-மேகலா இராமமூர்த்தி

தலைவன் ஊர்திரும்பிவிட்ட நற்செய்தியை முதலில் அறிந்தவள் தோழியே. அதனைச் சொல்லித் தலைவியை மகிழ்விக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு தலைவியின் இல்லம்நோக்கி விரைந்துவந்தாள்.

அயலார் தலைவியை மணம்பேசிவிட்டுச் சென்றபின் தலைவி முன்புபோல் அதிகமாய் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை; இற்செறிக்கப்பட்டாள். (இல்லத்திலேயே இருக்குமாறு வலியுறுத்தப்படுதல்). அவளின் மலரன்ன முகத்தில் நொதுமலர் மணம்பேசிச் சென்றதிலிருந்தே மலர்ச்சியில்லை; உடல் மெலிந்தும் உளம் நலிந்தும் ஓர் நடைப்பிணமாகவே அவள் நடமாடி வந்தாள் எனலாம்.

தலைவியைக் கண்ட தோழி, அவள் உளமறியாது, ”இவளைச் சிறிதுநேரம் வம்புக்கிழுத்துவிட்டுத் தலைவனின் வரவைப் பின்னர் அறிவிப்போம்” என்று குறும்பாக எண்ணியபடி தலைவியைப் பார்த்தாள். ”என்ன இது? தலைவனையன்றி எனை மணக்க ஒருவராலும் ஏலாது; அவனைக் கண்டதும் கானவனின் அம்புக்கு அஞ்சியோடும் குரங்குகள்போல் மணம்பேசவந்த அயலார் சிதறுவர் என்று என்னிடம் சவால்விட்ட பெண்ணா இப்படிச் சுணங்கியிருப்பது?” என்றாள் கேலியாக.

SONY DSCதலைவனின் வருகை தாமதமாகிக்கொண்டே இருப்பதால் மனம்நொந்திருந்த தலைவி, ” நல்ல பசுவின் இனிய பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாது, கறக்கும் பாத்திரத்திலும் வீழாது, தரையில் சிந்தி வீணானது போல், என் மாமைப் பேரழகு எனக்கும் கவின் சேர்க்காது, என் தலைவனுக்கும் இன்பம் பயவாது, பசலையால் உண்ணப்பட்டு அழிகின்றது” என்று வேதனையோடு விளம்பவும், தோழி தன் குறும்புப் பேச்சைச் சட்டென நிறுத்தினாள்.

கன்றும்  உண்ணாது  கலத்தினும்  படாது
நல்லான்
 தீம்பால்  நிலத்துக்  காஅங்கு
எனக்கும்
 ஆகாது  என்னைக்கும்  உதவாது

பசலை  உணீஇயர்  வேண்டும்
திதலை
 அல்குல்என்  மாமைக்  கவினே. (குறுந்: 27 – வெள்ளிவீதியார்)

மாமைக் கவின் என்பது மாந்தளிர் வண்ணத்தைக் குறிக்கும். பெண்களுக்கு இவ்வண்ணம் பேரழகு பயக்கும் என்பது நம்மனோரின் எண்ணம்.

பசலை என்பது என்ன? இது பெண்களின் உடலில் ஏற்படும் ஒருவகை நிறமாற்றம்; காதலரைப் பிரிந்த ஆற்றாமையால் சரியாக உண்ணாமலும் உறங்காமலுமிருக்கும் மடந்தையரின் மேனி மெலியும்; சற்றே வெளிறும். அதனால் மாறுபட்ட ஒருவகையான (பசும்)பொன்னிறம் அவர்கள் உடலில் படரும். இதனையே பசலை என்கின்றனர் பைந்தமிழ்ச் சான்றோர். (In English this condition is called Green Sickness; also known as ‘The Disease of Virgins’). பசலை படர்ந்தால் மாமைக் கவின் அழியும்.

இப்பசலை நோய், காதலரைப் பிரிந்த பெண்டிரை மட்டுந்தான் தாக்குமா? காதலியரைப் பிரிந்த ஆடவரைத் தாக்காதா? என்றொரு கேள்வி நம்முன் எழலாம்.

ஆடவரைப் பசலை நோயொடு தொடர்புபடுத்திய பாடல்கள் ஏதும் நம் இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை.

காரணம் என்னவாயிருக்கும்?

”பெருமையும் உரனும் ஆடூஉ மேன” (தொல். பொ. 98) என்று பழந்தமிழிலக்கணம் ஆடவருக்கு (வீர)இலக்கணம் வகுத்துவிட்டபடியால், ”காதலர் பிரிவால் பசலை பாய்வதும், அழகு தேய்வதும் நங்கையர்க்கே உரித்தானவை; நம்பியர்க்கு இழுக்கானவை” என்று புலவர்கள் முடிவுகட்டிவிட்டனர் போலும். இன்றுங்கூட ”ஆண்பிள்ளைஅழுவது கூடாது” எனும் சொலவடை நம்மிடம் புழக்கத்தில் இருப்பதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பாவம் ஆண்கள்! துன்பம் நேர்கையில் அழக்கூட அவர்களுக்கு உரிமையில்லை!

சரி…வருந்திப் புலம்பிக்கொண்டிருக்கும் தலைவியின் பக்கம் நம் பார்வையைத் திருப்புவோம்!

தான் கவினழிந்து பொலிவிழந்து நிற்கத் தலைவனின் பிரிவாற்றாமையே காரணம் என்ற தலைவி தோழியிடம் தொடர்ந்து கூறலுற்றாள்…

cockfight”தலைவரைக் கண்ட கண்கள் தந்ததனால் உண்டாகிய காமமாகிய ஒள்ளிய தீயானது, என் என்பை (எலும்பை) நலிவுறச்செய்யினும், அவரை விரும்பிச்சென்று அளவளாவுதற்கு அரிய காட்சியள் ஆகிவிட்டேன் (இற்செறிக்கப்பட்டதால்). அவரும் தாமாகவந்து என் துன்பத்தை நீங்கச் செய்தாரல்லர். இந்நிலையில் என் காமநோயானது, அதனைக் களைவோர் இன்மையால், குப்பைக்கோழிகளின் தனித்த சண்டைபோல் தானே அழியவேண்டியதுதான்!” என்றாள் குரல் தழுதழுக்க.

”என் நோய் களைவோர் இல்லை” என்று தலைவி பொடிவைத்துப் பேசியதன் உட்பொருள், அவள் துயர்தீரத் தோழி உதவவேண்டும் என்பதே. அவளன்றித் தலைவியின் ஆரஞர் களைவார் ஆருளர்?

கண்தர   வந்த   காம   ஒள்ளெரி
என்புற   நலியினும்  அவரொடு  பேணிச்
சென்றுநாம்  முயங்கற்கு  அருங்காட்  சியமே
வந்தஞர்  களைதலை  அவராற்  றலரே
உய்த்தனர்  விடாஅர்  பிரித்திடை  களையார்
குப்பைக்  கோழித்  தனிப்போர்  போல
விளிவாங்கு  விளியின்  அல்லது
களைவோர்  இலையான்  உற்ற  நோயே.  (குறுந்: 305 – குப்பைக்கோழியார்)

தலைவனைக் கண்டபோதே  தலைவியின் நெஞ்சம், ஊழின் வலியால், அவன்பாற் காமங் கொண்டதாகலின், ’கண்தர வந்த காம ஒள்ளெரி’ யென்றாள்.

கண்தாம்  கலுழ்வ  தெவன்கொலோ  தண்டாநோய்
தாம்காட்ட
 யாம்கண்  டது. (1171)

படலாற்றா பைதல்  உழக்கும்  கடலாற்றாக்
காமநோய்  செய்தஎன்  கண். (1175) எனும் குறட்பாக்கள் இக்குறுந்தொகை அடியோடு ஒப்புநோக்கத்தக்கவை.

குப்பைக்கோழியின் போரைத் தலைவி ஈண்டுக் குறிப்பிடக் காரணம், போரின்பொருட்டு வளர்க்கப்படும் சேரிக்கோழிகளின் போர், பெருந்திரளான மக்கட்கிடையே நிகழும்; ஆனால் குப்பைக்கோழிகளின் போரைக் காண்பாருமிலர்; அப்போரால் அவையுறும் துயர் களைவாருமிலர். ஆதலால் துயர்மிகுந்த தன்னிலையைக் குப்பைக்கோழியின் நிலையோடு பொருத்திப்பார்த்து வருந்துகிறாள் தலைவி. இயற்பெயர் அறியவியலா இப்பாடலின் ஆசிரியர் ’குப்பைக்கோழியார்’ என்றே குறிக்கப்படுகின்றார்.

தலைவியின் சொற்கள் கண்ணீரில் நனைந்து வெளிப்பட்டதைக் கண்ட தோழி, இனியும் காலந்தாழ்த்தலாகாது என்று தீர்மானித்து, தலைவன் ஊர்திரும்பிவிட்ட நற்செய்தியை அவளிடம் தெரியப்படுத்தினாள். அச்செய்தி தலைவியின் அகவாட்டத்தைச் சற்றேபோக்கி அவள் முகத்தில் மலர்ச்சியை வருவித்ததெனினும், வேற்று வரைவை மாற்றும் ஆற்றல் தலைவனுக்கு இப்போதிருக்குமா எனும் ஐயம் அவளுள் கிளர்ந்தெழவே, மீண்டும் அவள் முகம் கூம்பியது. தோழியிடம் தன் ஐயத்தைப் புலப்படுத்தினாள். அது நியாயமானதே என்றுணர்ந்த தோழி, இச்சிக்கலைத் தீர்க்க என்ன வழி என்று தீவிரமாய் யோசிக்கலானாள்.

இருவழிகள் அவளுக்குப் புலப்பட்டன!

ஒன்று…தலைவியின் தமரிடம் அவள் காதலைத் தெரிவித்துக் காதல் மணத்துக்குச் சம்மதம் பெறுவது; ஆனால், வேற்று மணத்தை நிகழ்த்திவிடுவதற்கான மணநாளைக் குறிப்பதில் இருவீட்டாரும் முனைந்திருக்கும் இத்தறுவாயில், தலைவியின் காதலை வீட்டுக்குச் சொல்வதால் தலைவிக்குச் சாதகமாக எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை; மாறாகத் தலைவியின்மீது அவள் பெற்றோர் சினமும் சீற்றமும் கொள்ளவே அது வழிவகுக்கும். எனவே அந்தவழி பயன்படாது!

மீதமிருக்கும் ஒரேவழி ’உடன்போக்கு’ என்று எண்ணமிட்டவள், தலைவன் தலைவியைத் தன்னூருக்கு உடனழைத்துச் சென்று மணப்பது ஒன்றே இப்போதைக்குச் சாத்தியப்படக்கூடிய ஒரேவழி எனும் முடிவுக்குவந்தாள். தலைவியிடம் அதைக்கூறவும் அவள் மருண்டு நோக்கினாள் தோழியை!

அவளைத் தெளிவிக்க எண்ணிய தோழி, ”அருமைத்elephant_tiger தோழி! நீ வாழி! என்று தலைவியை வாழ்த்திவிட்டு, மிக்க வலியினையும் பிளந்த வாயினையுமுடைய பெரிய ஆண்புலியானது, மதத்தால் நனைந்த கவுளையுடைய, அண்ணல் யானையின் அழகிய முகத்தின்கண்ணே பாய, அவ்யானையின் வெள்ளிய கொம்பைத் தனது குருதியால் செவ்விய கறைகொள்ளச் செய்து, மலைப் பள்ளத்திலுள்ள, மேலைக் காற்றால் வீழ்த்தப்பட்ட, கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் வாடிய பூவையுடைய கிளையைப் போல இறந்துகிடக்கும். அத்தகு  உயர்ந்த மலைநாட்டுத் தலைவனுடன் உடன்போவதை நீ எண்ணுவாயாக” என்றாள் உறுதிபட.

நினையாய்  வாழி  தோழி  நனைகவுள்
அண்ணல்  யானை  அணிமுகம்  பாய்ந்தென
மிகுவலி  இரும்புலிப்  பகுவாய் ஏற்றை
வெண்கொடு   செம்மறுக்  கொளீஇ  விடர்முகைக்
கோடை  யொற்றிய  கருங்கால்  வேங்கை
வாடுபூஞ்  சினையிற்  கிடக்கும்
உயர்வரை  நாடனொடு  பெயரும்  ஆறே.  (குறுந்: 343 – ஈழத்துப் பூதந்தேவனார்)

இப்பாடலில் வலிமிகு புலியொன்று தலைவன் நாட்டு யானையின்மீது தானாகப் பாய்ந்து காயப்பட்டு இறந்துபோகும் நிகழ்வு பேசப்படுகின்றது. தலைவன் நாட்டு யானை, சிரமமின்றிப் பகையை எளிதில் வீழ்த்துவதுபோல், தலைவனும் இடையூறுகளை எளிதில்வெல்லும் பேராற்றல் படைத்தவன் எனும் செய்தி இதனுள் பொதிந்துகிடக்கின்றது.

தோழி நயந்த உடன்போக்குக்குத் தலைவி உடன்பட்டாளா?

[தொடரும்]

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *