பொருள் ஒன்று, பயன் வேறு
ரா.பார்த்தசாரதி
உலை அரிசிக்கு தெரிவதில்லை – அது
உருமாறி பலரின் பசியாற்றப் போவது!
ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை – அது
அரைபட்டு பின் அடுப்புக்கு போவது!
அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை – அது
மங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!
வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை – அது
சந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!
ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை – அது
ஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது!
அரிசி ஒன்று தான் – ஆனால்,
பயன் வேறு வேறு!
மலர்கள் ஒன்று சேர்ந்து திருமண மாலையாகிறது
மலர்கள் சிதறி சவ ஊர்வலத்தில் மிதிபட்டு பாழாகிறது !
மாவிலை தோரணமாகி கல்யாண வீட்டில் தொங்குகிறது
மாவிலை காய்ந்தால் சருகாகி ,எருவாகி பூமிக்குள் அடங்குது !
தென்னை மரம் சுவையான இளநீர் தந்து தாகம் தீர்க்கிறது
அதன் ஓலையோ சவத்திற்கு படுக்கையாகிறது !
வாழ்க்கை ஒன்று தான் – அது
வாழ்பவனையும், வாழும் விதத்தையும் பொறுத்தது!