( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

 

குடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்

தவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது

அதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்

அவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் !

 

அணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது

ஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது

அருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி

ஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை !

 

ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்

அவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்

ஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்

அகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ !

 

நீரில்லா நிலையினிலே நிலம்வறண்டு வீணாகும்

போர்வந்து சேர்ந்துவிடின் பொலிவெல்லாம் மறைந்தொழியும்

பார்செழிக்க வேண்டுமெனில் பரந்தமனம் எழவேண்டும்

ஊரழிக்கும் நினைப்பொழிந்தால் உலகவளம் உயிர்த்துவிடும் !

 

குண்டுமழை பொழிவதனால் குடிதண்ணீர் பாழாகும்

குடிதண்ணீர் இல்லையெனில் குடிகள்நிலை என்னாகும்

வளங்கொழிக்கும் வயலனைத்தும் வறண்டவனம் போலாகும்

நிலமிருக்கும் மாந்தர்நிலை நினைப்பதற்கே பயமாகும் !

 

காடுகள் அழியும் களனிகளும் சேதமுறும்

மாடுமனை அத்தனையும் மண்ணுக்குள் மாய்ந்துவிடும்

கேடுநிலை அத்தனையும் கிடுகிடென வந்துவிடும்

நாடுகின்ற ஆராய்ச்சி நல்வழியை மறந்துவிட்டால் !

 

ஆணவத்தின் வசத்துக்கு ஆராய்ச்சி ஆள்பட்டால்

அகிலத்தின் துன்பமெலாம் அப்பக்கம் தெரியாது

ஆக்கத்தின் பக்கமாய் ஆராய்ச்சி அமைவதுதான்

அகிலத்தில் வெளிச்சம்வர அருந்துணையாய் அமையுமன்றோ !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *