துயர் போக்கடா!
கவிஞர் இடக்கரத்தான்
மனிதமுமே சிறிதேனும் இல்லார் – புனித
மண்தனையும் ஏய்த்துவக்கும் பொல்லார் – வாழ்வின்
புனிதமதை மிகமறந்து
புவிதனையும் மிகப்படுத்தி
வாழ்வார் – வீழ்ந்து – தாழ்வார்!
பிறர்துயரில் மகிழ்ச்சிமிகக் கொள்வார் – பெரும்
பொருள்பறிக்க வெறிபிடித்துத் துள்வார் – உயர்
அறவழியை மிகமறந்து
ஆதாயம் காணவழி
தேடுவார் – ஓடி – ஆடுவார்!
பேராசை பிடித்துமிக அலைவார் – பெரும்
பேய்த்தனங்கள் செய்ததனில் குலைவார் – என்றும்
நேராக்க முடியாத
நெளிவுவழி தனில்நடந்து
கெடுவார் – துயர் – படுவார்!
அன்புவீசை என்னவிலை? என்பார் – பிறரை
அடித்தவரும் அதன்துயரை உண்பார் – என்றும்
என்புதோல் போர்த்தவரும்
எளிதாக மண்ணுலகை
ஏய்ப்பார் – நலம் – தீய்ப்பார்!
தனையசைப்பார் யாருமிலை சொல்வார் – பெரும்
தலைக்கனத்தில் பிறர்கனவைக் கொல்வார் – என்றும்
தனைஆழம் புதைத்தழிக்கும்
தகுதியற்ற வழிதன்னை
நாடுவார் – தேடி – ஓடுவார்!
புனையாரின் குருட்டுத்தனம் புரிவார் – கண்ணைப்
பொத்திடவும் உலகொளிரின் எரிவார் – பெரும்
ஆனைவெளிறி ஓடுதல்போல்
அதட்டிவரும் மெய்க்கெனவே
அஞ்சுவார் – அழுது – கெஞ்சுவார்!
மேலொருவன் பார்ப்பதனை மறப்பார் – தனை
மடக்கயாரும் இல்லையென்று பறப்பார் – எந்தக்
காலமுமே ஏதும்செய்யா
கடவுள்கற் சிலைஅஞ்சேன்
என்பார் – தீ – பண்பார்!
தெய்வம்நின்று கொல்லுமெனல் பொய்யடா – உடன்
தேடிவந்து பாய்ந்தடித்தல் மெய்யடா – இனிச்
செய்வதையும் நலம்காக்கச்
செய்வதற்கு நினைவலைகள்
தேக்கடா – துயர் – போக்கடா!