பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

18471505_1321588284562034_1389758775_n

126194543@N03_rஅனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.05.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி (112)

  1. மிஸ். இந்தியா !

    சி. ஜெயபாரதன், கனடா

    உலக
    அழகிப் போட்டியில்
    இதுவரைக்
    கலந்து கொள்ளாத நான்தான்
    மிஸ். இந்தியா !
    என்னுடலில் ஓடுவது
    யுக யுகமாய்ச்
    செந்நிறக் குருதி அல்ல !
    கறுப்பு ரத்தம் !
    சூரிய பகவான்
    கரியைப் பூசிக் கருப்பராகி
    உரிமை பறிபோய்
    ஒதுக்கப்பட்ட குடிமக்கள்
    நாங்கள் !
    கழிப்பறையே எமது
    இருப்பறை !
    கழுவிச் சுத்தம் செய்வதெம்
    பொறுப்பு !
    தெருக்குப்பை அள்ளுவான்
    என் புருசன் !
    பள்ளிக்கூட முற்றத்தில்
    செருப்பு தைப்பான்
    அருமை மகன் !
    குபேரர் கொடுக்கும் பிச்சை
    அமுதில்
    கும்பி நிரப்பும்
    குசேலர் நாங்கள் !
    அனுதினம்
    கிடைக்கும் கூலியை மதுக்
    கடையில் கொட்டி
    குடி வெறியில்
    அடிப்பான் கட்டிய புருசன் !
    குடிமக்கள் எங்களுக்கு
    வீட்டிலும் சிறை !
    விடுதலை
    நாட்டிலும் சிறை !

    ++++++++++++++

  2. குழந்தைச் செல்வம்

    ஏழையெங்கள் இல்லத்திலே
    வாழைக்குறுத்து முளைத்ததுவே
    பாழுமெங்கள் வாழ்வினிலே – செல்வ
    பேழையாய் வந்துச் சேர்ந்ததுவே

    தொட்டிலில் இட்டிட வசதியில்லை
    கட்டிலில் போட்டிட வாய்ப்புமில்லை
    கட்டிய துணிக்கு மாற்றுயில்லை – இருந்தும்
    மட்டிலா மகிழ்ச்சிக்குங் குறைவுமில்லை

    எட்டு மாடி வீடு கட்டி-அதில்
    பட்டு விரிப்போடு குளிரூட்டி
    தொட்டு நிலா காட்டி – தினம்
    ஊட்டிடச் சோறு கிட்டுவதில்லை

    இருந்தும்…

    வெட்டவெளியே வீடாகும்
    கொட்டும் சூரியன் விளக்கேற்றும் – அன்னை
    வேர்வைத்துளி பன்னீர்த் தெளிக்கும் – அவள்
    சேலை தினமும் தூளி கட்டும்

    இலவம் பஞ்சில் செய்த மெத்தை
    இல்லை என்கிற போதிலுமே
    உலவும் தென்றல் வாசல் வந்து
    குளிரும் சாமரம் வீசி நிற்கும்

    பட்டு நிலா பாய்விரிக்கும்
    வெட்டவெளி உண்டு-அது
    நித்தமிங்குக் காட்டும் பல
    வித்தைகளும் உண்டு

    கட்டி, இன்பங்கொட்டி –
    இதழ்தொட்டு முத்தமிட்டு
    விளையாடபெரும் சுற்றமுண்டு; அவர்
    காட்டும் அன்பும் நன்று

    மாடி வீடும் மெத்தையணையும்
    காட்டிடாத நிம்மதியை
    வாடி நிற்கும் காலந்தன்னில் – அன்னை
    மடியின் அன்பு சுகந்தந்திடுமே!!!

  3. நம்பிடு நங்கையரை…

    வேலையாய் வெளியே சென்றாலும்
    வெட்டியாய்ப் பொழுதைக் கழித்தாலும்,
    நாலுந் தெரிந்த ஆண்மகனும்
    நம்பிட வேண்டும் பெண்ணினத்தை,
    காலைச் சுற்றிடும் பிள்ளைகளை
    கண்ணும் கருத்துமாய்க் காப்பதெல்லாம்
    வாலைக் குமரி வந்தமனையாள்
    வணங்குந் தாய்போல் வனிதையரே…!

    -செண்பக ஜெகதீசன்…

  4. ஆதலினால் சிரித்திருப்போம்

    வயிற்றுப் பசிக்கு இங்கே சோறில்லை!
    பிள்ளைச் செல்வத்திற்கு இங்கே குறைவில்லை!
    மண்ணில் பிறந்த காரணம் இன்னும் எங்களுக்கு
    விளங்கவில்லை!
    பசியைத் தவிர எங்களுக்கு பக்கத் துணை என்று
    யாருமில்லை!
    பசியை ருசித்ததால் கண்ணுறக்கம்
    கொண்டதில்லை !
    கண்ணுறக்கம் மறந்ததால் கனவுகள்
    கண்டதில்லை!
    ஆதலினால் கனவில் கூட வசதிகள்
    பார்த்ததில்லை!
    ஏழையாய் நாங்கள் பிறந்ததற்கு என்ன காரணம்
    தெரியவில்லை!
    இறைவா உந்தன் கருணைப் பார்வை இன்று வரை
    எங்கள் மேல் விழவில்லை!
    இருந்தும் நாங்கள் அழவில்லை!
    என் பெண் பெற்ற பெண்ணே!
    பொன்னாய் நீ கிடைத்தாய் !
    ஆதலால் நாங்கள் அழவில்லை!
    ஒருவருக்கு உணவில்லை என்றாலும்
    உலகத்தை அழிக்கச் சொன்ன பாரதி
    வழி நடப்பாய!
    ஆதலால் நாங்கள் அழவில்லை!
    இன்று உன்னோடு புதிதாய் பிறந்தோம்!
    ஆதலால் நாங்கள் அழவில்லை!
    புன்னகை இனி பெண்களுக்கு
    பொன் நகையாய் ஆகட்டும்!
    அழுகை இனி அருங்காட்சியகம்
    போகட்டும்!

  5. உழைக்கும் பெண்கள் உலகின் கண்கள்..!
    ======================================

    பெண்கள் முன்னேற்றமானது பேச்சள வில்தானோ
    கண்கள் கசங்காத நாளில்லை..!

    பணிக்குச் சென்றால்தான் எம்பசி தீருமென்று
    பலவித பணிக்கும் செல்கிறோம்..!

    கல்மண் சுமந்து பெருங்கட்டிடங்கள் முருவாக
    நெல்மணி வயலிலுழைத்தும் வாழ்கிறோம்..!

    துவைப்பதும் சுத்தம் செய்வதும் பாத்திரம்
    துலக்குவது மெங்களிதர வேலையாகும்..!

    இடுப்பிலும் தலையிலும் இன்னலுற கைவண்டி
    இழுக்கும் வேலைகூட செய்வோம்..!

    அண்டை அயலூருக்கு தினமுழைக்கச் செல்லும்
    அவலத்தையும் நாங்கள் பொறுப்போம்..!

    நாயுடனே நடைபயிலும்நகர நங்கைவாழ் மத்தியிலே
    வாயுடன் வயிற்றிற்கும் போராடுகிறோம்.!

    சுகம்காணும் எண்ணமுடன் சும்மாயில்லை நாங்கள்
    சோதனைகள் ஏற்பதற்கே பிறந்தவரே..!

    பிள்ளை சுமந்துகொண்டு உழைக்கும் வர்க்கமென
    வெள்ளை மனக்கறுமேனி மாந்தர்கள்யாம்..!

    முடமாகி வாழ்வில் முடங்காமல் வறுமையகல
    கூடையேந்தி கூவிபலவிற் கவும்செய்வோம்..!

    கல்யாணமானாலும் உழைத்து உழைத்து மனம்
    கல்லாகிய வர்க்கம் தானெனினும்..!

    பற்றாக்குறை கூலியில் பகல்பூரா உழைத்துவிட்டு
    பற்றுடன் நல்லுறவோடுதான் வாழுகின்றோம்..!.

    பெண்ணாய்ப் பிறந்தது உழைத்து மடிவதற்கேவெனும்
    எண்ணத்துடன் வாழ்வதுதான் எங்கள்நிலையோ..!

    நலிந்தால் வாழ்விலையென உழைப்பின் உயர்வை
    மெலிந்தயெங்கள் தேகமதைச் சொல்லுமென்பதை..

    களைபோக்கு சிறுபயன் விளைக்க இவர்கள்
    உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
    ஒவ்வொரு துளியிலும் கண்டேன் – இவ்வுலகு
    உழைப்பவர்க்கு உரியதென் பதையே..!

    பாவேந்தர் பாரதிதாசன் உழைப்பின் உயர்வைப்
    பக்குவமாக பாருக்கு உணர்த்தியதையறிவீர்..!

  6. கொடிது, கொடிது, இளமையில் வறுமை

    அதிலும், ஏழையாகப் பிறப்பதே கொடுமை

    ஏழை என்று பிறந்தாலே, உழைக்கும் உழைப்பாளி

    கையும்,காலுமே உதவி, அது தருமே தினக்கூலி !

    வயிற்றுப்பசி குறைவானாலும், தீய பழகத்திற்கு குறைவில்லை,

    இன்றோ, பசியை போக்க, தண்ணீர்கூட குடிக்க கிடைக்கவில்லை

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது வெறும் பேச்சு

    உழைத்து, உழைத்து எங்கள் உடம்புதான் வீணாய் போச்சு !

    தெரு கூட்டுவதும் , கழிப்பறை சுத்தப்படுத்துவதும் எங்கள் வேலை,

    கணவன்,மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் வெவ்வேறு வேலை ,

    காலை பசியாற, அம்மா உணவகமே, காலை உணவு

    பசி போக்க அரசு காட்டும் திட்டத்தில் ஓர் நல வாழ்வு !

    ஆளுக்கொரு வீடு, திட்டம் மறைந்து, மரத்தடியே வீடானது

    எங்கள் குழந்தைக்கு சேலைத் தொட்டில் கட்டும் மரத்தடியானது

    நிலா வெளிச்சமும், மரக்கிளைகளும் கையசைத்துச் சிரிக்கும்

    இரவில் தென்றல் காற்றே சாமரம் வீசி நிற்கும் !

    ஏழையின் குடிசையில் மகிழ்ச்சிக்கு என்றும் அளவில்லை

    பெற்ற பிள்ளைகளுக்கும் என்றும் குறைவில்லை

    குடும்ப கட்டுப்பாடு விளம்பரம் பார்க்க நேரமில்லை

    ஏனோ எங்கள் வாழ்க்கைத் தரத்தினை நினைத்து பார்ப்பதில்லை !

    ரா.பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *