-மேகலா இராமமூர்த்தி

ஊ(ஞ்)சலில் ஆடும் குழந்தையின் குதூகலத்தைத் தன் புகைப்படக் கருவியில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. பிரேம்நாத் திருமலைசாமி.

child playing swing

கவியெழுதப் பொருத்தமான காட்சியிது என்றிதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் நம் நன்றிக்குரியோர்!

இந்தப் படத்தைப் பார்க்கும்போது,

”ஆடிவா ஆடிவா ஆடிவா!
(ஊசல்)ஆடப் பிறந்தவளே ஆடிவா!
புகழ்தேடப் பிறந்தவளே பாடிவா” என்று உல்லாசமாய்ப் பாடத் தோன்றுகிறது.

கவிகள் காத்திருக்கிறார்கள்! அவர்களின் கவிமழையில் நனையப் புறப்படுவோம் விரைவாய்!

”காலமிது காலமிது ஊஞ்சலாடு கண்ணே! காலமிதைத் தவறவிட்டால் பின் (விளையாட) வாய்ப்பில்லை பெண்ணே!” என்கிறது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.

ஆடிவிடு இப்போதே

சின்னப் பெண்ணே ஊஞ்சலாடு
சிரித்து மகிழ்ந்தே ஊஞ்சலாடு,
அன்னை ஆடிய ஆட்டமிது
அப்பா கட்டிய ஊஞ்சலிது,
பின்னை நாளில் கிடைக்காது
பொழுதும் அதற்கே இருக்காது,
உன்னலம் பேண முடியாது
உழைத்திடும் அன்னையாய் ஆனபின்னே…!

*****

”ஆனந்தக் கூத்தாடும் அரும்பு அறிவதில்லை அளவோடு நலங்காணும் சுகம்” என்று விளம்பும் திரு. சுரேஜமீ, புதுவுலகம் படைத்திடப் புறப்படுவாய்; தோல்விகண்டு துவளாமல் வெல்வாய்! என ஊஞ்சலாடும் குழந்தைக்கு ஊக்கமளிக்கின்றார்.

ஆனந்தக் கூத்தாடும் அரும்பிற்குத் தெரியாது
அளவோடு
நலம்காணும் நிலையென்றும் மகிழ்வென்று
ஆசைகள் வார்த்தெடுக்கும் புதுமைகள் புரியாது
அனுபவத்தால்
வரும்வரையில் அதற்கென்ன எனுமனத்தால்
கருப்புவெள்ளைக் காலமென்றால் களித்திடலாம்
தினந்தோறும்
உருமாறும் போதுதான் உள்ளவையே வெளிப்படும்பார்
துருப்பென்று ஏதுமிலா வேட்டைக்குச் செல்வதுபோல்
வருங்காலம்
வந்துநிற்கும் வாசலது தெரியாமல்!

தெரியாமல் வந்ததுகாண் இதுவென்று வெதும்பாமல்
தெள்ளிய
மனத்தோடு வளர்ந்து வரவேண்டும்
புரியாத புதிரெல்லாம் அறிவோடு வென்றிட்டுப்
புதுவுலகம்
படைத்திடவே பூண்டிடுவாய் உறுதியையும்
நிலவொன்று வானில்காண் தேய்ந்தென்றும் வளர்வதுபோல்
தோல்விகண்டு
துவளாமல் நீயென்றும் நடைபோட
நீரென்றும் விலகாது நிலத்தோடு காய்வதுபோல்
உலகிலுந்தன்
புகழிணைய யானுன்னை வாழ்த்துகிறேன்!

*****

”பெண்ணே! அன்னையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆடிய ஊஞ்சல்; பூங்காவில் பாங்காய் விளையாடிய ஊஞ்சல் என நீ ஊஞ்சலாடிய இடங்கள்தாம் எத்தனை! ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததே இம்மானுட வாழ்க்கை என்பதை இந்த ஊஞ்சல் விளையாட்டு உன்னதமாய் விளக்குகின்றதோ!” என வியக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

இளம் பெண்ணே! உன் இளமையை ஊஞ்சலாக்கி விளையாடு,
உன் எண்ணச் சிறகினை விரித்து மகிழ்வுடன் விளையாடு
ஊஞ்சல் ஆடும்போது உனது உடலும், கூந்தலும் ஆடுதே
உனது எண்ணமும், உள்ளமும், சிரிப்பினை வெளிப்படுத்துதே!
சிறு வயதில் அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டு ஆடிய ஊஞ்சல்
வளர்ந்தவுடன், பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிய ஊஞ்சல்
வீட்டின் முற்றத்தில் விளையாடிய சங்கிலியால்ஆன ஊஞ்சல்
உனது தலைமுறை காலம்காலமாக வீட்டினுள்ளே ஆடிய ஊஞ்சல்!
திருமணத்தின்போது, கைபிடித்தவுடன் சேர்ந்து ஆடும் ஊஞ்சல்
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை காட்டுவதே ஊஞ்சலின் நோக்கம்
பின் நாளில் உனக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கம்
உன் ஏக்கம் தீரத் திறந்த வெளியில் மரக்கிளையில் ஊஞ்சலாடுகிறாயா!

*****

”அருமைப் பெண்ணே! ஊஞ்சலாடிப் பார்; உனக்குள் துணிவு வரும்; உள்ளம் உறுதிபெறும்; உடலும் வலிவுபெறும்!” என்று தன் கவிதையில் தன்னம்பிக்கை விதைக்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

ஆடுது பெண்ணூஞ்சல்: ஊஞ்சலாடும் சின்னப் பெண்ணே!
உன்னதக் காலமிது என் கண்ணே!
ஆடும் வரை ஆடி விடு அழகுப் பொன்னே!
நீ வளர்ந்த பின்,உன்னை ஆட விடாது,
இவ்வுலகம் என் அருமைப் பெண்ணே!
ஆடும் உரிமை ஆணுக்கு மட்டும் என்று
அம்பலத்தான் சொல்லியதாய்!
கதை ஒன்று சொல்லிடுவார்!
பெண்ணை அடக்கி வைத்திடுவார்!
அடக்கம் என்னும் பெயர் சூட்டி
பெண்கள் வளராமல் செய்திடுவார்!
பெண்ணே ஊஞ்சலில் ஆடிப் பார்!
உனக்குள் துணிவு வரும்!
உள்ளம் உறுதி பெறும்!
உடலும் வலிமை பெறும்!
உயர்வுற வழி தோன்றும்!
வானம் தொட்டுவிடும் தூரம்
எனும் உண்மை புரிந்து விடும்!
ஊஞ்சலாட உடனே வருவாய்
என் அருமைப் பெண்ணே!

*****

”வஞ்சகரின் சூழ்ச்சியை வெல்! நெஞ்சுரம் கொள்! அஞ்சுதல் ஒழி! சஞ்சலம் அழி!”  என ஊஞ்சலாடும் பெண் குழந்தைக்கோர் ’புதிய ஆத்திசூடி’ படைத்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி. 

ஊஞ்சலாடும் பெண்ணே உஷார்..!

இங்கும் அங்குமாக ஆடியசைந்தாடும் ஊஞ்சல்தானது..
……….
ஓய்ந்திடும்போது உதைத்தாடுவதினால் இன்பம் தரும்.!
மங்காதபுகழுடன் வாழத்தான் நானிலத்தில் மாந்தர்கள்..
……….
மன்றாடி வாழ்க்கையிலுயர ஊஞ்சல்போல ஆடுவர்.!
தொங்கும் சங்கிலியே ஆடுமூஞ்சலுக்கு ஆதாரமதுபோல..
……….
தொடருமுமின்ப துன்பபிணைப்பே நமக்குப் பிடிமானம்.!
தங்குமுலகில் முன்னேற தடைகற்கள் பலவுண்டாமதை..
……….
தக்கசமயம் வரும்போது தாண்டிவரப் பழகவேண்டும் .!
பிஞ்சும்பூவும் காயும்கனியும் நிழல்தரும் மரத்தினிலே..
……….
பிஞ்சு மனதுடன் ஆடிக்களிக்கும் வயதுதானெனினும்..
ஊஞ்சலாடும் உல்லாசச்சிறுமியே உலகை மறந்தாடும்..
……….
உனக்கொரு உபதேசம் சொல்லவந்தேன் கேட்பாயா..?
நஞ்சில்லாப் பாம்புபோல் நட்புலகில் நடிப்போருண்டு..
……….
நட்பாகப் பழகினாலும் யாரையுமெளிதில் நம்பிவிடாதே.!
வஞ்சகமாந்தர்கள் செய்யும் சூழ்ச்சிவலையு மிருக்குமதில்..
……….
வீழ்ந்திடாமல் போராடவும் தெரியவேண்டும் பாப்பா..!
அஞ்சுதல் ஆருக்கும் கூடாதாம்..அறிமுகமில்லாநபரை..
……….
அருகில்சேர்க்கா விலகியிருக்க வாழ்வில்நீ கற்றுக்கொள்.!
சஞ்சலமென்பதும் வாழ்க்கையில் எப்போதும் வேண்டாம்..
……….
சபலபுத்தி கொண்டோரை சற்றும்கிட்ட நெருங்கவிடாதே.!
நெஞ்சை நிமிர்த்திநேரான பார்வையொடு கூர்ந்துநோக்கி..
……….
நட்பெனும் போர்வையோடுவரும் நஞ்சைநீயறியவேணும்.!
அஞ்சாமல் அவர்களைநீ எதிர்த்தாடப் பழகவெண்டும்..
……….
அந்தகனை அடையாளம் கண்டொதுக்க வேண்டும்.!

*****

”உலகெனும் ஊஞ்சலில் அம்மானை ஆடுகிறாள் அன்னை பராசக்தி. குழந்தாய்…! நீயும் அதுபோல் ஓடி விளையாடு; ஓய்ந்திருக்கலாகாது; வீட்டுக்குப் பெருமை சேர்; நாட்டுக்கு நலம்புரி!” என்று நவீன பாரதியாய் மாறி அருமையானதொரு ’பாப்பாப் பாட்டு’ பாடியிருக்கின்றார் திரு. ஜெயபாரதன்.

உலகென்னும் ஊஞ்சல்.

உலகென்னும் ஊஞ்சலில்
பலயுக மாய் ஆடி,
பந்துகளை
அம்மானை ஆடுகிறாள் அன்னை !
நில்லாமல் ஆடுகிறாள்,
நம்மோடு,
பல்லாங் குழிகளில்
பளிங்கு களை இட்டு !
ஊஞ்சல் ஆட்டம் நின்றால்
உலகே ஓடிவிடும்
அண்டவெளி நோக்கி !
பல்லாங் குழி ஆட்டம்
நின்றால்
படைப்பு வேலை
நிறுத்தம் அடையும் !
உன்னை ஊஞ்சலில் ஆட்ட
அன்னையைக்
கூப்பிடு !
பல்லாங் குழி விளையாட
பக்கத்து வீட்டுப்
பாவையை அழைத்திடு !
ஓடி விளையாடு
பாப்பா ! நீ
ஓய்திருக்க லாகாது
பாப்பா !
கூடி விளையாடு
பாப்பா !
காலை எழுந்ததுடன்
படிப்பு ! பிறகு
கனிவு கொடுக்கும் நல்ல
தோழியர் நட்பு !
செய்யும் தொழிலால்
நாட்டுக்கு
நலம் புரியச் செல் !
பெற்றோர் ஈன்ற பொழுதினும்
பெரிது மகிழச் செய் !

*****

மாசில் பெண்மகவை ஊசலில் கண்டதும் தேசுமிகு கவிதைகளை பாசத்தோடு பொழிந்திருக்கின்றனர் கவிவலவர்கள். அவர்கட்கு என் மனங்கனிந்த பாராட்டு!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வுபெற்றிருப்பது அடுத்து…

ஊஞ்சல்

பண்பட்ட கலையா பண்பாட்டுக் கலையா
வீரம் சொல்லும் மண்ணில்
விவேகம் தரும் விளையாட்டு
விஞ்ஞானம் கூறுகிறது முதுகுக் தண்டு பலம்பெறுமாம்
வித்தைகள் புரியாமலே
பிள்ளைத் தமிழின் பத்தாம் பருவமதில்
விளையாடினோம் ஊசலாய்,
கண்ணாமூச்சி விளையாடி
கைகோத்தாடி கதைத்த காலமெல்லாம் நிழலாடும் மனத்தில்
தீராத தாகமாய் நினைவரிசை
பட்டாம் பூச்சியாக வலம்வரும் பருவம்
நினைவில் கடிவாளம் போட மறுக்கும் கனவு
மின்னல் பொழுதாய்ப் பருவம் கடந்தேன்
இம்மண்ணில் இருக்கும் ஈர்ப்பால்
இப்பெண்ணில் புதையும் நினைவை
வானவில் கொடியில் உலர்த்தி வண்ணமேற்றும் மனது
ஊஞ்சலில் குதித்தாடி
உலகம் மறந்த பொழுதுகளை ஊரறியப் பேசுகிறேன்
ஆலவிழுதுகளில் விளையாடினோம்
குழந்தைப் பருவமதில்
தாயின் சேலையே ஊஞ்சலாய்
தாய் மணம் நுகர்ந்து தொட்டிலாடினோம்
கயிற்றூஞ்சல் காற்றில் நலம் கேட்க
கன்னிப் பருவமதில் கனவில் களித்திட்டோம்
இறையவன்இறைவி களித்திட்ட பொன்னூஞ்சல்
இல்லறச் சடங்கிலும் இணைபிரியாமலே
கன்னியவள் கரம் பிடித்த காளையுடன்
கவினுறவே ஊஞ்சலாடினோம்
பாரம்பரிய ஊஞ்சல் பாங்குடனே பல பொருளில்
இந்நூற்றாண்டில்….
வாகனச் சக்கரமதில் வாகாய் வளைந்தாட

பொன்னூஞ்சல் ஆடுமகளே!
காலமிது காலம் கண்மணியே!
சிறுவர் பெரியவர் பேதமின்றி
நல்லவர் கெட்டவர் பேதமின்றி
ஆட்டுவிக்கும் ஊஞ்சலில் நாளும் விளையாடு
பேதைமை மறந்து சமத்துவ வானில் ஊஞ்சலாடு
பிறர் ஊக்க முன்னேறு கண்ணே!
உன்முயற்சியும் வேண்டுமடி பெண்ணே!
ஊஞ்சல் சொல்லும் பாடம் அதுவே
நிமர்ந்தாடு கண்ணே நெகிழ்ந்தாடு கண்ணே!
விளையாட்டுக் காலமிது விரைந்தாடு கண்ணே!
வரவேற்பறையைப் பிடித்திட்ட ஊஞ்சல்
வரவேற்பாரற்றுப் பரணில் …..
காரணத்தைக் கவனமதில் கொள்ள வேண்டும் காரிகையே!
கணிப்பொறி விளையாட்டில் மூழ்கிய பிஞ்சுகளை
கரம்பிடித்து நடத்துவோம் உடலியக்க விளையாட்டிற்கு

பண்டைத் தமிழ்மண்ணில் முகிழ்த்த பெண்டிர் விளையாட்டுக்களில் ஒன்று ஊசல். பெண்பாற்பிள்ளைத் தமிழின் பத்தாவது பருவமாய்த் திகழ்வது ஊசல்.

அன்று வீட்டின் வரவேற்பறையில் கம்பீரமாய்த் திகழ்ந்த ஊசல், இன்று கவனிப்பாரற்றுப் பரணேறிவிட்டதே எனும் தன் வருத்தத்தை, இளமையில் ஊசலாடிய இனிய நினைவுகளோடு பொருத்தமாய் இணைத்துத் தந்திருக்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா. அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

0 thoughts on “படக்கவிதைப் போட்டி 125-இன் முடிவுகள்

Leave a Reply to மா.பத்ம பிரியா,உதவிப்பேராசிாியா்,எஸ்.எஃப்.ஆா்.மகளிா் கல்லூரி,சிவகாசி

Your email address will not be published. Required fields are marked *