சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் இந்தவார மடலுடன் உங்கள் மத்தியில் மீண்டும் மனம் திறக்கிறேன். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதற்காக நாட்டிலிருக்கும் ஒவ்வொரு குடிமகனும் நாந்தானே இந்நாட்டு மன்னன் என்று கூறி தன் மனம் போன போக்கிலே தனக்குப் பிடித்தமான விதிகளை இயற்றி வாழ்ந்து விட்டுப் போக முடிகிறதா ? ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் இருக்கும் வாக்குச்சீட்டு ஒன்றே அவனுக்கு அந்நாட்டு மன்னன் எனும் அந்தஸ்தை வழங்குகிறது என்பதே பொருளாகிறது. ஒரு நாட்டின் அனைத்துப் ப்ரஜைகளினதும் மனதில் ஒரே மாதிரியான எண்ணங்கள் விளைவதில்லை. நாட்டின் முன்னேற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், அதற்கு கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் எவை என்பன ஒவ்வோர் மனிதனின் மனதிலும் வெவ்வேறு கோணங்களில் பரிணமிக்கின்றன.

ஒரு நாட்டின் மக்களின் பலதரப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையிலேயே வெவ்வேறு அரசியல் கட்சிகள் தோற்றமெடுக்கின்றன. அவைகளின் தோற்றத்தின் காரணம் நியாயமிக்கதாக இருப்பினும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் எனும் இலட்சியம் வெறியாக உருவெடுக்கிறது. இதன் விளைவாக எந்தவழி சென்றாயினும், அன்றி எத்தகைய பிரச்சாரத்தை மேற்கொண்டாயினும் தாம் அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் எனும் அவா, மக்களின் நன்மையையோ அன்றி நாட்டின் நன்மையையோ இரண்டாம் பட்சத்துக்குப் பின் தள்ளிவிடுகிறது. இதுவே இன்று பல நாடுகளின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு ஆகியிருக்கிறது. இந்த நோக்கத்திற்காக “உண்மைக்குப் புறம்பான செய்திகள் அல்லது Fake news “ எனும் வழிமுறை மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுக்கிறது. சமூகவலைத்தளங்களின் மூலம் பல மக்களை சென்றடையக்கூடிய அனுகூலத்தினால் இவ்வகையான மாயச்செய்திகள் பிரபல்யம் பெற்று விடுகின்றன.

இங்கிலாந்தின் பிரபல்யமான அகராதியான Collins Dictionary எனும் அமைப்பின் தகவலின்படி நடந்து கொண்டிருக்கும் இவ்வாண்டில் இந்த Fake News எனும் பதமே அதிகமாக உபயோகிக்கப்பட்டிருக்கும் எனும் பதம் எனப்படுகிறது. இதன் மூலம் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரதிகூலம் ஒன்றுண்டு. அதாவது ஒரு நாட்டின் தலைவரையோ அன்றி அந்நாட்டின் நிர்வாக இயந்திரங்களின் முக்கிய உறுப்புகள் அன்று உறுப்பினர்கள் மீதோ சுமத்தப்படும் பல உண்மையான குற்றச்சாட்டுகளைக் கூட அவர்கள் ” மாயச்செய்திகள் அன்றி Fake News “என்று மிக இலகுவாக உதறித் தள்ளி விட்டுச் செல்லும் ஒரு நிலையைப் பல இடங்களில் கண்கூடாகப் பார்க்கிறோம். இதனால் பல நேர்மையான , உண்மையான மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகள் அரசியலை விட்டு ஒதுங்கிச் செல்லும் நிலையைக் காண்கிறோம். இது எம்மை உலக வரலாற்றின் மிக இருளடைந்த ஒரு காலகட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிடுமோ எனும் அச்சம் பல அரசியல் அவதானிகள் மத்தியில் தோன்றியுள்ளது. உலக அரசியல் மாற்றங்கள் ஒரு வலுவான சினேகபூர்வமான நிலையை விட்டு விலகிச் செல்லும் நிலை போன்றதொரு பிரமை ஏற்படுகின்றது.

கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களிலும் இங்கிலாந்து பி.பி.ஸி தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பனோராமா எனும் நிகழ்ச்சியில் திடுக்கிடும் பல உண்மைகள் நிறைந்த செய்திகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. “அப்பில்பீ” எனப்படும் ஒரு நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் அந்தரங்க கோப்புகள் கணிணியின் இரகசிய பாதுகாப்பை உடைக்கும் குழுவினரால் ஹக் செய்யப்பட்டு ஜெர்மனிய செய்திநிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் ஜெர்மனியில் இத்தகைய அந்தரங்க கோப்புகளை ஆய்வு செய்யும் நிறுவனங்களைக் கூட்டி அவர்களுக்கு இக்கோப்புகளின் பிரதிகளைக் கொடுத்தார்கள். அவ்வரிசையில் இங்கிலாந்த்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பி.பி.ஸிக்கும், கார்டியன் பத்திரிகைக்கும் இக்கோப்புகளின் பிரதிகள் கொடுக்கப்பட்டன. அக்கோப்புகளின் அடிப்படையில் இங்கிலாந்து பி.பி.ஸி நிறுவனம் மேர்சொன்ன நிகழ்ச்சியைத் தயாரித்து ஒளிபரப்பியிருந்தது.

இங்கிலாந்தின் பல கோடீஸ்வரர்கள் இங்கிலாந்தின் வரியிலிருந்து தப்பிப்பதற்காக தமது பணத்தை வரிவிலக்களிக்கும் பெர்மியூடா போன்ற நாடுகளில் முடக்கியிருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அவர்களின் அத்தகைய நடவடிக்கைகள் சட்டத்துக்குப் புறம்பான செய்கைகள் அல்ல சட்டத்தின் பல ஓட்டைகளை உபயோகித்து அரசர்கள் இத்தகைய வழியில் இங்கிலாந்து அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்கள். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, மற்றும் போலிஸ் இலாகா ஆகியவை நிதிப் பற்றாக்குறையினால் அல்லாடிக் கொண்டு இருக்கும் நிலையில் கோடி,கோடியாக சம்பாதிக்கும் பலர் இத்தகைய வழியில் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரிப்பணத்தைக் கட்டாமல் இருப்பது தேசத்துரோகத்துக்கு நிகரானது எனும் வாதம் பல மூலைகளில் இருந்து ஒலிக்கிறது. இத்தகிய சிக்கல் இங்கிலாந்தின் மகாராணியைக் கூட விட்டு வைக்கவில்லை. அவரின் பணத்தைக் கையாளும் நிறுவனம் இத்தகைய வரிவிலக்களிக்கும் நாட்டில் முதலீடு செய்திருப்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது. அது மட்டுமின்றி தற்போது பதவியிலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய நிதி உதவியாளர் இத்தகைய வழியில் தானும் வரி கட்டாமல் தப்பியிருப்பதும் தெரிய வந்துள்ளது, இது இங்கிலாந்தின் அரசுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய உறவு கொண்டவரும்,வியாபார அமைச்சருமான ஒருவருக்கும், இரஸ்ய அதிபருக்கு நெருக்கமான ஒருவருக்கும் இடையிலான வியாபார உறவுகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு நாட்டின் சாதாரணப் பிரஜை எனும் பகடைக்காயை உருட்டி அந்நாட்டின் பிரபலங்கள் தமக்குள் விளையாடிக் கொண்டிருப்பது போன்றே எண்ணத் தோன்றுகிறது. இது வந்த வழியில் இன்னும் என்னென்ன வரப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே !

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *