அவள் ஒரு மாதிரி
அருண் காந்தி
வெட்டிப் பேச்சு தெரியாது
வீண் அரட்டை பிடிக்காது
அவளுக்கு.
நால்வர் கூடிப் பேசினாலும் தெரியாது
தன்னை சாடிப் பேசினாலும் புரியாது.
கடகடவென பேசத் தெரியும்
கலகலவென சிரிக்கத் தெரியும்.
விறுவிறுவென நடக்கத் தெரியும்
துருதுருவென இருக்கத் தெரியும்.
உறுதியாய் இருக்கத் தெரியும்
உண்மையாய் வாழத் தெரியும்.
கனவேதுமின்றி கண் தூங்குகிறாள்-அவள்
துணையேதுமின்றி கண் தூங்குகிறாள்.
தானாகவே பசித்து வாழ்கிறாள்
தனக்காகவே புசித்து வாழ்கிறாள்.
தன்னந் தனியே தனித்து வாழ்கிறாள்-அவள்
சிலருக்கு முன்மாதிரியாய் முயன்று வாழ்கிறாள்…
ஆனால் ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்
‘அவள் ஒரு மாதிரியாம்’…!