கோதை ஆண்டாள் – 2
-தமிழ்த்தேனீ
பாகம் 7
“நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்னும் பத்தாவது பாசுரத்திலே நாற்றத்துழாய் முடி நாராயணன் என்கிறாள். நாற்றம் என்றாலே நாம் மூக்கைப் பொத்திக் கொள்கிறோம் தமிழைச் சரியாக அறியாமல். நாற்றம் என்றால் மணம்; துர்நாற்றம் என்றால்தான் மூக்கை மூடிக்கொள்ளவேண்டும். துழாய்முடி என்கிறாள் துளசியின் வாசனை கொண்ட நாராயணன் என்கிறாள் அவனைப் போற்றினால் ஸ்வர்கம் நிச்சயம் அப்படி இருக்க கும்பகர்ணன் போல் தூங்கலாமோ என்கிறாள். ஆச்சரியமாக இருக்கிறது இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு நாராயணனின் சுருள் கேசம் துளசி வாசம் என்று எப்படிக் கண்டுகொண்டாள் இந்த ஆண்டாள்? கும்பகர்ணனைப் பற்றிச் சொல்லி நான் காலத்தைக் கடந்தவள் ராமாவதாரத்திலே வந்த கும்பகர்ணனைப் பற்றியும் தெரியும் என்று சவால் விடுகிறாள் ஆண்டாள். என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டாம் அவள்தானே மஹாலக்ஷ்மி அவளுக்குத் தெரியாதது உண்டா?
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்னும் பதினோராவது பாசுரத்திலே கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாக இருந்தாலும் எதிரிகளைப் பகைவர்களை பந்தாடும் தீரன் என்கிறாள் கண்ணனை. அப்படிப்பட்ட கண்ணனை தழுவத் துடித்தால் போதாது அதற்கு அவன் நாமத்தைப் பாடி அவனைப் புகழ்ந்து பாடினால்தான் அவனை அடைய முடியும் ஆகவே நாம் கூட்டாக அவனைப் பற்றிப் பாடலாம் வா என்று கூட்டுப் ப்ரார்த்தனையை விளக்குகிறாள் ஆண்டாள்.
“கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிறங்கி
நினைத்து முலைவழியே பால் சோர“
என்னும் பன்னிரெண்டாம் பாசுரத்திலே இறைவன் அருள் கன்றுக்கிறங்கும் பசுவின் மனதைப் போன்றது. அப்படிப்பட்ட ஶ்ரீராமன் போன்ற சீதையைக் கவர்ந்த ராவணனை அழிக்க ராமாவதாரம் கொண்டு ராஜாதி ராஜனாக வந்த நாராயணனின் புகழைப் பாடுவோம் வா என்கிறாள்.
“புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானை என்னும் பதிமூணாவது பாசுரத்திலே பகாசுரன் வாயைப் பிளந்தவன் அவன். அப்படிப்பட்ட கிருஷ்ணனை நினைந்து பாடத்தானே வேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.
பாகம் 8
இப்படி முப்பது பாசுரத்திலும் கண்ணனின் புகழைப் பாடி மற்றவருக்கும் அவன் புகழைப் பரப்பி நான் அவனைத்தான் சேரப் போகிறேன் என்று ஊர் முழுதும் சொல்லிவிட்டாள் ஆண்டாள். ஆனால் பெரியாழ்வாருக்குத் தெரியவில்லை. பெண்களின் காதல் எப்போதுமே ஊரிலுள்ளோர் அனைவருக்கும் தெரிந்தபின்னும் பெற்றவர்களுக்குத் தெரியாமலிருக்கும். அப்படியே யாராவது உங்க பொண்ணை ஜாக்கிறதையாக பாத்துக்கங்க என்று சொன்னால் என் பொண்ணைப் பத்தி இப்பிடியெல்லாம் பேசாதீங்க; அவ அப்பிடியெல்லாம் செய்யமாட்டா என்று சொல்லி அதீதப் பாசமும் நம்பிக்கையும் வைத்திருப்பவரே பெற்றோர்கள். ஆனால் உண்மை தெரியும் போது அதிர்ந்தே போவார்கள்.
அப்படித்தான் பெரியாழ்வாரும் அதிர்ந்தார். நாம் வளர்த்த ஆண்டாளா இப்படிச் செய்தாள்? குழந்தை வளர வளரப் பார்த்துப் பார்த்து தோளிலும் மார்பிலும் போட்டுக்கொண்டு வளர்த்து ஒவ்வொரு வினாடியும் அரங்கனைப் பற்றி சொல்லிக் கொடுத்து இப்படியெல்லாம் வளர்த்த அந்த ஆண்டாளா இப்படிச் செய்தாள். அரங்க சேவையை ஒவ்வொரு அணுவுக்குள்ளும் புகுத்தி வளர்த்தோமே அப்படியெல்லாம் வளர்த்த ஆண்டாளா இப்படிச் செய்தாள், அவரால் அவர் கண்ணையே நம்ப முடியவில்லை.
அரங்கனுக்காகவே பக்திமலர்களால் தொடுத்த மாலையைத் தன் தோளிலே போட்டுக்கொண்டு அழகுபார்க்க எப்படி முடிந்தது இந்தக் குழந்தையால்? அரங்கனின் பெருமைகளை சொல்லிச் சொல்லித்தானே வளர்த்தோம்? அப்படி இருக்க, அரங்கனுக்குக் கட்டிய மாலையை அணிந்து கொண்டு நிற்கிறாளே ! தகுமா இந்தச் செய்கை என்று விதிர்விதிர்த்தார். எங்கே தவறு செய்தோம் என்றே புரியாமல் தடுமாறி நின்றார் பெரியாழ்வார்.
சிறு வயது முதலே இவன் உன்னோட மாமா பிள்ளை, இவன் உன்னோட அத்தை பிள்ளை இவங்க ரெண்டு பேருமே உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத் தகுதியான முறை கொண்டவர்கள் என்று சொல்லி அடிக்கடி அவர்களைப் பற்றிய பெருமைகளை எடுத்துச் சொல்லி வளர்த்துவிட்டு நான் அத்தானைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன், மாமனைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன் என்று மகள் சொன்னால் அதிர்ந்து போகிறார்கள். அவர்கள் அந்தப் பிஞ்சு மனதிலே ஏற்றிய நினைவுகளின் விளைவுதான் என்பதை அறியாத பெற்றோர். அது போலத்தான் பெரியாழ்வாரும்! அரங்கன் புகழைப் பற்றியே பேசிப் பேசி ஆண்டாள் மனதிலே அரங்கனைப் பதிய வைத்துவிட்டு என்ன உன் மனதிலே அரங்க இருக்கிறானா என்று அதிர்கிறார்.
பாகம் 9
அரங்கனை அடையத்தான் நான் குழந்தை வடிவிலே உம்மிடம் வந்தேன் பெரியாழ்வாரே அந்த தேவ ரகசியத்தை நீர் அறிய மாட்டீரா ஏதோ நாடகம் போல் நீரும் உணராதது போல் நடிக்கிறீர். நீர் பெரியாழ்வார் அல்லவா? உமக்குத் தெரியாத தேவ ரகசியம் உண்டா? ஆனாலும் தெரியாததுபோல் நடிக்கிறீர்! எனக்கு உபதேசம் செய்வது போல் நடிக்கிறீர். உமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மையை நன்கு உணர்ந்து நடிக்கிறீர். என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு ஆம் அப்பா நான் அரங்கனை என் மனதிலே வரித்துவிட்டேன் . அவரைத் தவிர மானுடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்கிறாள் ஆண்டாள்.
பெரியாழ்வார் கனவில் வந்த அரங்கன், ”பெரியாழ்வாரே ஆண்டாள் என்னிடம் சேரவே உம்மிடம் வந்தாள்; ஆகவே அவளை என்னிடம் அழைத்து வாரும்!” என்று உத்தரவிடுகிறார். பெரியாழ்வாரும் ஆண்டாளை அழைத்துப் போகிறார். அங்கே ஆண்டாள் அரங்கனுடன் இரண்டறக் கலக்கிறாள்.
திருமணம் முடித்து மகிழ்ச்சியோடு பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் விட்டுவிட்டு விடைபெற்று வீட்டுக்கு வந்தாலும் பெண் நினைவாகவே இருக்கும் பெற்றோர்களின் மனம்போல் ஆண்டாளின் நினைவாகவே இருக்கிறார் பெரியாழ்வார். நந்தவனத்துக்குச் சென்று துளசி மாடத்தையே ஏக்கமாகப் பார்த்துகொண்டு நிற்கிறார் பெரியாழ்வார். எல்லாமே படம்போல் காட்சியாய் விரிகிறது அவர் மனதிலே.
துளசி மாடத்தின் கீழே ஆண்டாள் குழந்தையாய்ப் படுத்துக்கொண்டு தன் குட்டிக் கால்களையும், கைகளையும் அசைத்துக்கொண்டு, செம்பஞ்சுக் குழம்பு பூசியதைப் போன்று உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும் தாமரை மலர்கள் அசைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, கருணையும், கனிவும், கலந்த கருவிழிக் கண்களால் வா வா என்னை எடுத்துக்கொள் என்று அழைப்பது போலவும், இதழ்க் கடையோரம் இளநகையோடு நான்தான் பெரியாழ்வாரே என்னைத் தெரியவில்லையா? எல்லாம் ஒரு காரணத்தோடுதான் நான் இங்கே வந்து உங்கள் நந்தவனத்தில் துளசிமாடம் அருகே வந்துதித்து பூமித்தாய் மடியிலே படுத்துக் கிடக்கின்றேன், வந்து என்னை எடுத்துக்கொண்டு உம் மகளாய் வளர்க்க ஆசை வரவில்லையா உமக்கு? வாரும் வந்து என்னை எடுத்துக்கொள்ளும். பக்தன் ஆசைப்படுவதுண்டு பரம்பொருளின் அருகே வாசம் செய்ய வேண்டும் என்று. இங்கே நானே ஆசைப்பட்டுத்தானே , பேரருள் பெற்ற பெரியாழ்வாரே உம் அருகிலே வாசம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டுத்தானே இந்த வாசம் மிகுந்த நந்தவனத்திலே துளசி மாடத்தின் அருகிலே நானே இங்கே வந்து கிடக்கிறேன்.
பாகம் 10
இன்னுமா புரியவில்லை, வாரும் இந்தப் பிறப்பின் தந்தையே வந்து என்னை எடுத்துக்கொள்ளும் என்று உணர்த்தினாள் கோதை. பெரியாழ்வார் தன் சுய உணர்வுக்கு வந்து குழந்தையை அள்ளி அணைத்து, மார்போடணைத்து உடலும் உள்ளமும் உருக உருக முதன்முதலாய் ஒரு குழந்தையின் ஸ்பரிஸத்தை அனுபவித்து, அது குழந்தையா தெய்வமா என்று தடுமாறி, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று உணர்ந்து, என்ன பாக்கியம் செய்தேன்! இப்படிப்பட்ட ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க நான் என்ன பாக்கியம் செய்தேன்! என்று தனக்குதானே தன்னுடைய அதிர்ஷ்டத்தை எண்ணி பூரித்துத் தாயானார். உடனே அவருக்கு அடடே குழந்தைக்கு ஊதக் காற்று ஒத்துக்கொள்ளுமோ? என்று தன் மேல் உத்தரியத்தால் நன்றாக மூடி, தன் குடிலுக்கு எடுத்துச் சென்றார் பெரியாழ்வார்.
ஒரு வஸ்திரத்தில் அணைவாகக் குழந்தையை விட்டுவிட்டு எதிரே உட்கார்ந்து குழந்தையைவிட்டுக் கண்ணகற்றாமல் பார்த்துக்கொண்டே இருந்தார் பெரியாழ்வார். மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. மானுடர்க்கு எளிதில் கிடைக்காத ஒரு ஆச்சரியமான அபூர்வமான ஒரு குழந்தை தனக்கு கிடைத்திருக்கிறதே. எனக்குக் குழந்தை வளர்க்கும் முறைகள் கூடத் தெரியாதே. நான் எவ்விதம் இந்தக் குழந்தையை வளர்க்கப் போகிறேன்? இந்தக் குழந்தைக்கு பசித்தால் அழுமா? அல்லது இந்தக் குழந்தைக்கு பசித்தால் நாம் எப்படிக் கண்டுபிடிப்பது? அப்படியே கண்டுபிடித்தாலும் இந்தக் குழந்தைக்கு அருந்த எதைக் கொடுப்பது? ஆயிரம் கேள்விகள்.
ஆனால் அந்தக் குழந்தை அழவே இல்லை; எதற்கெடுத்தாலும் பொக்கை வாய்திறந்து சிரிப்புதான். ஒரு கட்டத்தில் பெரியாழ்வாருக்கே பயம் வந்தது. இப்படிச் சிரித்துக் கொண்டே இருந்தால் எப்போது இந்தக் குழந்தைக்கு பசிக்கிறது என்றே தெரியாதே என்று. அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்?. குழந்தை அழுவதே பசிக்கிறது என்பதை தெரிவிக்கத்தானே இந்தக் குழந்தை அழாமல் சிரித்துக் கொண்டே இருந்தால் எப்படி அறிவது இதற்கு பசிக்கிறதென்று என்ற யோசித்தார். அந்தக் குழந்தையின் சிரிப்புக்கு என்ன பொருள் என்று பெரியாழ்வார் அறியமாட்டாரா? அறியாதது போல் நடித்தார்.
பாகம் 11
உலகையே மகிழ்விக்க வந்த குழந்தை, அரங்கனையே மகிழ்விக்கவந்த குழந்தை. அரங்கன் மகிழ்ந்தால் அகிலமே மகிழும் என்றுணர்ந்த குழந்தை அழுமா? அழவே இல்லை. அதனால் பெரியாழ்வார் குழந்தைக்கு பசிக்கிறதோ இல்லையோ வேளா வேளைக்கு பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து பால் ஊட்டி வளர்த்தார். தாயுமானவன் என்றால் பெரியாழ்வார் தானே? அன்னைக்கே தாயுமாகி தந்தையுமாகி நிற்கும் நிலை எத்துணை பேருக்கு வாய்க்கும்? பெரியாழ்வாருக்கு வாய்த்தாற் போல்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த மகளை ஒவ்வொரு கணமும் பார்த்துப் பார்த்து ரசித்து வளர்த்தார் பெரியாழ்வார். அகில உலகிற்கும் அன்னையான ஆண்டாளின் அணுக்கத் தொண்டராகவே வாழும் பாக்கியம் பெற்ற பெரியாழ்வார். குழந்தை சிணுங்கினாலே கைவேலைகளை அப்படியே போட்டுவிட்டு பதறி ஓடிப்போய் குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டு என்ன வேணும் என்று கொஞ்சும் தாய்மார்களைப் போல ஒவ்வொரு நொடியும் அரங்கன் கைங்கர்யமும், சேவையும் அதற்கடுத்து குழந்தை ஆண்டாளுக்குச் சேவகமும் அடடா என்னே பாக்கியம்! தந்தைக்கும் தாய்க்கும் சேவை செய்யும் பாக்கியத்தை விட உலகில் வேறு எதுதான் உயர்ந்தது? அவர்களைக் குழந்தையைப் போல் பாவித்துச் சேவை செய்வது எவ்வளவு புண்ணியம்? எங்கெல்லாம் ஒருவன் தன் தாய் தந்தையைக் குழந்தைபோல் நினைத்து சேவை செய்கிறானோ அங்கெல்லாம் ஆண்டாளும் அரங்கனுமே குழந்தைகளாய் வந்துவிடுவார்களே. பர ப்ரும்மும் லோக மாதாவுமே குழந்தைகளாய் வருவதற்கு எப்படிப்பட்ட பாக்கியம் செய்திருக்க வேண்டும் மானுடர்கள் நாம்!
ஆண்டாள் பிறக்கவே இல்லையே… உதித்தாள்! திருவாடிப்பூரத்து ஜெகத்துதித்தாள். ஆண்டாள் பிறந்தாளா இல்லை கிடந்தாள் துளசிமாடத்தருகே அவளாகவே வந்து கிடந்தாள். சூரியன், சந்திரன் எல்லோரும் உதிக்கிறார்கள் பின் நம் கண்ணுக்கு மறைகிறார்கள். அவ்வண்ணமே ஆண்டாளும் விஷ்ணுசித்தர் பெரியாழ்வார் தோட்டத்தில் உதித்தாள்; வளர்ந்தாள்; பெரியாழ்வார் கண்ணுக்கு மறைந்தாள் அரங்கனுக்குள் மறைந்தாள். உதிப்பதும் மறைவதும் எல்லோராலும் முடியுமா?
அது ஒரு சுழற்சி அல்லவா? அப்படி சுழன்று கொண்டே வரும்போது எங்கே அரங்கனைக் கண்டாளோ? யார் அறிவார்! ஆண்டாள் அரங்கனைப் பிடித்தாளோ அல்லது அரங்கன் ஆண்டாளைப் பிடித்தானோ யார் அறிவார்?
பாகம் 12
ஆண்டாள் பிறந்தாளா அல்ல அல்ல உதித்தாள்!
திருவாடிப்பூரத்தில் உதித்தாள் சூரிய சந்திரர் போலுதித்தாள்
வில்லிபுத்தூர் நந்தவனத் துளசிமாடம் தனிலே
பெரியாழ்வார் பெண்ணாய் உதித்தாள் சிறியாழ்வார்
ஆண்டாளாய் உதித்தாள் மாடத்திலுதித்து கூடத்தில்
வளர்ந்தாள் அரங்கனுடன் கூடத்தான் மலர்ந்தாள்!
சுழலுகின்ற செஞ்சுடராய் உதித்தாள் உதித்தாள் உதித்தாள்!
கோ புரத்துக் கண்ணனுடன் கோதையவள் கலந்தாள்
உதிப்பதுவும் மறைவதுவும் ஒரு சுழற்சி என்றால்
அச்சுழலில் அரங்கனுக்கே அச்சாணியாய் இருந்தாள்
அச்சுதன் கண்ணனவன் அரங்கன் மன்னனவன்
அச்சுவையை அறிந்திடவே அகமகிழ்ந்தே கலந்தாள்
பிடித்தவனை ஆண்டாள் அனுதினமும் படித்தாள்
தேன் வடியும் மலர்களையே ஊன் உருக்கித் தொடுத்தாள்
பா வடித்துப் பிடித்தாள் கோபாலனையே பிடித்தாள்
அவளுதித்து வளர்ந்து அலங்கரித்து நிமிர்ந்தாள்
அரங்கனவன் களிகொண்டான் அவன்தோளில் கிளியானாள்
பிடித்துவிட்ட அரங்கனையே மீண்டுமவள் பிடித்திடவே-
தன் தாள் பதித்தாள் ஆழ்வாரைப் பிடித்தாள் ஆழ்வாரே
அறியாமல் அரங்கனைப் பிடித்தாள் மாலை பிடித்தாள்,
திரு மாலை பிடித்தாள் திருமாலைப் பிடித்தாள்.
திருவரங்கன் தாள் பிடித்தாள் அரங்கனே அறியாமல்
அரங்கனையே பிடித்தாள் உள்ளிருந்தே அவள்
உலகையே பிடித்தாள் கள்ளிருக்கும் மலர்ச்சோலை
பெரியாழ்வார் நந்தவனம் உள்ளிருக்கும் துளசி மாலை
பெரியாழ்வார் தோளினிலே பெண்மானாய் வளர்ந்தாள்
உரியவனாய் வந்தரங்கன் அந்தரங்கம் புகுந்தாள்
மாலையென்ன காலையென்ன முழுவதுமாய்ப் பிடித்தாள்
காலையிலும் மாலையிலும் கணப் பொழுதும் நீங்காத
கள்ளியவள் ஆண்டாள் கண்சிமிட்ட நேரமில்லை
கண் கொள்ளா காட்சிதனை கண்டுவிட்ட ஒரு கணத்தில்
ஆண்டவனைப் பிடித்தாள் இமைப்பொழுதும் நீங்காத
இணையுடனே சேர்ந்தாள் அரங்கனையே துதித்தாள்
அவளெங்கே பிறந்தாள்? உதித்தாள். துளசிமகள் தூயமகள்
இளசிலேயே அரங்கன்தனை எண்ணி எண்ணி வாழ்ந்த மகள்-
ஏகாந்த ரங்கனிடம் ஒருசேரக் கலந்த மகள்
பாகம் 13
கள்ளிருக்கும் மலர்களெல்லாம் பூச்சொரியும் நந்தவனம்
தனிலே உள்ளிருந்த துளசி வனம்தனிலே ஶ்ரீவில்லிபுத்தூர்
நந்தவனம்தனிலே பேறு பெற்ற பெரியாழ்வார் கண்டெடுத்த
குழவி இவள் அதில் கண்டு அள்ளிக்கொண்ட ஆண்டாளென்னும்
செண்டு இனம் பூச்சூடி பூவைச் சூடி கொடுத்த பாவை சூடி
பாச்சூடி பாவைச் சூடி கொடுத்த பாவைச் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
துளசிமகள் தூயமகள் இளசிலேய அரங்கனை எண்ணி எண்ணி
வாழ்ந்த மகள் – ஏகாந்த ரங்கனிடம் ஒருசேரக் கலந்த மகள்
கள்ளிருக்கும் மலர்களெல்லாம் பூச்சொரியும் நந்தவனம்
உள்ளிருந்த துளசிவனம் வில்லிபுத்தூர் நந்தவனம்
பேறுபெற்ற பெரியாழ்வார் கண்டெடுத்த குழவி இவள்
அதில் கண்டு அள்ளிக்கொண்ட ஆண்டாளென்னும் செண்டு இனம்
பூவாய் அவதரித்த மலர்க்கோதை செண்டாய் அலங்கரித்து
அருமையாய் வளர்த்த மகள் அரங்கன் திருவடியின்
அருளாலே அவனுக்கே தாயானாள்
பெரியாழ்வார் மறுபடியும் சேயானார்
பாகம் 14
பெரியாழ்வாரின் நிலை சொல்ல முடியுமோ? ஏதோ என்னாலானதைச் சொன்னேன். ஆண்டாளைப் பற்றிச் சொல்ல முடியுமோ ஏதோ என்னாலானதைச் சொன்னேன்,
ஆண்டாளே உன்னைப்பற்றி யாரிடம் சொல்ல
உன்னையன்றி வேறிடம் அல்ல
கண்ணனிடம் நீ செல்ல என்னைத்
தேர்ந்தெடுத்து மகளாய் உருக்கொண்டு
உன் மன்னிடம் சேர்ந்தாய்
உன்னைப்பற்றி யாரிடம் சொல்ல
அரங்கன் நாயகியே உன்னைப் பற்றி
யாரிடம் சொல்ல கண்ணை விற்று
சரித்திரம் சொல்ல என்னை விற்று
பொய்யை வாங்கி என் மனதை விற்று
உன்னை மகளாய் நான் நினைத்தேன்
பேதமை கொண்டேன் நீ என் மகளென்று
உன்னையே நினைந்திருந்து உன்னையே உணர்ந்திருந்து
கனவிலும் நினைவிலும் உன்னையே
நினைந்திருந்து நான் உன்னையன்றி
உன்னைப் பற்றி யாரிடம் சொல்ல தாயே
உன்னைப் பற்றி யாரிடம் சொல்ல
பூச்சூடி பூவைச் சூடிக்கொடுத்த பாவை
சூடிக் கொடுத்த மாலை பாச்சூடி
பாவைச் சூடி பூவைச் சூடிய பூவை
கொடுத்த பாவைச் சூடி ஆண்டாளே
மஹாலக்ஷ்மி உன்னைப் பற்றி
யாரிடம் சொல்ல?
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
ஶ்ரீராமஜெயம்