நாளை வெம்புவார்!
தண்ணிகேட்டு முதல்வர்பாவம் ஓடுறார் – தண்ணி
தரமறுத்து கதவைஅங்கு மூடுறார்! – என்ன
பண்ணித்தான் அவர்தொலைப்பார்
பெருசுசெய்த பாவமின்னும்
தொடருது – இருள் – படருது!
செத்துப்போன உயிர்மீண்டும் வருமா? – தலை
சாகடித்த காவிரிகை தருமா? – வாழ்க்கை
வெத்தாகும் எனத்தெரிந்து
வழக்குதனை திரும்பஅன்று
பெற்றார் – வாழக் – கற்றார்!
கறந்தபால் மீண்டும்மடி புகாது – நம்மைக்
கதறவைத்த தலைசெயல் தகாது – நாட்டு
நலனைமிக அவர்மறந்து
நன்குதன்னைக் காக்கவுமே
செய்தார் – வாகை – கொய்தார்!
ஊழல்வழக்கில் சிக்கமனம் பதைத்தார் – மிக
ஊசலாடும் மனசாட்சி புதைத்தார் – தன்னை
வாழத்தான் செய்வதற்கு
வழக்கதனை வாபஸ்வாங்கிப்
பிழைத்தார் – பாவம் – இழைத்தார்!
நடுவர்மன்றத் தீர்ப்பையுமே மதியார் – உச்ச
நீதிமன்ற வாசல்தனை மிதியார் – கன்னடர்
நடுவனரசு சொல்லுவதை
நன்றெனவே கேட்கும்மனம்
இல்லார் – பெரும் – பொல்லார்!
நம்நாட்டு மக்களுமே சரியிலே – இவர்
நடந்துகொள்ளும் விதமெதுவும் புரியலே – என்றும்
தும்பைவிட்டு வால்பிடிக்கும
தேவையற்ற செயல்செய்யப்
பறப்பார் – கடமை – மறப்பார்!
மஞ்சுவிரட்ட ஒற்றுமையாய் நிற்பார் – அதில்
மலையளவு வெற்றிபெறக் கற்பார் –
அணையில் கொஞ்சமுமே நீரின்றி
காளைஎட்டிப் பார்த்திடினும்
வருந்தார் – என்றும் – திருந்தார்!
முந்துரிமை விதிச்சிறப்பை அறியார் – அதை
முறையாகப் பயன்படுத்தத் தெரியார் – நமைச்
சந்திதனில் நிற்கவைக்கும்
சதிகாரர் அரசியலை
நம்புவார் – நாளை – வெம்புவார்!
06.02.2018
கவிஞர் இடக்கரத்தான்