குறளின் கதிர்களாய் …(176)
விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னோட்டன்றோ வன்கண் ணவர்க்கு.
-திருக்குறள் -775(படைச்செருக்கு)
புதுக் கவிதையில்…
பகைவரைப் போர்க்களத்தில்
சினங்கொண்டு நோக்கிய
கண்கள் நோக்கி
வேலெறிந்தாலும்,
கண்ணிமைத்தல் களங்கமென்று
எதிர்நோக்குவர்,
படைச்செருக்குமிக்க வீரர்…!
குறும்பாவில்…
சினந்த கண்கள் நோக்கிவரும் வேலுக்காகக்
கண்மூடார் களங்கமென்று,
படைத்திறன் மிக்க போர்வீரர்…!
மரபுக் கவிதையில்…
சினந்து களத்தில் போராடும்
சிறந்த வீரர் கண்ணோக்கி
கனத்த வேல்தான் வந்தாலும்,
கண்ணை மூடுதல் களங்கமென்றே
மனத்தில் நிறைந்த வீரத்துடன்
மானம் காக்கும் செருக்குடனே
தனது கண்ணை மூடாத
திறமை தன்னைக் காண்பீரே…!
லிமரைக்கூ..
வீரச்செருக்கைப் பாரீர் போரில்,
சினந்தகண்ணைச் சிறிதும் மூடாவீரர்
எறிந்தவேல் வந்தாலும் நேரில்…!
கிராமிய பாணியில்…
பாருபாரு படச்செருக்கப்பாரு,
பட்டாளத்து வீரனோட
படச்செருக்க நல்லாப்பாரு..
கோவத்தில தெறந்தகண்ண
கோல்லப்போற வேல்வந்தாலும்
கொஞ்சமா மூடுனாலும்
கொறச்சலுண்ணு,
கொஞ்சங்கூட மூடாத
தெறமிக்க வீரனப்பாரு..
பாருபாரு படச்செருக்கப்பாரு,
பட்டாளத்து வீரனோட
படச்செருக்க நல்லாப்பாரு…!
-செண்பக ஜெகதீசன்…