மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) 18
க. பாலசுப்பிரமணியன்
திரு பரமேஸ்வர விண்ணகரம் அருள்மிகு வைகுந்தப் பெருமாள் கோவில்
கைலாசனின் அருளாலே களிப்புற்றான் விரோசனனும்
கையிரண்டில் தவழ்ந்தனவே காவல் தெய்வங்களே
கைகூப்பிக் கண்ணனையே காலமெல்லாம் தொழுதிடவே
கைலாயனின் கண்ணருகில் கண்ணனின் விண்ணகரம் !
பரமசிவன் கருணையினால் பரமபதம் வந்தது
பாரெல்லாம் போற்றிடவே பேரருளைத் தந்தது
பல்லவனின் பேரன்பால் பரமேஸ்வரம் அமர்ந்தது
பரவசத்தில் அடியார்களுக்கு அருட்சுனையாய் அமைந்தது !
ஆழ்கடலின் நடுவினிலே அமைதியாய் அயர்ந்தவனே
பாழ்மனமே அலைபாய நிலைக்காக்க வருவாயோ ?
ஊழ்வினையே ஒன்றாகி உள்ளமெல்லாம் உலுக்கிவிட
யாழிசையாய் வந்திடுவாய் என்னுயிரை மீட்டுவிட !
அன்னையவள் சொல்காக்கக் கானகத்தில் நடந்தாய்
அரியணையின் நலம்காக்கத் தூதுவனாய் நடந்தாய்
அடியவர்கள் மனம்காக்க அகிலமெல்லாம் நடந்தாய்
அண்டமெல்லாம் காத்திருக்கும் உன்னடிகள் எதிர்நோக்கி !
தூணொடித்து நடுவாயிலில் அமர்ந்த நரசிம்மா !
வில்லொடித்து வைதேகி கைப்பிடித்த காகுந்தா !
சொல்லெடுத்து நான்வந்தேன் சுவையாக உனைப்பாட
மண்ணெடுத்த பிறவியிலே வைகுந்தா! வாழ்வளிப்பாய் !
வைகுந்தம் எங்கென்று யாரேனும் அறிந்தாரில்லை
வைகுந்தன் வடிவழகை யாரேனும் கண்டாரில்லை
வைகுந்தன் பெயர்சொல்ல யாரேனும் மறந்தாரில்லை
வைகுந்தா ! வையகத்தில் உன்னருளிருக்க வீழ்ந்தாரில்லை!