(  எம் .  ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

 

ஆன்மீகக் கொள்கைதனை அரவணைக்கும் பாரதமே

அஹிம்சையினை உள்ளுணர்வாய் ஆக்கிநிற்கும் பாரதமே

அகிலத்தில் பலநிலையில் வளர்ந்துவரும் பாரதமே

ஆனந்த சுதந்திரத்தை அமுதமெனக் காத்திடுவாய் !

 

பலபேரின் கண்ணீரால் எழுச்சிபெற்ற பாரதமே

பலபிரிவு மக்களையும் இணைத்துநிற்கும் பாரதமே

நிலம்மீது பலசண்டை நிகழாமல் இருப்பதற்காய்

பலநீதி இலக்கியங்கள் படைத்தளித்தாய் உலகினுக்கே !

 

சர்வவுமே இறைவனென சாற்றிநிற்கும் பாரதமே

சமத்துவத்தை நிலைநிறுத்த தானுழைக்கும் பாரதமே

இவ்வுலகை இரட்சிக்க ஞானிகளை ஈந்தளித்தாய்

இவ்வுலக மாந்தரெலாம் இந்தியாவை நோக்குகிறார் !

 

வேதமொடு சாத்திரங்கள் வியந்துவிடும் இலக்கியங்கள்

பாரதத்தாய் உலகினுக்கு ஈந்தளித்தாள் பொக்கிஷமாய்

யார்வந்து போனாலும் நலம்விளைக்கும் எனும்நினைப்பை

நாநிலத்துக் கீந்தளிக்கும் பாரதத்தாய் வாழியவே !

 

புத்தர்காந்தி புனிதநபி புதுவெளிச்சம் யேசுபிரான்

அத்தனைபேர் கொள்கைகளும் அடக்கிநிற்கும் பாரதமே

உத்தமர்கள் பலபேர்கள் உன்மடியில் பிறந்தார்கள்

உயர்வான சுதந்திரத்தை உயிர்ப்புடனே வைத்திடுவாய் !

 

இமையம்முதல் குமரிவரை எல்லையினைக் கொண்டுள்ளாய்

இயலாமை எனும்நினைப்பை இன்மையாக்க முனைகின்றாய்

தவவலிமை மிக்கோரால் தான்வரங்கள் பெற்றுள்ளாய்

தகைமைநிறை சுதந்திரத்தை தக்கபடி காத்திடுவாய் !

 

சுதந்திரமாய் உலவுதற்குச் சுதந்திரத்தை விட்டிடுவோம்

சுதந்திரத்தை யாவருமே சுவாசிக்கச் செய்துநிற்போம்

சுதந்திரத்தை சுகமாக சுவையாக்க முனைந்திடுவோம்

சுதந்திரத்தைக் குலைப்பார்க்குச் சுதந்திரத்தை உணர்த்திடுவோம் !

 

ஆனந்த சுதந்திரத்தை அகமகிழக் கொண்டாட

ஆனந்தப் பூங்காவை அமைத்திடுவோம் பாரதத்தில்

ஆனந்தம் எனுமுணர்வை அனைவருமே பெற்றுவிட

அன்புபாசம் நேசமொடு அஹிம்தனை அரவணைப்போம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *