அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 101.

0

பார்த்தோல்டி அருங்காட்சியகம், கோல்மார், பிரான்சு

முனைவர் சுபாஷிணி

அமெரிக்காவை நினைத்தால் நம் மனதில் முதலில் தோன்றுவது பிரம்மாண்டமாக நியூ யார்க் மாநிலத்தின் லிபர்ட்டி தீவில் உயர்ந்து நிற்கும் சுதந்திர அன்னையின் சிற்பம் என்றால் அதனை மறுக்க முடியாது அல்லவா? இந்தச் சுதந்திர அன்னையின் சிலை உருவாக்கத்தின் பின்னணியை அறிந்து கொள்வதும் சுவாரசியமான ஒன்று தானே.

unnamed (1)

முதன் முதலில் பிரஞ்சுக்காரரான எடுவர்ட் (Edouard de Laboulaye) அமெரிக்காவில் சுதந்திர சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சின்னம் ஒன்று கட்டப்பட வேண்டும் என்ற தன் கருத்தினை 1865ஆம் ஆண்டு வெளியிட்டார். இதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரஞ்சு சிற்பியான திரு.பார்த்தோல்டியிடம் (Frederic Auguste Bartholdi) இச்சிலையை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனைக் கட்டுவதற்குப் போதுமான பொருளாதார பலமின்றி இருந்த சூழலினால் பல கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும், லாட்டரி, கேளிக்கை நிகழ்வுகள் என்ற வகையிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும் இதனைக் கட்டி முடிக்கத் தேவைப்படும் பணத்தைச் சேகரிக்கும் பணி மிகத் துரிதமாகவும் விரிவாகவும் நடைபெற்றது.

unnamed (2)

சிற்பி பார்த்தோல்டி செம்பினால் உருவாக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவித் தேவைப்பட்டதால் ஐஃபெல் ( Alexandre Gustave Eiffel ) அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் பணியில் இணைந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டார். ஐஃபல் அவர்கள் தான் உலக அதிசயங்களில் ஒன்றாக இன்று பாரீஸ் நகரில் உயர்ந்து நிற்கும் ஐஃபெல் கட்டிடத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்தச் சிற்பம் வடிவம் பெற்று 1884ஆம் ஆண்டு முழுமை பெற்றது. ப்ரான்ஸிலிருந்து கடல் மார்க்கமாகக் கப்பலில் பயணித்து நியூ யார்க் நகரை ஜூன் மாதம் 1885ஆம் ஆண்டு வந்தடைந்தது. தனித்தனி பகுதியாக 350 பாகங்களாக 214 பெட்டிகளில் வைக்கப்பட்டு வந்த இந்தச் சிற்பம் நியூ யார்க் நகரம் வந்தடைந்த பின்னர் அக்டோபர் மாதம் 1886ஆம் ஆண்டு முழுமைப்படுத்தப்பட்டது.

unnamed (3)

அமெரிக்க சுதந்திர தேவி சிலையை வடிவமைத்த பிரஞ்சு சிற்பி பார்த்தோல்டி 1834ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி பிரான்சின் கோல்மார் நகரில் பிறந்தார். ”சுதந்திர சிந்தனை உலகிற்கு வெளிச்சம் தரும்” (Liberty Enlightening the World) என்ற கருத்துடன் அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை ஒரு சின்னமாக உருவாக்கியது உலகுக்கு இவர் அளித்த முக்கிய பங்களிப்பாகும்.

பார்த்தோல்டி அடிப்படையில் இத்தாலிய, ஜெர்மானிய பின்புலத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். பிரான்சில் இளமை முதலே ஓவியம் சிற்பக்கலை என ஆர்வம் கொண்டிருந்தவர். தனது சிற்பக்கலைப் பயிற்சியைப் புகழ்மிக்க சிற்பிகளிடம் பெற்றவர். தனது சிறந்த படைப்புக்களினால் பாரிஸ் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய நகர்களிலும் சிற்பக்கலை வடிப்பதற்காக அழைக்கப்பட்டார். அதிலும் குறிப்பாக 1868ஆம் ஆண்டில் எகிப்தின் சூயஸ் கால்வாயின் கலங்கரை விளக்கத்தை வடிவமைத்துக் கட்டும் பணி இவருக்கே வழங்கப்பட்டது. “எகிப்து ஆசியாவிற்கான ஒளியை ஏந்திக்கொண்டிருக்கின்றது” (Egypt Carrying the Light to Asia) என்ற தலைப்பில் இக்கலங்கரை விளக்கத்தை அவர் வடிவமைத்தார். இது தவிர பிரான்சில், அதிலும் குறிப்பாக தான் பிறந்த கோல்மார் நகரில் புகழ்மிக்க சிற்பக்கலைப் படைப்புக்களை இவர் உருவாக்கியுள்ளார்.

unnamed (4)

கோல்மார் நகரில் உள்ள பார்த்தோல்டியின் பிறந்த இல்லம் இன்று அவர் பெயரில் இயங்கும் அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. ஒரு சிறிய அரண்மனை போன்ற கட்டிடம் இது. மூன்று மாடிக் கட்டிடத்தில் பார்த்தோல்டி அவர்களின் அனைத்து படைப்புக்களைப் பற்றிய தகவல்களும் சிற்பங்களும் இடம் பெறுகின்றன. அமெரிக்க சுதந்திர தேவி சிலை செய்வதற்காக அவர் செய்த முதல் மாடல் அமைப்பும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

unnamed (5)

இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
30 rue des Marchands, 68000 Colmar, France

அருங்காட்சியகம் பற்றிய மேலதிகத் தகவல்களை www.musee-bartholdi.com என்ற வலைப்பக்கத்தின் வழி அறியலாம். இந்த அருங்காட்சியகம் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் மூடப்பட்டு ஏனைய நாட்களில் காலை 10 முதல் மாலை 6 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை வடித்த பெருமையைப் பிரான்சு பெறுகின்றது. பார்த்தோல்டியின் ஒளி மிகுந்த சிந்தனையின் சிற்ப வடிவமாக இந்தச் சிலை அமைந்திருக்கின்றது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *