க. பாலசுப்பிரமணியன்

ஒலிஅதிர்வுகளும் கற்றலும்

education-1

கேள்வி அறிவைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் செய்யப்பட்டு வருகின்றன. இதிலிருந்து வரும் பல குறிப்புகள் கற்றலைப் பற்றிய நமது முந்திய கருத்துக்களை மாற்றியும் அவைகளில் பலவற்றுக்கு உயிரூட்டியும் வருகின்றன. உதாரணமாக, பல்லாயிரம் ஆண்டுகளாக ஆசிரியர்களிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் கேள்வி அறிவின் மூலமாகவே  (oral communications) கற்றல் நடைபெற்று வந்ததது. இதில் கேட்கும் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு அவை மூளையில் நினைவாற்றலாக மாறி வாழ்க்கை முழுவதும் தங்கள் பரிமாணங்களை உயிர்ப்பித்துக்கொண்டிருந்தன. கேள்வி  அறிவால் பெறப்படும் அறிவுத்துகள்கள் சில நேரங்களில் சொற்ப காலத்தில் வலுவிழந்து போய்க்கொண்டிருந்தன (volatile memory). சில புதுப்பிக்கப்பட்டு குறுகிய காலகட்டத்திற்கு  தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தன (short-term memory). மற்றும் சில நினைவில் ஆழமாகப் பதிந்து நிரந்தர நினைவாக (Long-term memory)அமைந்து விடுகின்றன. இதைப் பற்றிய ஆரய்ச்சிகள் கேட்டலுக்கும் -நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பினைப் பற்றிய சில உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன.

இதன்படி உணர்ச்சித் தாக்கங்கள் உள்ள உந்துதல்கள் (Emotionally Competent Stimuli) மூளையின் நினைவாற்றல்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும் கற்பவர்களின் நினைவுகள் (memory), அறிவுப் பரிமாணங்கள்(cognitive parameters), செயல்கள் (Skills and actions) மற்றும் பதில்கள் (responses) ஆகியவை இந்த உணர்ச்சித் தாக்கமுள்ள ஒலி உந்துதல்களால் சிறப்புறுவதாகவும் சொல்லப்படுகின்றன. ஆகவே ஒரு ஆசிரியர் ஒரு பாடத்தையோ அல்லது ஒரு கருத்தையோ அல்லது ஒரு விளக்கத்தையோ உணர்ச்சி பூர்வமாக சொல்லிக்கொடுக்கும்பொழுது அவை கற்பவர்கள் நினைவில் ஆழமாகப் பதிவது மட்டுமின்றி அவர்கள் கருத்துக்களிலும் கருத்துக்களின் மேலாண்மையிலும் பெரிய தாக்கத்தை (Behavioural modifications) ஏற்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான செயலாக அமைகின்றது. இதை ஆசிரியர்கள் கருத்தில் கொண்டு தங்கள் வகுப்பறைச் செயல்முறைகளை மாற்றியமைத்தால் அதன் விளைவுகள் பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமையும் என்பதில் சற்றும் ஐயமில்லை,

பல நேரங்களில் ஆசிரியர்கள் கவிதைகள், பாடல்கள், நாடகங்கள் ஆகியவற்றை நடத்தும் பொழுது அதிலுள்ள பாத்திரமாகவே மாறுவதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆங்கிலக் கவிஞர் wordsworth அவர்களின் Daffodils என்ற மலரைப் பற்றிய கவிதையை எங்கள் ஆசிரியர்  நடத்திய பொழுது அந்த மலரைப் போலவே ஆடியதையும், தமிழ் பேராசிரியர் கம்ப ராமாயணத்தில் குகனைப் பற்றிய படலத்தில் குகனாகவே மாறியதையும் நினைவில் கொள்ள முடிகின்றது.

இதனால்தான் வகுப்பறை என்பது ஒரு நாடக மேடை என்ற கருத்தும் நிலவுகின்றது. இங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் கருத்துப் பரிமாற்றத்தில் நடிகர்களாகவும், பாடலாசிரியர்களாகவும், பாடகர்களாகவும் உருவாகின்றனர் என்ற கருத்து பல மேலைநாடுகளில் இன்னும் கருதப்படுகின்றது.

அது மட்டுமல்ல, கேள்வி அறிவு ,ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களிடையே ஏற்படுகின்ற கருத்துக் பரிமாற்றங்களாலும் (Interactive peer learning ) வலுப்படுகின்றது. ஆகவே வகுப்பறைகளிலும் அதன் வெளியிலும் நடத்தப்படும் பாடங்கள் கருத்துக்களின் பரிமாற்றங்களை வலுப்படுத்தும் வண்ணம் சூழ்நிலைகள் உருவாக்கப்படவும் மேம்படுத்தப்படவும் வேண்டும். கற்றலில் இந்த சமநிலை கருத்துப் பரிமாற்றமாகளால் ஏற்படும் நன்மைகளை பற்றி வெகுவாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஒலிவடிவங்கள் எவ்வாறு நமக்குத் தேவையான கருத்தையோ பொருளையோ தருகின்றன என்பது பற்றிய மூளை நரம்பியல் ஆராய்ச்சிகள் கருத்துத் தெரிவிக்கின்றன. பொதுவாக ஒலி அலைகள் காதுகளின் செவிப்பறைகளைத் தாக்கும் பொழுது அவை நுண்ணதிர்வுகளாக மட்டும் இருக்கின்றன. காதுகளுக்கு அதன் மொழி, பொருள்  மற்றும் மற்ற கருத்து வண்ணங்கள் தெரிவதில்லை.

ஒலி அதிர்வுகள் தரும் சுருதி, குரல், வளம், ஏற்ற தாழ்வுகள் போன்றவை காதிலிருந்து நரம்புகள் வழியாக மூளையின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவை பரிசீலிக்கப் பட்டு, மூளை நினைவுகளில் உள்ள பழைய அறிவுத்துகள்களோடு ஒப்பிடப்பட்டு நமக்கு புலப்படுகின்றது. அப்பொழுது அந்த ஒலி எந்த மொழியைச் சார்ந்தது, எப்படி ஒலிக்கின்றது, அதன் உட்பொருள் என்ன, எந்த நோக்கத்தில் சொல்லப்படுகின்றது, எப்படிப்பட்ட உணர்வுகளோடு அது இணைந்து வருகின்றது என்ற பல கருத்துக்களை மூளை நமக்குத் தருகின்றது. இந்த கருத்துக்கள், உணர்வுகள் ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்டவை. ஆகவே எந்த இரு நபர்கள் கேட்கும் வார்த்தைகளுக்கான ஒரே பொருளை ஒரே மாதிரி ஒரே தன்மையில் பெறுவது என்பது  ஒரு விந்தையான செயல். இந்த நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருப்பதால் ஒரே நிகழ்வை இரு மாணவர்கள் வெவ்வேறு விதமாக பொருள் கொள்ள வாய்ப்புக்கள் உண்டு. இது கற்றலில் சமநிலையை ஏற்படுத்துவதற்குத் தடங்கலாக இருக்கவும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகவேதான் ஆசிரியர்கள் ஒரே கருத்தை பல விதமாக எடுத்துச் சொல்லும் பொழுது அதன் விரிவாக்கங்கள் புரிதலுக்கும் அறிதலுக்கும் இடையே உள்ள தூரங்களை குறைக்க உதவும்.

மூளை நரம்பியல் மற்றும் கற்பியல் பற்றிய வல்லுநர்கள் பொதுவாக “அர்த்தங்கள் கொள்வதை ” (Meaning Making) மூளையின் ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதுகின்றனர். இந்தச் செயலுக்கு மூளையின் பல பகுதிகள் பல விதங்களில் ஒருங்கிணைந்து ஒத்துழைத்துச் செயல்படுகின்றன. இந்தச் செயலில் மூலையில் உள்ள “கண்ணாடி நியூரோன்களின் ” (mirror neurons) பங்குகள் பற்றியும் ஆரய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இதைத்தவிர, சொல்லப்படும் வார்த்தைகள் எவ்வாறு மூளையில் தாக்கம் ஏற்படுத்தி செயல்களை பாதிக்கின்றன, செயல்களை ஊக்கப்படுத்துகின்றன, செயல்களில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு உதவியாக இருக்கின்ற்ன என்பது பற்றிய ஆராய்ச்சி “நரம்பியல் மொழி நிரலாக்கங்கள் ” *(Neuro -Linguistic Programing) என்ற தலைப்பின் கீழ் உலகத்தின் பல நாடுகளில் செய்யப்பட்டு பயிற்சியளிக்கப் பட்டு வருகின்றது.

ஆகவே கற்றலில் கேட்டல் என்பது ஒரு தலையாய செயல். இதுபோன்று படித்தல் என்ற செயல் எவ்வாறு கற்றலுக்கு உதவுகின்றது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கற்றல் ஒரு ஆற்றல் 78

  1. உலகமே நாடக மேடை என்பது ஷேக்ஸ்பியரின் கருத்து. வகுப்பறை நாடக மேடையாக புதிய கோணத்தில் சித்திரத்த நண்பர் திரு.க, பாலசுப்ரமணியம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நரம்பியல் மொழி நிரலாக்கங்கள் ” *(Neuro -Linguistic Programing) என்ற தலைப்பின் கீழ் உலகத்தின் பல நாடுகளில் செய்யப்பட்டு பயிற்சியளிக்கப் பட்டு வருகின்றது என்ற தகவலுக்கும் நன்றி. வணக்கம்.
    நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *