பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

26696782_1529077903813070_863492715_n
பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.01.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி (145)

  1. கடலுக்குள் போன மச்சான்
    காணாம போயிமாசம் ஒண்ணாச்சு!
    கடிகார முள்ளாட்ட உழச்சுக்
    களச்சுப்போயி…எக்கச்சக்க மீனோடு
    கரை திரும்பி வருவார்னு
    காத்திருந்து காத்திருந்து
    காலந்தான் கரைகிறது…
    எங்க மச்சான் இருக்கீங்க?
    எப்படி இருக்கீங்க??
    பொண்டு புள்ள இங்கிருக்க
    போன இடம் எங்கே மச்சான்..
    மனையாளெனைப்பாக்காம
    மனுசனால இருக்க முடியாதே!!
    புயல் போயி நாளாச்சு _
    அயல் தேசமும் தேடியாச்சு _
    ஆனாலும் உங்களக்
    காணாமல் அழுவறமே!!
    வருவீங்க வருவீங்கனு
    வழி மேல விளி வச்சு
    வெகுநாளாக் கிடக்கிறமே..!!..
    நீங்க வரும் வரைக்கும்
    நாங்க போகமாட்டோம்!!
    மணல் பரப்ப விட்டுப்புட்டு
    மனை போக மனசில்லே _
    மணிக்கணக்கப்பாத்துகிட்டே
    மதி மயங்கிக்காத்திருக்கோம்..
    எதிர்பார்க்கும் எங்கள
    ஏமாத்திப் போடாம
    எங்கே இருந்தாலும்
    இங்க வந்து சேரு மச்சான்!!
    அரசாங்க சேனைகளும்
    ஆளம்பு சொந்தங்களும்
    ஆம்படயானுன்ன சல்லட போட்டு
    ஆழ்கடலில்..அதன் ஓரங்களில்
    அணுவனுவாத் தேடுறாங்க!!
    அதோ..இதோ..வரும்நல்ல செய்தியினு
    ஆண்டவனக்கும்புட்டுட்டு
    அப்பிடியே உக்காந்திருக்கோம்…
    நம்மபொழப்பு நாரப்பொழப்புத்தான்!!
    நல்லமீனெடுக்க படும்பாடு நரகந்தான்!!
    நடுக்கடலுக்குள்ளே
    நாராயணன் இருக்காராம்..
    நான் அவரையுந்தான் கும்புடுறேன்.
    ஏதாச்சும் ஒரு சாமி
    எம்புருசனக் கொண்டுவந்துசேக்காதா?
    இருக்காரா? இல்லையானே
    இதுவரைக்கும் தெரியாம
    இடியா நெஞ்சொடஞ்சு
    இருப்பத விட வேறு என்ன
    இன்னலுண்டு உலகத்தில்!!
    அனுபவிச்சுப்பாத்தாத்தான்
    அதன் வழி தெரியும் அடுத்தவர்க்கு!!
    இனி மேலேனும் இதுபோல ஆகாம
    இயன்றவரை எச்சரிக்கை
    இயற்கை இடர் காலங்களில்
    இருப்போமே எல்லோரும்!!
    இனிமேலேனும் எங்களைப்போல்
    இன்னல் எவருக்கும் வேண்டாமே???
    (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…பவானி…
    ஈரோடு…9442637264)

  2. கடலலையும் கடிகாரமும்..
    =+++===++=+++++=======++×
    ஆர்ப்பரித்து எழுந்து வரும்
    ஆழிப் பேரலைகள்
    ஓய்வதோ மாய்வதோ
    ஒருபோதும் கிடையாது!!
    சீற்றத்தின் ஆற்றல்
    மாற்றத்துக்குரியது!! ஆனால்
    மாறாமல் வீசுவது அலை..
    கடிகாரமுள்ளும் சரியாகக்
    கடமையைச் செய்தால்தான்
    காலம் தரும் நேரத்தைக்
    காட்டிட முடியும்!!!
    கடலையும் கடிகாரமும்
    காட்டுவது நமக்கு எதை??
    இயங்குவது என்பது
    இண்றியமையாதது!!
    காலம் அறிந்து
    காரியமாற்றினால்
    ஞாலம்போற்றவாழமுடியும்!
    வெள்ளலைக்கு விடுப்பேது??
    முள் ஓடுவதற்கு ஓய்வேது??
    அலைச்சலென்று எப்போதும்
    அவை அலட்டிக்கொண்டதில்லை..
    இருபத்திநாலுமணி நேரத்தில்
    இருபாதியாய் பிரித்து
    உழைப்பு பாதி உறக்கம் மீதியென
    உருவாக்கி வைத்துக்கொண்டு
    உருப்படியாய்அதையும்செய்யாமல்
    உண்டு..உடற்சோர்வு கொண்டு..
    வீணாகக் காலத்தை வீணடிப்போருக்கு
    விளங்க வைப்பதை நினைவில்வைப்போம்!
    வெற்றி வாழ்க்கை வேண்டுமென்றால்
    கற்றிடுவோம் காலத்தின் அருமை!!
    பெற்றிடுவோம் அகிலத்தில் பெருமை!!
    சற்றும்சளைக்காதமுயற்சிதரும் மகிமை!!.
    (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)
    __________________________________

  3. காலம் கொடுக்கவிருக்கும் தண்டனை
    *******************************************

    நுகர்வுக் கலாச்சாரம் மிகுந்தது!
    நாடெங்கும் குப்பைக்கூளம் குவிந்தது!
    நச்சுக்கழிவுகள் கலக்கும் நதிகள்!
    நகரமயத்தால் அழியும் காடுகள்!

    ஆலைகள் வெளியேற்றும் நச்சுவாயுக்கள்!
    பாலைகளாகும் வளமிகு நிலங்கள்!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு!
    நிலத்தடி நீரின் குறைபாடு!

    பெட்ரோல் டீசல் நிலக்கரியென்ற
    புதைப் படிமங்களின் வெளிப்பாடு!
    பசுமையில்ல வாயுக்க ளெங்கும்
    பரவிச் செறிந்த நிலைப்பாடு!

    புவியின் வெப்பம் உயர்ந்துயர்ந்து
    பனிப்பாறைக ளெல்லாம் உருகியுருகி
    பரந்த கடலின்மட்டம் உயர்வதனால்
    புல்லும்கூட முளைக்கவுதவா பூமியென்றாகிடுமே!

    புவியின் இயற்கையைச் சிதைக்கின்றோம்!
    பருவநிலையின் மாற்றத்தை உணர்கின்றோம்!
    செயற்கை மயத்தை நிறைக்கின்றோம்!
    செம்மை வாழ்வைத் தொலைக்கின்றோம்!

    தவறுகள் செய்யும் நம்மனைவருக்கும்
    தக்கதண்டனை கிடைக்கும் காலம்
    தூரத்திலில்லை என்பதை உணர்ந்து
    தூக்கத்தில் இருந்து விழித்தெழுவோம்!

    மரபுசாரா எரிப் பொருட்கள்
    மண்ணின் வெப்பத்தைக் குறைத்திடுமே!
    புவியின் வெப்பத்தைக் குறைத்திடுவோம்!
    பூமிப் பந்தைக் காத்திடுவோம்!

     
    -ஆ. செந்தில் குமார்.

  4. கடலலை சொன்ன கீதை : அலையில்லா கடலுக்கு அழகில்லை !
    ஓடாத கடிகாரத்தால் ஒரு பயனுமில்லை!
    வீசாத தென்றலுக்கு பெருமையில்லை!
    துடிக்காத இதயத்திற்கு உயிருமில்லை!
    பாசமில்லா பிள்ளைகளால் பயனுமில்லை!
    உழைப்பில்லா மனிதருக்கு உயர்வில்லை!
    தமிழில் பேசாத தமிழருக்கு வாக்கில் இனிமையில்லை!
    ஈயாத செல்வத்திற்கு மதிப்பில்லை!
    உதவி செய்யா வாழ்க்கைக்கு அர்த்தமில்லை!
    இயற்கை என்றும் தன் பணி செய்ய மறப்பதில்லை!
    சுயநலமாய் என்றுமே இருந்ததில்லை!
    மனிதன் தன் கடமை செய்ய விரும்பவில்லை!
    பொது நலத்தை என்றுமே நினைக்கவில்லை!
    கீதை சொன்ன பாதையில் நாம் நடப்போம்!
    கடமை செய்வதிலே கடலலையாய் நாம் இருப்போம்!
    ஓடுகின்ற கடிகாரமாய் ஓயாமல் நாம் உழைப்போம்!

  5. உறங்கா அலைகள்…

    கடலில் அலைகள் அடிப்பதற்கே
    காலம் எதுவும் பார்ப்பதில்லை,
    உடலில் நல்ல தெம்பிருந்தும்
    உறங்கிக் கிடக்கும் மானிடனே,
    அடிக்கும் ஓசைக் கடிகாரமும்
    ஆளை வைத்தே எழுப்பிடினும்,
    உடையா துந்தன் சோம்பலென
    உரைத்துச் செல்லும் அலைகடலே…!

    -செண்பக ஜெகதீசன்…

  6. எச்சரிக்கை ஒலி

    கடிகார முள் பார்த்து
    காலையில் உதிப்பதில்லை கதிரவன்

    அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு
    அலறி எழுவதில்லை அலைகள்

    நேரகாலம் பார்க்காமல் இந்த இயற்கை
    நேர்த்தியாய் தன் பணி செய்கிறது

    வாரிசுகளுக்கு வாரிக் குவிக்கத்தான் உழைப்பென்றெண்னினேன்
    வையகத்தை வாழ்விக்கவே ஓடாய் தேய்கிறேனென்று காதில் உரைத்துச் சென்றன அலைகள்

    உழைத்து உழைத்து ஓடாய் தேய்கிறது இயற்கை- உனக்காக
    உணராமல் நாளும் அதை அழித்துக் கொண்டிருக்கிறாய் நீ

    இந்நிலை நீடித்தால் இப்பூவுலகில் – மனிதா
    இரங்கற்பா பாட காலம் கூடும் வெகு விரைவில்
    இயற்கைக்கு அல்ல.. அதை அழிக்கும் உனக்கு.. எனவே
    இனியும் தாமதிக்காமல் இயற்கை அன்னையை காப்பாற்றி உனை காத்துக்கொள் – எனும்
    எச்சரிக்கை ஒலி எழுப்பவே நான் வந்தேன்.

  7. கார்கால மேகக் கருக்கூட்டும் வானத்தில்
    கதிரோன் ஒளிதெரியா கடல் விளிம்பில் தூரத்தில்
    கால நிலை மாற்றம் கடிதாய் நிகழ்கிறது.
    நிலை மாறும் காலத்தில் நேரந்தனைக் காட்ட
    அலை மோதும் கரை தன்னில் அழகாயோர் கடிகாரம்.

    அதையங்கே வைத்தது யார் அதற் கென்ன வேலையங்கு?
    கடலோரக் கடிகாரம் காட்டுவதோ ஆறுமணி
    கயிறொன்றை அதனோடு கட்டி வைத்து முள்ளார்கள்
    இடமின்றிக் கடிகாரம் இக்கரையில் கிடக்கிறது
    எதற்காக எதற்காக ஏன் இங்கே இருக்கிறது?

    அலையோடு அலையாக அடிபட்டு வந்ததுவா?
    அல்லாது வேண்டுமென்றே அதையங்கு வைத்தாரா?
    சரியாக ஆறுமணி காலையிலா மாலையிலா
    தெரியாது, கடல் விளிம்பில் செங்கதிரோன் எங்குற்றான்?
    ஒன்றன் பின் ஒன்றாக ஓராயிரம் கேள்வி
    பின்வந்து நிற்கிறது பிறிதொன்றும் தோன்றாது
    காலமளந்திடுமக் கருவிதனைப் பார்க்கின்றேன்.

    அண்டப் பெருவெளியோ அகன்று விரிகிறது
    அதனுள்ளே காலமும் சேர்ந்தே விரிகிறது
    அண்ட விரிவு நின்றிடும் போதில்
    அகன்றிடும் காலமும் விரிவை நிறுத்தும்
    நில்லாது விரியும் பேரண்டத்துள்ளே
    நேரமும் தன்னை நீட்டிச் செல்லும்
    எல்லா இடத்திலும் காலம் விரிவதால்
    இடமும் காலமும் ஒன்றுடன் ஒன்றாய்
    பின்னிப் பிணைந்து பேரண்டமாகிப்
    பிரிக்க முடியா இருபெரும் கூறாய்
    பிரபஞ்சமென்னும் மாயையுள் புதைந்தன.

    காலமும் இடமும் கற்பனைக் கெட்டா
    மூலப்பிர கிருதி யென்பார்கள்.

    சிவமெனும் சிங்கியூலாறிற்றியென்ற
    சிறியதோர் ஒருமைப் புள்ளியிலிருந்து
    தோன்றி விரிந்து தொடர்ந்து பரந்து
    தொடக்கம் நோக்கி மீண்டுமொடுங்கும்
    மாயைக்குள்ளே மனம், உடல் கொண்டு
    வாழும் மனிதர் சிந்தனைக் கெட்டாக்
    காலந்தன்னை அளந்திடும் கருவி
    கடற்கரை தனிலே தனித்துக் கிடக்கும்
    காட்சியினாலிக் கவிதை மலர்ந்தது
    கனவாம் மாயா லோகம் தெரிந்தது.

Leave a Reply to Ar.muruganmylambadi

Your email address will not be published. Required fields are marked *