9/11: முனை!
அண்ணாகண்ணன்
திடுக்கென்றொரு கனாதோன்றுதே – விரி
திசைக்கொன்றென வினாதோன்றுதே!
நடுக்காட்டிலும் ஒளிபூக்குதே! – விதை
நடும்போதிலே வனம்வாழுதே!
பழிவாங்கவே பலிவாங்கினார் – திருப்பிப்
பழிவாங்கவே பலியாகினார்!
குழிபறித்தவர் குழிக்குள்ளே – அவரைக்
குறிவைத்தவர் சுழிக்குள்ளே!
தடம்மாறியோர் தலைவீழ்த்தலாம் – ஆனால்
தலைவீழ்வதால் தடம்மாறுமோ!
முடச்சிந்தனை முடிப்பாயடா – உயர்
முழுச்சிந்தனை முகிழ்ப்பாயடா!
கணைவிட்டவர் கண்ணீர்விட்டார் – சிலர்
கண்ணீரதிலும் கப்பல்விட்டார்!
துணைசேர்த்தவர் இணையற்றவர் – நீ
துணிந்தேகினால் முனைமுந்தலாம்!
படமானவர் பாடமாகலாம் – மனப்
பாடங்களால் நடமாடலாம்!
சடமானவர் திடமாகலாம் – எந்தச்
சந்தர்ப்பமும் உவந்தேற்பமே!
===============================
படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org
நல்ல கவிதை!
ஆனால்……….
கண்கள் காண்பதும், செவிகள் கேட்பதும் உண்மையில்லை!
புலன்களைப் புரட்டிப் போடும் புல்லர்கள் இருக்கும் வரை,
ஒரு முறை, இரு முறை அல்ல ஆயிரம் முறையும் அல்ல
ஐம்பதாயிரம் முறை எச்சரிக்கை அவசியம்!
//குழிபறித்தவர் குழிக்குள்ளே – அவரைக்
குறிவைத்தவர் சுழிக்குள்ளே!
தடம்மாறியோர் தலைவீழ்த்தலாம் – ஆனால்
தலைவீழ்வதால் தடம்மாறுமோ!//
அருமை….. சூடான, சுவையான சொல்லம்புகள். சிந்தனையைத் தூண்டும் சிதறாத எண்ண அலைகள்! வாழ்த்துகள் திரு அண்ணாகண்ணன்.