கவிஞர் இடக்கரத்தான்

 

 

மனிதமுமே சிறிதேனும் இல்லார் – புனித

மண்தனையும் ஏய்த்துவக்கும் பொல்லார் – வாழ்வின்

புனிதமதை மிகமறந்து

புவிதனையும் மிகப்படுத்தி

வாழ்வார் – வீழ்ந்து – தாழ்வார்!

 

பிறர்துயரில் மகிழ்ச்சிமிகக் கொள்வார் – பெரும்

பொருள்பறிக்க வெறிபிடித்துத் துள்வார் – உயர்

அறவழியை மிகமறந்து

ஆதாயம் காணவழி

தேடுவார் – ஓடி – ஆடுவார்!

 

பேராசை பிடித்துமிக அலைவார் – பெரும்

பேய்த்தனங்கள் செய்ததனில் குலைவார் – என்றும்

நேராக்க முடியாத

நெளிவுவழி தனில்நடந்து

கெடுவார் – துயர் – படுவார்!

 

அன்புவீசை என்னவிலை? என்பார் – பிறரை

அடித்தவரும் அதன்துயரை உண்பார் – என்றும்

என்புதோல் போர்த்தவரும்

எளிதாக மண்ணுலகை

ஏய்ப்பார் – நலம் – தீய்ப்பார்!

 

தனையசைப்பார் யாருமிலை சொல்வார் – பெரும்

தலைக்கனத்தில் பிறர்கனவைக் கொல்வார் – என்றும்

தனைஆழம் புதைத்தழிக்கும்

தகுதியற்ற வழிதன்னை

நாடுவார் – தேடி – ஓடுவார்!

 

புனையாரின் குருட்டுத்தனம் புரிவார் – கண்ணைப்

பொத்திடவும் உலகொளிரின் எரிவார் – பெரும்

ஆனைவெளிறி ஓடுதல்போல்

அதட்டிவரும் மெய்க்கெனவே

அஞ்சுவார் – அழுது – கெஞ்சுவார்!

 

மேலொருவன் பார்ப்பதனை மறப்பார் – தனை

மடக்கயாரும் இல்லையென்று பறப்பார் – எந்தக்

காலமுமே ஏதும்செய்யா

கடவுள்கற் சிலைஅஞ்சேன்

என்பார் – தீ – பண்பார்!

 

தெய்வம்நின்று கொல்லுமெனல் பொய்யடா – உடன்

தேடிவந்து பாய்ந்தடித்தல் மெய்யடா – இனிச்

செய்வதையும் நலம்காக்கச்

செய்வதற்கு நினைவலைகள்

தேக்கடா – துயர் – போக்கடா!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *