எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் அவுஸ்த்திரேலியா 

unnamed
எங்கள்கவி கண்ணதாச
என்றும்நீ வாழுகிறாய்
தங்கநிகர் கவிதந்த
தமிழ்க்கவியே நீதானே

தங்கிநிற்கும் வகையினிலே
தரமிக்க கவிதைதந்து
எங்களுக்கு அளித்தவுன்னை
எம்மிதயம் மறந்திடுமா

பொங்கிவரும் கடலலைபோல்
புதுப்புதிதாய் பாட்டெழுதி
எங்கும்புகழ் பரப்பியதை
எம்மிதயம் நினைக்கிறதே

தங்கத் தமிழ்மகனே
தரமான தமிழ்ப்புலவா
எங்குநீ சென்றாலும்
எல்லோரும் உனைமறவோம் !

கவிச்சிங்கம் உனக்காக
பலசங்கம் எழுந்துளது
கவிபாடி கவிபாடி
கவிஞரெலாம் போற்றுகிறார்

புவிமுழுதும் உன்புகழோ
பொலிந்தெங்கும் இருக்கிறது
கவியரசே கண்ணதாச
காலமெலாம் வாழுகிறாய் !

நீபாடாப் பொருளில்லை
நீயெடுக்கா உவமையில்லை
தாய்த்தமிழே உன்னிடத்தில்
சரண்புகுந்து இருந்திடுச்சே !

களைப்பெமக்கு வந்தாலும்
கவலையெமைச் சூழ்ந்தாலும்
கண்ணதாசா உன்பாட்டே
கைகொடுத்து நின்றதையா !

வைத்தியர் முதற்கொண்டு
நோயாளி யாவருக்கும்
வரமாக உன்பாட்டே
வாய்த்ததை நாம்மறக்கமாட்டோம் !

அர்த்தமுள்ள கருத்துகளை
அள்ளித்தந்த பெருங்கவியே
ஆண்டாண்டாய் உன்புகழை
அனவருமே போற்றிடுவோம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *