தது ‘’மஹாநதி ஷோபனா’’ அவர்கள்….!
பீதாம் பரமாட பீலி மயிலாட
தோதான தோழர்கள் தோள்கொடுக்க -மீதேறி
வெண்ணையை வாரி வழங்கிடும் வள்ளலை
கண்ணனை நெஞ்சே கருது….(1)
நாணமின்றி யுத்தத்தில் நாலுகால் ஜந்துக்கள்
சாணமள்லிக் கொட்டும் ஜனார்த்தனனை -ஞானமள்ளி
உண்ணென கீதையை ஊட்டியதே ரோட்டியை
கண்ணனை நெஞ்சே கருது….(2)
பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
கண்ணனை நெஞ்சே கருது….(3)
பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
கண்ணனை நெஞ்சே கருது….(4)
காரோத வண்ணனின் பேரோத ஆயிரம்
நீரோடை போல்தெளிவு நம்வாழ்வில் -ஆராத
இன்னமுதை தீந்திருக் கண்ணமுதைக் கற்கண்டைக்
கண்ணனை நெஞ்சே கருது….(5)
வேறார்வம் கொள்ளாது ஆராப் புலனடக்கி
நாரா யணனை நினைப்பதே -சாராம்சம்
அன்நிலைக்கு செல்ல அனுபூதி தந்திடும்
கண்ணனை நெஞ்சே கருது….(6)