கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி

முனைவர் சுபாஷிணி

என்ன..? கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். கசாப்புக் கடைக்கென்றே பிரத்தியேகமாக அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றியது தான் இந்தப் பதிவு.

Humoristische Bildpostkarte der Lithographischen Kunstanstalt Junginger, erschienen aus Anlass der "Großen Deutschen Fachausstellung für Fleischerei, Kochkunst und verwandte Gewerbe", die vom 13. bis 29. Juli 1902 in der städtischen Gewerbehalle stattfand und von der Stuttgarter Fleischer-Innung organisiert wurde.
Humoristische Bildpostkarte der Lithographischen Kunstanstalt Junginger, erschienen aus Anlass der “Großen Deutschen Fachausstellung für Fleischerei, Kochkunst und verwandte Gewerbe”, die vom 13. bis 29. Juli 1902 in der städtischen Gewerbehalle stattfand und von der Stuttgarter Fleischer-Innung organisiert wurde.

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இறைச்சி உணவு பற்றி விவரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. ஜெர்மனியில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் கசாப்புக் கடை பற்றிய தகவல்கள் சொல்லும் அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில், ஒரு 16ம் நூற்றாண்டு அழகிய மரவேலைப்பாட்டு கட்டிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கசாப்புக்கடை அருங்காட்சியகம்.

unnamed (2)

பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் இறைச்சி உணவே மக்களின் முக்கிய உணவாக அமைகின்றது. தென் அமெரிக்காவிற்கான கடல்வழிப்பயணங்கள் 14ம், 15ம் நூற்றாண்டு வாக்கில் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர்தான் ஐரோப்பாவில் உருளைக்கிழங்கும், தக்காளியும், குடை மிளகாயும், பிற ஏனைய காய்கறிகளும் அறிமுகமாகின. அதற்கு முன்னர் கோதுமை, சோளம், பயிர்கள், குறிப்பிடத்தக்க முட்டைகோஸ் வகை காய்கறிகளும், பழங்களும், ஓரிரண்டு வகை தாவரங்களும் மட்டுமே மரக்கறி உணவு வகையில் சாப்பிடப்படுவனவாக இருந்தன. இவற்றை விட ஐரோப்பிய மக்களின் மிக முக்கியமான உணவாக அமைந்தது இறைச்சி உணவு தான். அதிலும் ஜெர்மானியர்களை எடுத்துக் கொண்டால், பண்டைய ஜெர்மானிய மக்களின் உணவு கலாச்சாரத்தில் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, மான்கள், காட்டுப்பன்றி, பைசன் போன்றவை வேட்டையாடி விரும்பிச் சாப்பிடப்பட்ட உணவாக அமைந்தன.

கோதுமை, சோளம் போன்ற தானியங்களைக் கொண்டு ரொட்டி தயாரிப்பது பண்டைய காலம் தொட்டு ஐரோப்பா முழுமைக்கும் வழக்கில் இருந்தது. பயிர்களும், காய்களும் பழங்களும் கோடைக்காலத்தில் விளைவதால் அவற்றைக் குளிர்காலத்திலும் இளவேனிர் காலத்திலும் பயன்படுத்தும் வகையில் இவற்றைப் பாடம் செய்து வைக்கும் கலையை பெருவாரியாக வளர்த்தனர். இதில் இறைச்சியைப் பாடம் செய்து பத்திரப்படுத்தும் வகை, உப்புக் கண்டம் போட்டுக் காய வைத்துப் பாதுகாக்கும் முறை, அரைத்து வெவ்வேறு பொருட்களுடன் கலந்து அவற்றைப் பதனிட்டு பாதுகாத்து ஆண்டு முழுமைக்கும் தேவைப்படும் உணவுத்தேவைக்குப் பயன்படுத்தும் முறை என இம்மக்கள் பெருவாரியாக ஆராய்ந்து இக்கலையை வளர்த்தனர்.

unnamed (3)
இன்றைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளுக்கான தொடர்புகள் எல்லா நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது மக்களின் கலாச்சாரத்திலும் ஊடுருவத் தொடங்கிவிட்டன. சீனர்கள், கொரியர்கள், இலங்கையர்கள், இந்தியர்கள், தாய்லாந்துக்காரர்கள், வியட்நாமியர்கள், தென் அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள், மத்திய கிழக்காசிய மக்கள் எனப்பல கலாச்சாரப் பின்னணிக் கொண்டவர்கள் ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து உள்ளூர் மக்களுடன் வாழ்கின்றனர். வந்து விட்டுச் செல்லும் விருந்தாளிகளாக இல்லாமல் ஐரோப்பாவையேத் தங்கள் வாழ்விடமாக இந்த மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்றாலும் கூட தங்கள் தாயகத்தின் உணவு முறைகளை இத்தகைய மக்கள் தொடர்ந்து இந்தப் புதிய நிலத்திலும் கடைப்பிடிப்பதால் ஐரோப்பாவின் பல மூலை முடுக்குகளிலும் ஆப்பிரிக்க உணவு, சீன உணவு, தாய்லாந்து உணவு, மெக்சிகன் உணவு, இந்திய உணவு, அரேபிய உணவு என்பவை பரவி விட்டதை இங்குக் காணப்படும் உணவகங்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம். இப்படி நிலமை மாற்றம் கண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட இறைச்சி உணவையே பிரதான உணவாக ஐரோப்பியர்கள் தொடர்கின்றனர் என்பதை இங்குள்ள பெருவாரியான உணவகங்களும் அங்காடிக் கடைகளும் கசாப்புக் கடைகளும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

unnamed (4)

ஜெர்மனியைப் பொருத்தவரை இறைச்சி விற்பனை என்பது நான்கு வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. பெருவாரியான சூப்பர்மார்க்கெட்டுகளில் பாக்கெட் செய்யப்பட்ட இறைச்சிகள், வாரச் சந்தையில் கசாப்புக் கடைக்காரர் விற்கும் இறைச்சி, பதப்படுத்தி சோசேஜ் வகையில் விற்கப்படும் இறைச்சி, கிராமப்பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வீட்டோடு அண்டிய வகையில் உருவாக்கியிருக்கும் கடைகளில் விற்கப்படும் இறைச்சி எனப் பிரிக்கலாம். ஜெர்மனியில் வாழும் துருக்கியரும் தங்கள் கடைகளில் மாடு, கோழி, வாத்து, போன்ற இறைச்சி வகைகளை விற்கின்றனர். இறைச்சி வகையோடு மீன்களும் கடல் உணவுகளும் இதே ரீதியில் விற்கப்படுகின்றன.

கசாப்புக் கடைக்காரர்கள் மெட்ஸ்கர் (Metzger) என்ற ஜெர்மானியச் சொல்லால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது தொழில் பெயர். பண்டைய காலத்தில் இது குலத்தொழிலாக இருந்தது. இவ்வகை குலத்தொழில் பண்பாடு என்பது ஜெர்மனியில் கடந்த ஐந்நூறு அறுநூறு ஆண்டுக்கால கட்டத்தில் இல்லாது மறைந்து விட்டது. இன்று மெட்ஸ்கர் என்ற குடும்பப்பெயரை வைத்திருப்பவர்கள் மருத்துவராகவும், கால்பந்து விளையாட்டாளராகவும். ஆசிரியராகவும், பஸ் ஓட்டுநராகவும், பொறியியலாளராகவும் எனப் பல்வேறு தொழிலைப் புரிவோராக உள்ளனர். இதேபோன்ற நிலைதான் ஏனைய குலத்தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ளன.

இறைச்சி உணவினைத் தயாரித்தலில் பயன்படுத்தப்படும் கருவிகள் பற்றிய தகவல்களைப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தவும், பண்டைய காலம் தொட்டு இன்று வரை கசாப்புக் கடைத் தொழிலாளர்களின் தொழில் வாழ்க்கை எப்படி அமைகின்றது என்பதை விவரிக்கும் வகையிலும் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளனர். ஏனைய அருங்காட்சியகங்களைப் போல இவை காலை முதல் மாலை வரை திறக்கப்படுவதில்லை. மாறாக நண்பகல் 12க்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு இந்த அருங்காட்சியகம் மூடப்படுகின்றது. பொது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் ஒரு விவசாயி வாழ்க்கையை விளக்கும் வகையில் காய்கறிகள், முட்டைகள், இறைச்சி போன்றவற்றை சந்தையிலிருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தியும் வைக்கின்றனர்.

unnamed (5)

போப்லிங்கன் நகரின் பழைய கிராமத்தின் மையப்பகுதியிலேயே பழமையான ஒரு அழகிய கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மாறுபட்ட கோணத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை இங்கு வருபவர்கள் கண்டு செல்வது இறைச்சி பதனிடும் முறைகளைப் பற்றியும் கசாப்புக் கடைக்காரர்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்குவதாகவும் நிச்சயம் அமையும்.

இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:

Address: Fleischer Museum Boeblingen, Marktpl. 27, 71032 Böblingen
Phone: 07031 6691691

அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *