மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 3
தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்
வீட்டில் சைமன் மனைவி, மெட்டீரினா, குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்துப் படுக்க வைத்து விட்டு, சைமன் அதிகமாக வெளியே உண்டிருப்பானென்று நினைத்துத் தானும் உண்ட பின் மீதியிருந்த ரொட்டியை மறு நாளுக்காகச் சேமித்து வைத்தாள். பின், சைமனின் பழைய கிழிந்த கோட்டை எடுத்துத் தைக்க ஆரம்பித்தாள். சைமன் அதிகாலையில் போனவன் இன்னும் திரும்பவில்லையே, அவன் புது கோட்டுத் தைக்கத் தோல் வாங்கியிருப்பானா? கடைக்காரன் அவனை ஏமாற்றி விடக்கூடாதே, எட்டு ரூபிள்கள் அதிகப் பணமல்லவா? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
மெட்ரீனா கதவைத் திறந்ததும், வெறுங்கையோடு சைமன் ஒரு புதிய மனிதனோடு நிற்பதையும், அந்த மனிதன் தலையில் தொப்பி இல்லாமலும் கம்பளியிலான செருப்புகள் அணிந்திருந்ததையும் கவனித்தாள். கணவனிடமிருந்து மதுவாடை வருவதை உணர்ந்ததும் அவன் தோல் வாங்காமல் அந்தப் பணத்தில் ஒன்றும் இல்லாதவனோடு சேர்ந்து குடித்துக் கொண்டு அவனையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறானென்று நினைத்தாள். அவள் மனம் ஏமாற்றத்தால் வெடித்து விடும் போலிருந்தது. அவர்கள் இரண்டு பேரும் வீட்டினுள் வந்த போது அந்த அன்னிய மனிதன் இளைஞனாகவும் கணவனுடைய கோட்டு மாத்திரம் அணிந்து கொண்டு வேறு ஆடைகள் ஒன்றும் இல்லாமலும் தலையில் தொப்பியில்லாமலும் ஒரே இடத்தில் தலை குனிந்த வண்ணம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து இவன் நல்லவனல்ல என்ற தீர்மானத்திற்கு வந்தாள். சைமன் தலையிலிருந்த தொப்பியை எடுத்துக் கீழே வைத்து விட்டுப் பெஞ்சில் அமர்ந்து, ஒன்றும் நடக்காதது போல் அந்த மனிதனின் கைகளைப் பிடித்து அருகே அமரச் சொன்னான். மெடீனா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு முகத்தைச் சுளித்தாள்.
சைமன் அவளுடைய கோபத்தைக் கண்டு கொள்ளாதவன் போல், மெட்ரீனாவிடம் இருவருக்கும் உணவு பரிமாறச் சொன்னான். மெடீனாவின் கோபம் இரட்டித்தது. அவள், “நீ கோட்டுக்குத் தோல் வாங்கப் போனவன், அதை வாங்காமல் இருந்த கோட்டையும் கொடுத்து விட்டுக் குடித்திருப்பது மட்டுமல்லாமல், இன்னொரு ஆடையற்ற குடிகாரனையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாய், நான் சமைத்திருக்கிறேன், ஆனால் குடிகாரர்களுக்குச் சாப்பாடு கிடையாது” என்றாள்.
“நிறுத்து மெட்ரீனா, நான் சொல்வதைக் கொஞ்சம் கேள், இந்த மனிதன் எப்படிப் பட்டவென்று——–“ மெடிடீனா அவனை மேலும் பேசவிடவில்லை.
“நீ பணத்தை என்ன செய்தாயென்று சொல்லவில்லை”.
சைமன் கோட்டுப் பையிலிருந்து மூன்று ரூபிள் நோட்டுகளையும் எடுத்தான். அவளுடைய கோபம் தீரவில்லை. பணத்தை வேகமாக எடுத்துக் கொண்டு, ”குடிகாரர்களுக்குச் சாப்பாடு கொடுக்க முடியாது” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
“மெடீனா, அதிகம் பேசாதே. நான் சொல்வதைக் கேள்”.
அதற்கு மெடீனா “நீ என்ன மகா புத்திசாலியா? உன் பேச்சைக் கேட்பதற்கு? நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்பவேவயில்லை. நீ ஒரு குடிகாரன். என் தாய் கொடுத்த லினன் துணியையும் விற்றுக் குடித்தாய்” இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களைத் திரும்பவும் சொல்லிச் சத்தமிட்டாள். சைமன் பலமுறைகள் தான் இருபது கோபெக்குகளுக்குத்தான் குடித்ததையும், எப்படி அந்த மனிதனைக் கண்டான் என்று சொல்ல முயற்சி செய்தும் பலனில்லை.
மெடீனா பேசுவதை நிறுத்தாமல் சைமன் மீது பாய்ந்து “என் கோட்டைக் கழற்றிக் கொடு, இது ஒன்றுதான் எனக்கிருப்பது” என்று கத்திக் கோட்டைப் பிடித்து இழுத்தாள். சைமன் கோட்டைக் கழற்ற முயலும் போது அவள் இழுத்த வேகத்தில் கோட்டுக் கையின் தையல் பிரிந்து விட்டது.
அவள் அவனைச் சபித்துக் கொண்டே கோட்டைத் தலையில் போட்டுக் கொண்டு தன் கோபத்தைத் தணிக்க வெளியே செல்லக் கதவருகே போனவள், வந்திருப்பவன் எப்படிப்பட்டவன் என்று அறிய ஆவல் தோன்றியதும் தயங்கி நின்றாள்.
தொடரும்