தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்
-இல.மேனகா
பெண்ணியம் என்பது பெண்ணின் சமூக நிலையை மறுமலர்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. இது பாலினப் பாகுபாடு தொடர்பான சமூகப்பண்பாட்டு வேர்களை இனம் கண்டு கொள்ளவும், குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் முறையை உணர்ந்து கொள்ளவும் பெண்ணியம் தெளிவான வரையரை அளிக்கிறது. இது ஆணிய பண்பாட்டுக் கட்டமைப்பில், பாலிய உருவாக்கம் ஊடுருவியிருப்பதையும், அதனால் பழைய மதிப்பீடுகள், புதிய பண்பாட்டு மதிப்பீடுகளால் எத்தகைய மாற்றத்தைப் பெறுகின்றன என்பதையும் நன்கு அறிய உதவுகின்றது. இவற்றைத் தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காவியங்கள், புராணங்கள், நவீனஇலக்கியங்கள் வழி பெண்ணியச் சிந்தனைகளை முன்வைத்து இக்கட்டுரைப் படைக்கப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் பெண்ணியக்கூறுகள்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையான நூல்களில் ஒன்றான தொல்காப்பியம் ஆண்களின் நிலை குறித்து,
“பெருமையும் உரனும் ஆடூஉமேன” (தொல்-களவு-நூற்7) என்று பெருமையும், வலிமையும் ஆணுக்குரிய பண்புகளாகவும்,
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய” (தொல்-களவு-நூற்8) இவை பெண்ணுக்குரிய பண்புகளாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது அச்சம், மடம், நாணம் இவையெல்லாம் பெண்ணுக்குரிய குணங்களாக தொல்காப்பியம் கூறுகின்றது. மேலும் “கற்பு” என்பது பெண்ணிற்கு கட்டாயமாக்கப்படுகிறது.
பெண்களின் உரிமை சங்ககாலத்தில் தடை செய்யப்படவில்லை. பெண்கள் கல்வி கற்று, நன்கு புலமை பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். மேலும் சங்க இலக்கியமானது பெண்களின் நிலையினை பலவாறாக கூறுகின்ளது. அஃதாவது,
“பெண் பிறவி இழிவுக்குரியது” என்று யாரும் கருதவில்லை (ஐங்;:257)
“மணக்கொடை(வரதட்சணை) கொடுமை இல்லை” (அகம்:280)
“நல்லிற்பாவையன்ன நல் லோற் கணவன்” (பதிற்றுப்பத்து61)
“மறுவில் கற்பின் வாணுதல் கணவன்” (திருமுருகாற்றுப்படை:அடி 6)
என்றவாறு பெண்ணுக்குப் பெருமை தேடித்தரும் வகையில் சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். சங்ககாலத்திலும் பெண்ணிற்கு கற்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆணைத் தலைமையாகக் கொண்ட குடும்பம் வரவேற்கப்பட்டது.
திருக்குறள் வழி அறியலாகும் பெண்ணியம்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள் பெண்ணியம் பேசுகிறது. அஃதாவது,
“மனைத் தக்க மாண்புடையாளாகித் தற்கொண்டாள்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (குறள்:7)
என்கிறது. அதாவது குடித்தனத்துக்கு ஒத்த பெருமையுடையவளும், தன் கணவனுடைய வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்கிறவளுமான மனைவியே சரியான வாழ்க்கைத் துணைவி என்கின்றார் வள்ளுவர். மேலும்,
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்” (குறள்:54)
அதாவது கற்பு என்ற மன உறுதியுள்ள பெண்ணைக் காட்டிலும் பெருமை தரக்கூடிய பொருள் இவ்வுலகத்தில் வேறு என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை என்கிறார். மேலும் இவர் குடும்பம், கற்பு இரண்டும் பெண்ணிற்குத் தேவை என்றும் வலியுறுத்துகின்றார்.
இடைக்காலத்தில் பெண்களின் நிலை
நீதி நூல்களிலிருந்து காப்பியத்திலும் அறவழி வாழ்க்கை நடத்தல், இல்லறத்தைப் பேணிக்காத்தல், கலைகளைத் தெய்வமாக வழிபடல் ஆகியன பெண்ணின் கடமைகளாக வரையறுக்கப்பட்டிருந்தன. ஆண்கள் குடும்ப வளத்தைக் காக்கக் கூடிய நிலையில் கற்புடன் திகழும் பெண்களைத் தெய்வமாகக் கருதினர். ஆனால் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் புராணகாலத்தில் பெண்களின் நிலை மேலும் தாழ்வடைந்தது.
பக்தி காலத்தில் சமயங்களின் எழுச்சியால் சாதிக்கட்டுப்பாடுகளை மீறிப் பெண்கள் கோவில் வழிபாடு, விருந்தோம்பல், சமூகப் பணிகளில் கலந்து கொள்ளுதல் ஆகியவற்றை மேற்கொண்டனர். அரச, பிராமண, வேளாளர் குலப் பெண்கள் சமய வாழ்வில் பங்கேற்றனர். அதற்குப் பின்னர் சிற்றிலக்கியங்களில் ‘பதிவிரதை’ என்ற கொள்கையை வரையறுத்தலோடு பெண்ணைப் பாலியல் பொருளாகக் கருதினர்.
நவீன இலக்கியத்தில் பெண்கள்
மேலை நாடுகளில் தோன்றிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியன இந்தியாவில் ஆங்கிலக்கல்வியின் வரவால் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றை இலக்கியங்கள் எடுத்துக்காட்ட முனைந்த போது தான் பெண்முன்னேற்றமும் முளைவிடத் தொடங்கியது.
தமிழில் முதன்முதலில் எழுந்த புதினம் வேத நாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’(1879). அந்நாவலைத் தொடர்ந்து வந்த மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்’(1898) என்ற இவ்விரண்டு நாவல்களும் பெண்கல்வி, விதவை மறுமணம், முதலியவற்றைப் பற்றி பேசுகின்றது.
“தமிழின் முதல் நாவலாசிரியராகத் திகழ்வதற்கு முனிசீப் வேதநாயகம் பிள்ளையிடத்திருந்த தகைமைகள் பெண் விடுதலை இயக்கம், சன்மார்க்க நெறிப்பிரச்சாரம், சமூக சீர்திருத்தம் போன்ற துறைகளில் அவருக்கிருந்த ஈடுபாடு ஆகியவை வேத நாயகம் பிள்ளையின் பெண் விடுதலை உணர்வைத் தோற்றுவிக்கக் காரணிகளாக இருந்தன”1 என்று கா.சிவத்தம்பி கூறுகின்றார்.
தமிழகப் பெண்ணிய முன்னோடிகள்
தமிழ் இலக்கியத்தில் பெண்களின் நிலையை மாறுபட்ட கண்ணோட்டத்தில் எடுத்துக் கூறியவைகளுள் தேசியப் போரட்டக் காலத்தைச் சேர்ந்த பாரதியாரும், பெரியாரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
பாரதியார்
தேசியப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பாரதியார் பெண் கல்வி, பெண் விடுதலை குறித்து எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கியத்தில் பெண்ணியக் கூறுகளை அறிவதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.
“நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” (புரட்சிப்பெண் – பா.எ.4) என்று சாடுவதோடு நில்லாமல்,
“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடைமையைக் கொளுத்துவோம்” (புரட்சிப்பெண்- பா.எ.7) என்றதோடு,
“ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்” (புரட்சிப்பெண் – பா.எ.4) என்றும் கூறுகின்றார். இவ்வாறாக பாரதியாரின் கவி வரிகளின் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்தார் என்று கூறினால் அது மிகையாகாது. இதனால் தான் பாரதியின் கவிதைகள் வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெறுகின்றன.
பெரியார்
பெண் விடுதலை குறித்து எழுந்த சீர்திருத்த இயக்கங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கமானது பெண் என்பவள் ஆணின் போகப் பொருள் என்பதை மறுத்து, ஆணின் பாதி என்பதை மாற்றி பெண்ணினம் தன்னை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவி செய்தது. பெரியாரை “தமிழ் இலக்கியப் பெண்ணிய முன்னோடி” எனக் கூறலாம்.
அவர், “பெண்களைக் கணவனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், புகழ் பெறும் பெண்மணியாகவும் வேண்டும். பெண்ணும் தன்னை பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. நமக்கும், ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? ஏன் உயர்வு தாழ்வு? என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் எழவேண்டும். ஏனெனில் பெண் என்பவள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படுதல் கூடாது. அவர்கள் புது உலகைச் சித்தரிக்க வேண்டும்”2 என்றெல்லாம் பெரியார் தம்முடைய பொதுவுடைமைச் சிந்தனைகளாக வலியுறுத்துகின்றார்.
இவ்வாறாகப் பாரதி, பெரியார் மட்டுமல்லாது இன்னும் பல அறிஞர்களும் கவிஞர்களும் பெண் முன்னேற்றத்திற்காகவும் பெண் கல்விக்காகவும் பாடுபட்டனர். சங்ககாலத்தில் பெண்களின் நிலை குறித்தும் அவளின் கல்வி, வாழ்க்கைமுறை, ஆண்கள் பெண்களை எவ்வாறெல்லாம் நடத்தினர் என்பது பற்றியும் இக்காலத்தில் பெண்களின் முன்னேற்றம் கல்வி மற்றும் கல்வியினால் அவர்கள் அடைந்த பயனையும் பெண்களை இலக்கியங்கள் எவ்வாறெல்லாம் சித்தரிக்கின்றன என்பது பற்றியும் பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்கள் பற்றியும் இக்கட்டுரையானது விவரிக்கின்றது.
தாய் வழி சமூகத்தில் பெண்ணுக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டதால் விவசாயம் முதல் கல்வி ஈறாக அனைத்து துறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தினாள். தொழில் நுட்பப்புரட்சி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் பெண்கள் விண்வெளி வரை சாதனை புரிந்து பாரதியின் கனவை நனவாக்கி வருகின்றனர்.
அடிக்குறிப்புகள்:
- கா. சிவத்தம்பி – நாவலும் வாழ்க்கையும், பக்:52
- ஈ.வெ.ரா. பெரியார் – சுயமரியாதைத் திருமணம் ஏன்?, பக்:12
மேற்கோள் நூல்கள்:
- முனைவர் அரங்க.மல்லிகா – தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம்
- நாஞ்சில் ஆனந்தன் – சங்க இலக்கியத்தில் மனித உரிமைகள்
- பாரதியார் கவிதைகள் – கழக வெளியீடு
*****
கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
தஞ்சாவூர்.
நன்று கோட்பாட்டு குறித்து இன்னும் ஆழமான புரிதலுடன் கட்டுரை அமைந்தால் சிறப்பாக இருக்கும்
Excellent work mam… ur article very useful and congrats for ur future work
வணக்கம் எனது 2வது மகளுக்கு நல்ல இலக்கிய பெயர் பட்டியல் தேவைப்படுகிறது. தங்களிடம் இருந்தால் தயவுசெய்து அனுப்பவும். ஆரம்ப எழுத்து ‘சு’
எனது Whatsapp 98846011 30.
நன்றி,
ராஜீவ் காந்தி