குறுந்தொகை நறுந்தேன் – 21
-மேகலா இராமமூர்த்தி
தலைவனிடம் எதுவும் பேசாமல் சிறிதுநேரம் மௌனமாய்ச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த தோழி பின்னர்ப் பேசலுற்றாள்…
ஐய! என் தோழியாகிய தலைவி, முன்பெல்லாம்
வேம்பின் பச்சைக் காயைத் தந்தால்கூட அதை இனிய மணமுள்ள வெல்லக்கட்டி என்று பாராட்டிக் கூறினீர். இப்பொழுதோ பாரியென்னும் வள்ளலின் பறம்பு மலையிலுள்ள சுனையில் ஊறிய தெளிந்தநீரைத் தை மாதத்தில் குளிர்ச்சியாகத் தந்தாலும்கூட, அது வெப்பமாகவும், உவர்ப்புச் சுவை உடையதாகவும் இருக்கின்றது என்கிறீர். உம் அன்பின் தன்மை அத்தகையதாய் உள்ளது!” என்று கூறிப் பெருமூச்செறிந்தாள்.
வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே. (குறுந்: 196 – மிளைக்கந்தனார்)
அவள் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த தலைவனுக்கு, பூவுலக இன்பமும், தேவருலக இன்பமும் பொன்னொளிர் மேனிகொண்ட தலைவியின் தோள்தழுவி வாழும் இன்பத்துக்கு ஈடில்லை என்று தான் எண்ணியிருந்த அற்றைத் திங்கள் நினைவுக்கு வந்தது.
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே. (குறுந்: 101 – பரூஉமோவாய்ப் பதுமன்)
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. (1103) எனும் குறளும் இதே கருத்தையே வழிமொழிந்து பேசுவது எண்ணி இன்புறத்தக்கது.
தலைவனுக்கு அன்று தலைவி தந்த வேப்பங்காய் மட்டுமா இனித்தது?
”ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு” என்று தலைவி சமைத்த புளிப்பாகலையும் களிப்போடு உண்டவன்தானே அவன்?
எனவே தோழியின் குற்றச்சாட்டுக்குத் தக்க மறுமொழி கூறவியலாமல் தடுமாறியபடி ஏதோ சொல்ல முற்பட்டான். அவனை இடைமறித்த தோழி, ”தலைவ! தலைவிபால் அன்றிருந்த காதலும் அன்பும் இன்று உம்மிடம் இல்லை என்பதில் எமக்கு ஐயமில்லை” என்றாள் திட்டவட்டமாக.
தலைவன் முகம்வெளிறி நின்றான்.
பேச்சைத் தொடர்ந்த தோழி, ”உம்மைச் சொல்லிக் குற்றமில்லை ஐயா! குளிர்ந்த, விளையாடுவதற்கு இனிமையான அருவியில் நெடுநேரம் நின்றிருந்தால் கண்கள் சிவப்பதும், அளவுக்கு அதிகமாக உண்டால் இன்சுவையுடைய தேனும் புளித்துப்போவதும் இயல்புதான். அதுபோல் தலைவி உமக்கு முன்பு இனியவளாக இருந்தாள்; நெடுங்காலம் பழகியதால் இன்று இன்னாதவள் ஆகிவிட்டாள். உமக்கு நினைவிருக்கிறதா? எம் தந்தையின் ஊரில், கடுமையான நஞ்சுடைய பாம்புகள் ஓடும் தெருவில், நடுங்குதற்குரிய எங்கள் பெருந்துன்பத்தை முன்பு நீர் களைந்தீர்” என்று தலைவனுடைய முந்தைய அன்புடைமையை நினைவூட்டிய தோழி, இப்பொழுது எம்மைப் பிரிவதாக இருந்தால், எம் வீட்டில் எம்மைக் கொண்டுபோய் விட்டுவிடுவீராக என்றாள் முகத்தில் கடுமைதோன்ற.
நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை யெந்தை யெம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்
நடுங்கஞர் எவ்வங் களைந்த வெம்மே. (குறுந்: 354 – கயத்தூர் கிழான்)
”ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்” என்ற உவமை, “பழகப் பழகப் பாலும் புளிக்கும்” எனும் இன்றைய பழமொழியை நினைவூட்டுகின்றது. ”உமக்கு யாம் வேண்டாதவர்களானால் எம்மை எம் இல்லத்தில் கொண்டுபோய் விட்டுவிடவும்” என்று தோழி கூறுவதுகூடப் பெண்கள் கணவனிடம் கோபித்துக்கொண்டால் தம் தாய்வீட்டுக்குச் செல்லவிரும்பும் இன்றைய நடப்புக்கு ஒத்துப்போகின்றது.
காலங்கள் மாறினும் நம்மிடம் நிலவிவரும் சில பழக்கவழக்கங்கள், சொலவடைகள் அன்றுதொட்டு இன்றுவரை மாறாது ஒத்திருப்பதைக் குறுந்தொகைப் பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன.
தோழியின் கடுஞ்சொற்கள் தலைவனின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்து அவனை வாட்டின. தலைவியிடம் தான் அன்று பாராட்டிய உழுவலன்பும் இப்போது அதிலிருந்து வழுவி ஒழுக்கந் தவறிவிட்ட தன்னுடைய அவலநிலையும் அவனை நாணவைத்தன.
தோழியிடம் தன் தவற்றுக்கு மன்னிப்பு வேண்டினான்.
”ஐயா! உம்மை மன்னிப்பதற்கு நான் யார்? தலைவியிடம் பேசிப் பார்க்கிறேன். அவள்தான் உம்மை மன்னித்து ஏற்பதா வேண்டாமா என்று முடிவுசெய்யவேண்டியவள்” என்றுகூறிவிட்டு இல்லத்தினுள் சென்றாள்.
உள்ளே சாளரத்தின் திரைக்குப் பின்னே சாய்ந்துநின்றிருந்த தலைவி, இவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். எனவே தோழி நடந்தவற்றை அவளிடம் மீண்டும் ஒருமுறை விளக்கமுற்பட்டபோது ’வேண்டாம்’ என்று செய்கையால் தடுத்து,
”நீ என்ன சொல்ல வருகின்றாய்? தலைவனை நான் மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறாயா?” என்று சீறினாள்.
”அப்படியெல்லாம் நான் சொல்லவரவில்லை. தலைவர் தன் தவற்றை உணர்ந்துவிட்டதாகத் தெரிகின்றது. மீண்டும் உன்னோடு சேர்ந்துவாழ விரும்புகின்றார். உன் விருப்பமென்ன?” என்று கேட்டாள் தோழி.
”என் விருப்பமா?” என்று கேட்டுவிட்டு விரக்தியாகச் சிரித்த தலைவி,
”தலைவர் இருக்கும் ஊருக்கும் நாமிருக்கும் இந்த ஊருக்குமிடையே வருவதற்கு அரிதான மலைகள் ஏதுமில்லை; இடந்தோன்றாது மறைத்து நிற்கும் மரங்களுள்ள ஊரினுரும் அல்லர் அவர்; கண்ணாலே காணும்படி, விரைவில் வருதற்குரிய அண்மையான இடத்திலிருந்தும், முனிவரை அணுகி வாழ்பவர்களைப்போல் மனத்தால் நீங்கி வாழ்கின்ற அவர்மீது நான் முன்பொரு காலத்தில் அன்புடையவளாக இருந்தேன். அந்த அன்பு இப்பொழுது மறைந்து விட்டது” என்றாள் வேதனையோடு.
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே. (குறுந்: 203 – நெடும்பல்லியத்தன்/நெடும்பல்லியத்தை)
’முனிவரை அண்டிவாழும் உயர்குலத்தவன்’ என்று தலைவனை எள்ளல் செய்த தலைவி, தான் இழிகுலத்தவளாக இருப்பதால்தான் அவன் உள்ளூரிலேயே இருந்தும் தன்னைக் காணவரவில்லை போலும் எனும் நகைக்குறிப்பைப் புலப்படுத்தி, அவனை ஏற்றுக்கொள்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதைத் தோழிக்குத் தெளிவுபடுத்துகின்றாள்.
களவுக்காலத்தில் காடும் மலையும் மழையும் புயலும் கடந்துவந்து காதல் வளர்த்தவன், கற்புக் காலத்தில் அருகிலேயே இருந்தும் தன்னைக் காணவும் பேணவும் இல்லை என்னும் தலைவியின் வருத்தத்தில் தவறுண்டோ?
புறத்தொழுக்கம் மேற்கொண்ட தலைவனை ’இல்லில் நுழையற்க’ என்று கண்டிக்கும் உரிமை கற்புடைத் தலைவிக்கு உண்டு. அதனை ’அஞ்சவந்த உரிமை’ என்பர் தொல்காப்பியர். அதனடிப்படையில் தலைவனை மீண்டும் இல்லில் சேர்க்க இயலாதென்றாள் தலைவி.
[தொடரும்]
தங்கை மேகலாராமூர்த்தியின் குறுந்தொகை
விளக்கம் அருமை..நூலாக மலர வாழ்த்துக்கள்
(ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)