நவராத்திரி நாயகியர் (3)
க. பாலசுப்பிரமணியன்
துர்கை அம்மன்
கண்களில் கோபம், கடமையில் மோகம்
கைகளில் சூலம், கால்களில் வேகம்
கலியினைத் தீர்க்கும் கருணையின் ராகம்
கனிவுடன் அழைத்தால் தாய்மையின் தாகம்
தவமென நெருப்பைத் தலையினில் ஏந்தி
தகித்துடும் கனலில் கால்களைப் பதித்து
தாயினின் அன்பைத் தன்னுள் வைத்து
வாவென அழைத்தால் வருவாள் துர்கை !
தீதினை விலக்கிடத் தீயாய் வருவாள்
சூதினை உடைத்திடச் சூலமாய் வருவாள்
சூழ்ச்சிகள் ஏவல் சுமையின்றி விலக்கி
வாழ்வினில் ஒளியாய் வளம்தரும் தாயே !
வில்லும் சங்கும் வழித்துணை வந்திட
வாளும் கதையும் வருவினை காத்திட
பன்னிரு கைகள் பழவினை நீக்கிட
பார்கவி பைரவி பாதங்கள் துணையே !
இச்சைகள் நீக்கிடும் எலுமிச்சை விளக்கில்
இருளில் ஒளியாய் கலங்கரை விளக்காய்
அச்சங்கள் போக்கிடும் அவளிரு விழிகள்
அன்புடன் அழைத்தேன் அருள்வாய் தாயே !
அருவம் உருவம் அனைத்தும் நீயே
பருவம் காலங்கள் பயணங்கள் நீயே
கருத்தின் கருவில் கண்விழி நீயே
காத்திடு தாயே கனக துர்கையே !!