மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி )- 19
க. பாலசுப்பிரமணியன்
திருக்கடிகை (சோளிங்கர் )
அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில்
சிந்தையிலே சினமெடுத்துச் சிங்கமென வந்தவனே
விந்தையென வானவரும் பார்த்திருந்த நரசிம்மா !
அகந்தையிலே தானென்று தலைவிரித்த இரணியனை
கந்தையெனப் பிரித்தெடுத்துக் கதைமுடித்த காருண்யா !
மலையமர்ந்து அருள்செய்யும் மங்கலனே மாதவனே
மாருதியை துணைவைத்து மனமெல்லாம் ஆள்பவனே
மலையான துயர்நீங்க மலையேறி வந்தவர்க்கு
மடைதிறந்த வெள்ளமென அருள்செய்யும் அச்சுதனே !
பயத்தோடு பலமிழந்து தன்வாழ்வைத் தானிழந்து
பலனில்லாக் கோள்களின் பார்வையிலே பரிதவித்துப்
பகடையென உருள்கின்ற வாழ்வினையே காப்பவனே
பகலவனின் பேரொளியாய் அருள்கின்ற அழகியசிங்கா !
நிலைகுலைந்த மனம்கொண்டு பித்தான உள்ளங்களில்
நிழலாகத் தானமர்ந்து நினைவெல்லாம் நிறைந்தவனே
நிறைவான நலம்தேடி நின்தாள்கள் அடைந்தவரை
நிழலாகப் பின்தொடர்ந்து விதிமாற்றும் வல்லவனே !
ஏழுமலை எறிவந்தால் என்துயர்கள் நீங்கிடுமோ ?
நூறுமுறை பெயர்சொன்னால் நூலிழையாய் மறைந்திடுமோ ?
சாத்துமுறை எதுவென்று யானறியேன் சடகோபா !
சத்தியனே! சரணமென வந்திட்டேன் சந்நிதியில் !
சோதனைகள் விலகிவிடும் சோகங்கள் அழிந்துவிடும்
சோர்ந்திட்ட உள்ளங்களில் சுதர்சனின் அருள்பிறக்கும்
சுமைகளெல்லாம் இறங்கிவிடச் சூழ்வினைகள் மறைந்துவிட
சுவையான வாழ்விற்கு சோளிங்கர் நலம்பெருக்கும் !