பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்தாலி

முனைவர் சுபாஷிணி

உலக அதிசயங்களில் ஒன்று. சரிந்து விழுந்து நொறுங்கி விடுமோ எனப் பலரும் நினைத்துத் திகைக்கும் கட்டிடம் என்று அடையாளம் காணப்படும் பீசா கோபுரம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை.

1

பீசா சாய்ந்த கோபுரம் அடிப்படையில் ஒரு மணிக்கூண்டு என்று தான் சொல்ல வேண்டும். பீசா நகரின் தேவாலயத்தின் ஆலய மணிகள் கட்டப்பட்ட கூண்டு தான் இது. கி.பி.1152ம் ஆண்டில் பீசா தேவாலயத்தின் கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டு கி.பி.1363ம் ஆண்டில் நிறைவு பெற்றது. இந்தத் தேவாலயத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, அதன் மணிக்கூண்டு உள்ள இந்த பீசா சாய்ந்த கோபுரம், அதன் சாய்வான கட்டிட அமைப்பிற்காகவே உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

2

பீசா சாய்ந்த கோபுரத்தின் அடித்தளத்தில் தான் பீசா கோபுர அருங்காட்சியகப் பகுதி இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் இந்தக் கோபுரத்தின் கட்டுமான விபரங்களை அளிக்கும் ஒரு அருங்காட்சியகம் மட்டுமே. இச்சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானப்பணிகள் தொடர்பான விபரங்களும் குறிப்புக்களும் புகைப்படங்களாகவும் விபரக்குறிப்புக்களாகவும் இப்பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் இக்குறிப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

3

கோபுரம் சாய்ந்துகொண்டிருப்பதை பார்ப்போருக்கு அதற்குள் மனிதர்கள் சென்று வரலாமா ? அப்படிச் செல்லும் போது சாய்ந்த கோபுரம் சாய்ந்து விடுமா? என்பது போன்ற சந்தேகங்கள் எழலாம்.ஆனால் நாம் அஞ்சத்தேவையில்லை. பீசா சாய்ந்த கோபுரத்தின் உள்ளே சென்று மேல் மாடி வரை நடந்து சென்று அங்கிருந்து எழில் மிகும் பீசா நகரைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்து மகிழலாம். இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தேவாலயத்தைக் கட்டியபோது, அதன் பின்னால் இருப்பது போல இந்த மணிக்கூண்டு கட்டிடத்தை அமைத்தனர். கட்ட ஆரம்பித்தபோது அடித்தளம் மென்மையானதாக இருந்தமையால் ஒரு பக்கம் தாழ்ந்த நிலையில் கட்டிடம் இறங்கிவிட்டது. கோபுரத்தைக் கட்டி முடித்தபோது, அதாவது கி.பி.13ம் நூற்றாண்டில் இந்தக் கோபுரம் இன்று நாம் பார்ப்பதற்கும் அதிகமாகச் சாய்ந்த நிலையில் இருந்தது. 20ம் நூற்றாண்டிலும் கடந்த நூற்றாண்டிலும் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதன் வழி இந்தக்கட்டிடத்தை ஓரளவு நிமிர்த்தியிருக்கின்றார்கள். ஆனாலும் இன்றும் இது சாய்ந்துதான் இருக்கின்றது. இந்தத் தன்மையே இதற்குத் தனிச்சிறப்பையும் அளித்திருக்கின்றது எனலாம்.

4

ஒரு பக்கம் சாய்ந்த வகையிலிருப்பதால் சாய்ந்த பக்கம் 55.86 மீட்டர் உயரமும் நேராக இருக்கும் பக்கத்திலிருந்து 56.67மீட்டர் உயரமும் கொண்டது பீசா கோபுரம். கோபுரத்தின் மொத்த எடை 14,500 மெட்ரிக் டன் ஆகும். தற்சமயம் இதன் சாய்ந்தபகுதி 3.99 பாகைச் சரிந்த வகையில் உள்ளது.

இந்தக் கோபுரத்தை வடிவமத்த கட்டிடக்கலைஞர் யார் என்பதில் ஆய்வாளர்கள் மத்தியில் சில குழப்பங்கள் இருந்தன. டியோட்டிசால்வி (Diotisalvi) என்ற கட்டுமானக் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கிபி.12ம் நூற்றாண்டு அரிய கலைப்படைப்புதான் இந்த பீசா கோபுரம் என்பது ஆய்வுகளுக்குப் பின்னர் நிரூபணமானது. பீசா நகரிலிருக்கும் சான் நிக்கோலா கட்டிடத்தையும் இங்கிருக்கும் பாப்டிஸ்ட்ரியையும் வடிவமைத்தவரும் இவரே. கி.பி. 1173ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தான் முதலில் இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கி.பி. 1198ம் ஆண்டில் இக்கோபுரம் கட்டப்பட்டு முதல் ஆலயமணி கோபுரத்தில் பொருத்தப்பட்டது. கி.பி. 1272ம் ஆண்டில் கியோவான்னி டி சிமோன் என்ற கட்டுமானக் கலைஞரின் மேற்பார்வையில் கட்டுமானப் பணி மேலும் தொடரப்பட்டது. ஆறு தளங்களைக் கடந்து ஏழாவது தளத்தையும் கட்டு முடித்து இந்தக் கோபுரம் 1319ம் ஆண்டில் இன்றிருக்கும் வடிவத்தைப் பெற்றது. கீழ்த் தளத்திலிருந்து மேல் தளம் வரை செல்ல 251 படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறுகலான பளிங்குப்படிக்கட்டுக்களில் ஏறித்தான் ஒவ்வொரு தளமாகச் சென்று கண்டு வரமுடியும்.

5

இன்றைய நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வந்து கூடுகின்றனர். ஆண்டில் 365 நாளும் இங்குச் சுற்றுப்பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். மிக அதிகமாக உலக மக்களால் வந்து பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்லப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று இது என்றால் அது மிகையல்ல. பீசா கோபுரத்தின் உள்ளே சென்று வரக் கட்டணம் கட்டி டிக்கட் பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களை மட்டுமே காவல் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கின்றனர். கோபுரத்தின் அளவு சிறியதாக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

இந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்க இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக கட்டுமானப் பணிகள் நடந்தன என்பதை நினைத்துப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கின்றது. இத்தாலியின் பீசா நகருக்குச் சிறப்பு சேர்க்கின்ற ஓர் அம்சம் என்று மட்டுமில்லாமல், இத்தாலிக்கும் ஒட்டு மொத்த ஐரோப்பாவிற்கும் புகழ் சேர்க்கும் சிறப்புச் சின்னமாக பீசா சாய்ந்த கோபுரம் திகழ்கின்றது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *