திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (9)
க. பாலசுப்பிரமணியன்
போதுமென்ற மனமே…
“போதும் என்ற மனமே புன்செய்யும் மருந்து” என்பது பழமொழி. ஒரு மனிதனுக்கு எந்தத் தேவையையும் தனக்கு வேண்டிய அளவு மட்டும் பெற்றுக் கொண்டு, பின் “இது போதும், இதற்கு மேல் எனக்குத் தேவையில்லை” என்ற மனம் வருமானால் அவனுக்கு வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. ஆனால் தேவைகளுக்கு மேலும் வேண்டி நிற்பானேயாயில் அவன் தேவைகள் என்றும் பூர்த்தி அடைவதில்லை. இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்றும், இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்றும் மனம் சஞ்சலத்தில் உழன்று வேதனைக்கு வித்திடுகின்றது.
வாழ்க்கையில் ஒரு நல்ல செல்வ நிலையில் இருப்பவனும். இல்லாத பாட்டுப் பாடி துயருறுகின்றான். ஒரு மன நோயாளியைப் போல் வாழ்கையை வாழுகின்றான்.
இந்த ஆசையினால் ஏற்படும் துன்பத்திலிருந்து நம்மைக் கத்தட்டுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வள்ளுவரோ கூறுகின்றார்:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
ஒரு முறை அரசனைப் பார்க்க நினைத்த ஒரு சாது அரசனைச் சந்தித்தால் தனக்கு வேண்டிய பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் . அரண்மனையை நோக்கிச் செல்லுகின்றார். அங்கே அந்த அரசர் பிரார்த்தனையில் அமர்ந்திருக்கின்றார். அந்தப் பிரார்த்தனையின்போது அவர் இறைவனிடம் தனக்கு மேலும் செல்வங்களை வாரி வழங்குமாறு வேண்டுகின்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த சாது மௌனமாகத் திரும்பி விடுகின்றார். பிரார்த்தனையை முடித்த அரசர் அந்த சாதுவைப் பார்த்து “என்ன வேண்டும்? ஏன் திரும்பிச் செல்லுகிறீர்கள்?” என்று கேட்கின்றார்.
அந்த சாது அரசனைப் பார்த்துச் சொல்கின்றார். “நான் ஏழை. உங்களிடம் உதவி கேட்டுச் செல்லலாம் என்று வந்தேன். ஆனால் இங்கு என்னை விட ஒரு பெரிய ஏழையைக் கண்டேன். ஆகவே நீங்கள் யாரிடம் உதவி கேட்கிறீர்களோ நானும் அதே இறைவனிடமே உதவி கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிலளிக்கிறார்.
ஆகவே நம்மில் பலரும் நம்மிடம் தேவைக்கு அதிகமான பொருள்கள் இருந்தாலும் ஒரு பிச்சைக்கராரைப் போல் வாழ்கின்றோம். இந்த நிலையை திருமூலர் மிக அழகாக விளக்குகின்றார்
புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட்டார்களும் அன்பிலரானர்.
கொடையில்லை கோளில்லை கொண்டாட்டமில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின்றார்களே.
எல்லாம் இருந்தும் தனக்கும் எதுவுமில்லையென நினைத்து வாழ்பவர்கள் ஒரு நடைப்பிணத்திற்கு சமமானவர்கள் என்று அறிவுறுத்துகின்றார் ஆகவே, போதுமென்ற மனமே ஒருவனுக்குச் செல்வச்சிறப்பைக் கொடுக்கின்றது. இதைவிட ஒரு அழகான அறிவுரையை நாம் வேறே எங்கு கேட்க முடியும்?
இதே கருத்தை தன் உள்ளத்தில் நிறுத்தி நிலையற்ற வாழ்விற்க்காக ஏங்கும் மக்களைப் பார்த்த பட்டினத்தாரோ வருந்துகின்றார்
நீர்க்குழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேஎண்ணிப்
பாக்களவா மன்னம் பசித்தோர்க் களியாமல்
போர்க்களெம தூதன் பிடித்திழுக்கு மப்போது
ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.
எவ்வாறு வேண்டாமையை நாம் வளர்த்துக்கொள்ள முடியும்? அதனால் பயன்தான் என்ன? அதனால் நமக்கு அமைதியும் இன்பமும் கிடைக்குமா? இத்தனை கேள்விகளுக்கும் விடையாக அமைகிறது வள்ளுவரின் இந்தக் குறள் :
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.
(தொடரும்)