நான் அறிந்த சிலம்பு – 238
-மலர் சபா
மதுரைக் காண்டம் – கட்டுரை காதை
தம் சுற்றத்தினரையும் விட்டுநீங்கி
குழலையும் குடுமியையும்
மழலைப்பேச்சுடைய சிவந்த வாயையும்
தளர்வான நடையும் உடைய கூட்டத்துடன்
விளையாடும் சிறுவர்கள் அனைவரும்
அந்த அந்தணனைச் சூழ்ந்து கொள்ள,
பராசரன் பேசலானான்:
“அந்தணச் சிறுவர்களே!
என்னுடன் சேர்ந்து மறைதனை ஓதி
என் பொதியில் இருக்கும் பண்டங்களை
எடுத்துச் செல்வீராக!
பெருமைவாய்ந்த சிறப்புடைய
வார்த்திகன் புதல்வன்
தட்சணாமுர்த்தி எனும் பெயர் கொண்டவன்
பால்மணம் கொண்ட சிவந்த வாயை உடைய
தன்னை ஒத்த இளையவரின்முன்,
தளர்வு கொண்ட நாவினை உடையவனாய் இருப்பினும்
மறையின் ஓசைமுறை தவறாது
உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன்
அவனுடன் சேர்ந்து ஓதினான்.
அங்ஙனம் மறையினைத் தன்னுடன் ஓதிய
தட்சணாமூர்த்தியை வியந்து பாராட்டினான்.
முத்துக்களால் செய்த பூணூலையும்
அதற்கேற்ற அணிகலன்களையும் புனைந்து
கைக்குக் கடம், காதுக்குத் தோடு ஆகியவற்றுடன்
தன் கைப்பொருளாகிய பண்டங்கள் நிறைந்த
சிறு பொதியையும்
தட்சணாமூர்த்திக்கு அளித்துப் பின்
தன் ஊர் திரும்பினான் பராசரன்.