எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

கல்லுக்குள் உறைந்திருக்கும்

கலைநயத்தைப் பார்ப்பதற்கு

மெல்லவே உளிசென்று

வெட்டிவிடும் கல்லதனை

வேண்டாத பகுதிகளை

வெட்டியே எறிந்துவிடின்

வெளிப்படும் பகுதிதான்

வியப்பெமக்குத் தந்துவிடும் !

 

வேதனையும் சோதனையும்

தாங்குகின்ற  வேளையில்தான்

மேலான தன்மையங்கே

வெளிப்பட்டு வந்துநிற்கும்

கல்பட்ட வேதனையால்

கடவுளுரு காட்சிதரும்

கால்மிதிக்கும் கல்லுக்கு

வேதனைகள் புரியாது !

 

மனமென்னும் கல்தன்னை

மாற்றிவிட  வேண்டுமென்று

தினமுமே பலவற்றை

செய்கின்றோம் வாழ்வெல்லாம்

ஆனாலும் அம்மனமோ

ஆகாத வழிசென்று

ஆணவத்தை அணைத்துவிட

ஆர்வம்கொண்டே நிற்கிறது !

 

ஆணவத்தை அணைத்துவிட்டால்

அன்பங்கே அகன்றுவிடும்

அறமொளிந்து மறமோங்கி

ஆசையங்கே ஆர்ப்பரிக்கும்

அன்புபாச நேசமெல்லாம்

அனாதரவாய் ஆகிவிடும்

ஆண்டவனின் நினைப்புமே

அற்பமாய் ஆகிவிடும் !

 

வேண்டாத அத்தனையும்

வேராக ஊன்றிவிடின்

வில்லங்கம் அத்தனையும்

நல்லவற்றை அழித்துவிடும்

வில்லங்கம் தனையகற்ற

நல்லதொரு செயலாக

வேண்டாத அத்தனையும்

வெட்டிவிடல் முறையாகும் !

 

வேண்டாத விஷயங்களை

விரைவாக வெட்டிடுவோம்

வேதனையும் சோதனையும்

சாதனைக்கே வழிசமைக்கும்

ஆதலால் அனைவருமே

ஆண்டவனைக் காண்பதற்கு

அகற்றிடுவோம் ஆணவத்தை

ஆனந்தம் பெருகிடுமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *