விவேக் பாரதி

 

என் கல்லூரியில் இன்று இணைந்திருக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த(இரண்டாமாண்டு) மாணவனான நான் மனதாரப் பாடிய வரவேற்புக் கவிதை….

இளமை கொண்டவர்கள் வாழ்கவே – வாழ்கவாழ்க
இளமை கொண்டவர்கள் வாழ்கவே !
வளமை ஆக்கவந்த மக்களாம் – வாழ்கவாழ்க
வலிப டைத்தவர்கள் வாழ்கவே !

கனவு காணுங்கண்கள் வாழ்கவே – உயருதற்குக்
கடமை ஆற்றுங்கைகள் வாழ்கவே !
மனதில் அச்சமற்ற வீரர்கள் – பூமியெங்கும்
மணம்ப ரப்பிநீடு வாழ்கவே !

வேட்கை கொண்டநெஞ்சர் வாழ்கவே – சூழுகின்ற
வேத னையெரித்து வாழ்கவே !
பாட்டி சைக்ககுமிதழ்கள் வாழ்கவே – கல்விகற்று
பாரு யர்த்தும்வர்க்கம் வாழ்கவே !

காதல் பேணுமக்கள் யாவரும் – இன்பமுற்று
கவிதை போலமண்ணில் வாழ்கவே !
நீதி நேர்மைகொண்டு வாழ்ந்திடும் – இளைஞரென்றும்
நீடு வாழ்கவாழ்க வாழ்கவே !

எச்ச ரிக்கைகொண்ட மானுடர் – நல்லவார்த்தை
எழுத மண்ணில்நன்கு வாழ்கவே !
மெச்சு தற்குமுரிய சக்தியாம் – இளைஞரென்னும்
மேன்மை யாளர்வாழ்க வாழ்கவே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *