க. பாலசுப்பிரமணியன்

திருக்காவலம்பாடி

அருள்மிகு கோபாலகிருஷ்ணப்  பெருமாள் திருக்கோவில்

 297199_124390817667684_114669075306525_115432_136719534_n

கவளச் சோறைக் களிப்புடன் ஏற்கும்

கரியின் துயரைக் கண்ணனே துடைக்கக்

கலியினை நீக்கும் காவலன் புகழைக்

கற்களில் வடித்த காவலம் பாடி !

 

நெருப்பினில் பிறந்தவள் நெருப்பாய் எரிந்திட

நினைப்பாய் நின்றவள் நினைவாய் மறைந்திட

உமையாள் நினைவில் உருத்திரன் ஆடினான்

இமைகள் அசையா அமரர்கள் நடுங்கிட !

 

சினத்தில் சிவந்தது சிவனின் சிந்தை

சிதறிய கனலாய் சிகையும் வீழ்ந்திடச்

சீறிய நெருப்பில் பதினோரு சிவனே

சீற்றத்தை தணித்திட சேர்ந்தனர் அமரரே !

 

அமரர்கள் வேண்டிட அரங்கனும்  வந்தான்

அமைதியைக் காக்க  அரனிடம்  வேண்டினான்

அச்சுதன் கண்டே அமைதியைப் பெற்றான்

ஆடியபாதன் வேண்டினான் அரங்கனின் அருளே !

 

பதினோரு வடிவில் கண்ணனின் கருணை

பாலகன் கோவிந்தன் பசுவுடை கோபாலன்

பரவசம் கொடுக்கும் பதினோரு வடிவங்கள்

பார்த்ததும் சிவனே பதுமையாய் நின்றான்.!

 

மனத்துள்ளே நீயிருந்தால் மங்கலமே பொங்கிவிடும்

மலரடிகள் நீதந்தால் மாயையெல்லாம் விலகிவிடும்

மாதவனே ! யாதவனே ! மனமிரங்கி அருள்தருவாய்

மார்கழியில் பேரருளை உனையன்றி யார்தருவார் ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *