யாருமில்லா மேடையில்
கவிஞர் ஜவஹர்லால்
யாரு மில்லா மேடையி லேநான்
நாட்டிய மாடுகின்றேன்; — கேட்க
யாரு மில்லா அவையினி லேநான்
பாடல் பாடுகின்றேன்.
மலரின் அசைவை அதுதரும் மணத்தை
நுகர வாருமென்றேன்; — அந்த
மலரே வாடி உதிர்ந்திடு வரையில்
மனிதர் நெருங்கவில்லை.
தென்னையின் கீற்றுச் சலசலப் பொலியின்
தேனிசை கேளுமென்றேன்; — அங்கே
தென்னையின் அடியில் நிற்பவர் கூடச்
சலசலப் புணரவில்லை.
சாதிக ளெழுப்பும் சச்சர வொலியின்
சத்தம் அடக்குமென்றேன்; — அந்தச்
சாதிகள் இரைச்சல் இன்னிசை யெனவே
சுவைத்தலை யேகண்டேன்.
ஊழல் எனவொரு புற்றுநோய் நாட்டை
உருக்குலைக் குதென்றேன்நான்; — அந்த
ஊழலில் குளித்தே திளைப்பவர் என்குரல்
உதறிடல் கண்டுநொந்தேன்.
யாரு மில்லா மேடையி லாடும்
நாட்டியம் என்னபயன் ? – கேட்க
யாரு மில்லா அவையினி லேஎன்
பாடலால் என்னபயன் ?