நீர் !
எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா
பாரினிலே நாம்வாழ நீரெமக்கு முக்கியமே
வேரினுக்கு நீரின்றேல் விருட்சமெலாம் வந்திடுமா
ஊருக்கு ஒருகுளத்தில் நீர்நிரம்பி இருந்துவிடின்
ஊரெல்லாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடுமே
நீரின்றி பலமக்கள் நீழ்புவியில் இருக்கின்றார்
ஆர்நீரைக் கொடுத்தாலும் அருந்திவிடத் துடிக்கின்றார்
கார்கொண்ட மேகங்கள் கனமழையைக் கொட்டிவிடின்
நீரின்றி இருப்பார்கள் நிம்மதியாய் இருப்பரன்றோ !
விஞ்ஞானம் வளர்ந்ததனால் விந்தைபல விளைகிறது
நல்ஞானம் எனமக்கள் நாளுமே போற்றுகிறார்
அவ்ஞான வளர்ச்சியினால் அளவற்ற தொழிற்சாலை
ஆண்டுதோறும் பெருகிநின்று அவலத்தைத் தருகிறது
தொழிற்சாலைக் கழிவனைத்தும் தூயநீரில் கலக்கிறது
அதையருந்தும் மக்களெலாம் ஆபத்தில் சிக்குகிறார்
ஆபத்தைத் தடுப்பதற்கு ஆட்சியாளர் வராவிட்டால்
அருந்துகின்ற நீராலே அவலம்தான் பெருக்கெடுக்கும் !
கிராமப் புறங்களிலே கிணற்றுநீர் இருக்கிறது
மழைபொய்த்து விட்டுவிட்டால் அந்நீரும் வற்றிவிடும்
நகரப்புறங்களிலே நன்னீரே என்று சொல்லி
தகரத்தில் போத்தல்களில் தண்ணீரைக் காணுகிறோம்
விதம்விதமாய் போத்தல்களில் விற்கின்ற நீரனைத்தும்
வெளிக்கிட்டு வருமிடத்தை யாருமே பார்ப்பதில்லை
போத்தல்களில் வரும்நீரை பொறுப்பின்றி அடைப்பதனால்
குடிக்கின்றார் அனைவருமே கிடக்கின்றார் கட்டிலிலே !
உயிர்வாழ வேண்டுமெனில் உடல்கேட்கும் நீரினையே
நீரின்றி வாழ்ந்திடுதல் நினைத்திடவே முடியாது
உட்செல்லும் நீராலே உடல்நிறைவு பெறுகிறது
உயிரோட்டம் தருவதற்கு நீரெமக்கு தேவையன்றோ
ஆற்றுநீர் ஊற்றுநீர் அனைத்தையும் குடித்தாலும்
அசுத்தமில்லா நீரினையே அருந்திடுதல் முறையாகும்
உள்போகும் நீரினைநாம் உயிரெனவே நினைத்திடுவோம்
உவப்புடனே நீரருந்தி உலகத்தில் வாழ்ந்திடுவோம் !
ஆபிரிக்க நாடுகளில் அருந்துதற்கு நீரில்லை
அவர்நீரை எடுப்பதற்கு அலைந்தபடி இருக்கின்றார்
ஆட்சிதனில் இருப்பார்கள் அதைப்பற்றி அலட்டாமல்
ஆடிப்பாடி விடுதிகளில் அருந்துகிறார் குடிவகையை
குடிக்கின்ற நீருக்குக் குடிகள்படும் அவலமதை
குடித்தாட்டம் போடுகிறார் கொஞ்சமேனும் நினையாமல்
அடிக்கின்ற கூத்ததனை ஆண்டவனே நீபாரு
அல்லல்படும் மக்களுக்கு அருந்திவிட நீரைக்கொடு !