மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -8
க. பாலசுப்பிரமணியன்
திருக்கருகம் – அருள்மிகு கருணாகரப் பெருமாள்
நிலங்களில் பொழிந்திடும் நீருடைக் கார்மேகம்
நிறத்தினில் கருமையே நெஞ்சத்தில் கருணையே
நிலவிடும் எண்ணத்தில் கண்ணனின் வண்ணமே
நிழலென இருந்தும் கருணையில் வருணனே !
கடலுள்மீனாய் நுழைந்தாய் மறைகளைக் காக்க
காட்டுப்பன்றி வந்தாய் புவியினை மீட்க
கடைந்திடக் கடலை ஆமையாய் அமைந்தாய்
கருணையின் வடிவங்கள் காட்டிய கண்ணா !
அழகிய திருவடி அண்டங்கள் அளந்திட
அழகிய சிங்கனாய் இரணியன் அழித்திட
அழகிய தோளில் கலப்பையை ஏந்தியே
அருளினை வழங்கிய அச்சுதா வாழி !
தோளுடை வலிமைக்குத் தோழன் பலராமன்
தூதுவன் அறிவுக்குத் துவாபரச் செல்வன்
தருமத்தின் பொருளாய் தயரத இராமன்
தன்னிகர் இல்லாத் தாமரை மணாளன் !
எத்தனை வடிவங்கள் எடுத்தாலும் கண்ணா
சிந்தனை அனைத்தும் அடியவர் அன்றோ ?
வந்தனை செய்திடும் உள்ளங்கள் அனைத்திலும்
விந்தையே! பிறந்தாய் வடிவங்கள் புதிதாய் !
அலைகடலில் அயர்ந்தாலும் அண்டங்கள் காப்பவனே
அலைகின்ற நெஞ்சுக்கு அமைதியைத் தருவாய் !
அடியார்கள் துயர்நீக்க அவனியெல்லாம் செல்பவனே
அழையாதும் வந்திடுவாய் அந்தரங்கம் அறிந்தவனே!