வீணையின் நாதம்..!
======================
பல்லவியே பாடலில் முதல்நிலையாய் முகம்காட்டும்..
……….பக்கவாத்யமும் அதனுடன் சேர்ந்தாலதுவே இன்னிசை.!
உல்லாசமாய் ஊதுகின்ற நெடுங்குழல்நாத ஸ்வரத்துடன்..
……….உருளைத்தவிலும் மேளமுமொருங்கே சேர்மினது கச்சேரி.!
புல்லாங்குழலெழுங் காற்றும்…பொங்கியெழும் அருவிப்..
……….புனலெழுப்பும் நீரோசையும் நமக்கொரு மெல்லிசையே.!
வில்லுமிழ்ந்து சீறிப்பாயும் கூரான அம்பினொலியும்..
……….வீணையின் நாதம்போல காதுக்கினிய இசையொலியாம்.!
நெல்கதிர்கள் தலைவணங்கி யசைந்தாடி இசைக்கும்போது..
……….நற்பாவலரும் கவிஞரும் பாடுவராம் முல்லைப்பண்ணில்.!
பல்முளைக்காப் பாலகன்தன் பவளவாய்த் திறந்ததன்..
……….பல்வித மழலைப்பேச்சே பெற்றதாய்க்கு இன்னிசையாம்.!
மெல்லிய இரட்டைக் குழல்மகுடியின் மயக்குமொலிக்கு..
……….மகாதேவன் முடிமேல் தவழும்நல்ல பாம்புமேயடங்கும்.!
வல்லமை பொருந்திய இராவணனின் பண்ணிசையான..
……….வீணையின் நாதவொலிக்கந்த ஈஸ்வரனே மகிழ்ந்தானே.!
பரந்த பசுமைக்காட்டில் குலைநடுங்கும் குரல்கேட்டு..
……….பலவிதவிலங்கும் பதுங்குகுழி தேடுமதுவே “சிங்கநாதம்”!
பரமாத்மா பகவான் கிருஷ்ணனெழுப்பிய நாதமாம்..
……….பாரதத்போர் வீரரைக் கலக்கியததுவே “சங்கொலிநாதம்”!
பரமனைத் திருப்திப்படுத்த முனிவர்களும் யோகிகளும்..
……….பல்குரலில் இனிதாய்வரும் நான்மறையே “வேதநாதம்”!
சரஸ்வதியின் திருக்கரத்தில் வீற்றிருக்கும் வாத்தியஒலியே..
……….சகலஜீவியும் கேட்டறிவு பெறுமற்புத “வீணையின்நாதம்”!
==================================================================
நன்றி:: தினமணி கவிதைமணி::07-01-18
நன்றி:: கூகிள் இமேஜ்.
அருமை !
நன்றி..திரு க.பா மணியன் அவர்களே