-மேகலா இராமமூர்த்தி

piegons

சோடிப் புறாக்களைத் தேடிப்பிடித்துக் கலைநயத்தோடு படமெடுத்து வந்திருக்கின்றார் திரு. ஆய்மன் பின் முபாரக். இணையற்ற இவ்விணையர் குறித்துக் கவினோடு கவியெழுதுங்கள் என்று இக்காட்சியைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்குரியோர்.

”இருநிலா  இணைந்து  பாடி
இரையுண்ணும் செவ்வி தழ்கள்
விரியாத தாமரை போல்
ஓர்இணை  மெல்லி யர்கள்
கருங்கொண்டை கட்டி  ஈயம்
காயாம்பூக்  கொத்து மேலும்
ஒருபக்கம் இருவா ழைப்பூ
உயிருள்ள அழகின் மேய்சல்!” என்று புறாக்களின் எழிலைத் தன் ’அழகின் சிரிப்பில்’ அருமையாய் வடித்துத் தந்திருக்கின்றார் பாவேந்தர்.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் அதனைத் தம் வாழ்வில் உயிரினும் மேலாய்க் கடைப்பிடிக்கும் புறாக்களின் நனிநாகரிகத்தை மானுடரும் பின்பற்றுதல் நன்று.

இனி கவிஞர்களின் முறை…

”சாதி மதம் பாராது, சாதகத்தைச் சாராது வேசமில்லாப் பாசத்தோடு இணைந்திருக்கும் இவ்இனிய புறாக்கள் உண்மைக் காதலுக்குத் தக்கதோர் சான்றாய்த் திகழ்கின்றன” எனப் புகழ்கின்றார் திரு ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி. 

இணைந்த உயிர்கள்!!

#மாசிமாதம் ஓரிரவு…
மகிழ்ச்சி ததும்பும் தேனிலவு!
ஜோடி போட்ட மாடப்புறா
சொக்கவைக்கும் காதல்நிலா!!
#வண்ணப்பறவைகள் ரெண்டு
வற்றாத பேரன்பு கொண்டு
காதலின் உச்சத்தைக் கண்டு
காட்டிடும்தோரணை கற்கண்டு!!
#விரும்பும் துணையின் அருகிலே
விசனம் மறந்த நிலையிலே
விழிகள் பேசும் மொழியிலே
விழுந்தன மனங்கள் மையலிலே!!
#சாதி மதம் பார்க்கவில்லை
சாதகத்தைத் தேடவில்லை
சம்மதிக்கும் உள்ளங்களைச்
சாய்க்கத்தடைகள் உலகிலில்லை!!
#உண்மை அன்பு மலர்ந்துவிட்டால்
உடைப்பதென்ன சுலபமா??
உயிர்கள்இங்கு இணைந்துவிட்டால்
உளிகள் கூட உறவுதான்!!
#வேசமில்லாப் பாசத்துக்கு
மோசமென்றும் கிடையாதே!!
மோட்சம் பூமியில் உள்ளதெனும்
சூட்சுமம் அறிவோர் மெய்க்காதலரே!!!

*****

”கடவுள் பேதம் எமக்கில்லை; எங்கும் குடியிருப்போம்! சாதி பேதமும் எமக்கில்லை; எவரையும் காதலிப்போம்!” என்று பேதமற்ற உயர்ந்த வாழ்வின் மாட்சியைப் பேசும் உன்னதப் புறாக்களைக் காட்சிப்படுத்தியுள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

தெரிந்திடுவீர் எம் காதல்

கடவுள்களில் பேதமில்லை எங்கும் இருப்போம்
கோபுரத்தில் வாழுகிறோம் குடும்பத் தோடே,
அடுத்துள்ள தேவாலயம் மசூதியும் வீடே
அங்கிருந்தே இரைதேடிச் செல்வோம் காடே,
இடையில்வரும் காதலிலே இணைந்தே செல்வோம்
இடைஞ்சலாக எவருமெங்கள் இனத்தில் இல்லை,
நடைமுறையில் மனிதர்போல் நாங்க ளில்லை
நாட்டுப்புறா எம்காதல் தெரியும் தானே…!

*****

”ஆண் பெண் புறாக்கள் ஒன்றிணைந்து காதலர் தினம் கொண்டாடுகின்றனவோ?” என்று வேடிக்கையாய் வினவும் கவிஞர் திரு. பழ. செல்வமாணிக்கம், ”பணம் பார்த்து வருவதன்று காதல்! நல்ல குணம் பார்த்து வருவதே உண்மைக்காதல்! உயிரைத் தருவதன்று காதல்! உயிராய் வாழ்வதே காதல்” என்று காதலின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்துகின்றார்.

உண்மைக் காதல்

நெருங்கி நிற்கும் இரண்டு வண்ணப் புறாக்கள்!
காதல் வானில் சிறகடித்துப் பறக்கும்!
அருமைப் புறாக்கள்!
ஆண் புறாவின் அருகில் மயங்கி நிற்கும்!
பெண் புறா!
இந்த பெண் புறாவின் இணையென்ற மகிழ்வில்
ஆண் புறா!
காதலர் தினத்தை கொண்டாடுகின்றனவோ!
இந்தப் புறாக்கள்!
இல்லை! இல்லை!
உண்மை காதலருக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தானே!
அழகைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
மனதைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
வசதியைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
குணத்தைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
அன்பின் வடிவம் காதல்!
புரிதலின் பொருளே காதல்!
தோழமை என்பது காதல்!
ஒற்றுமை என்பது காதல்!
விட்டுக் கொடுப்பது காதல்!
“நான் “ மறைவது காதல்!
“நாம்” என்று தெளிவது காதல்!
சுயநலம் மறப்பது காதல்!
உன் துயர், எனதென நினைப்பது காதல்!
யாசித்துப் பெறுவதா காதல்!
தானாய் மலர்வது காதல்!
மாலையால் இணைவதா காதல்!
மனதால் இணைவதே காதல்!
உயிரைத் தருவதா காதல்!
உயிராய் வாழ்வது காதல்!

*****

”உண்மைக் காதலுக்கோர் உதாரணமாய், பகுத்துண்ணும் தன்னலமற்ற குணத்துக்கோர் சான்றாய் வாழும் புறாக்களை மனிதன் பந்தயத்துக்குப் பயன்படுத்துகின்றான் நேயமின்றி.  அந்தோ! மாந்தன் விளைவிக்கும் குந்தகமறியாது அந்தகனிடம் அகப்பட்டுக்கொள்கின்றதே அருமைப் புறா!” என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

மனிதனும் புறாவும்..!

மாடத்தில் மட்டுமே கூடுகட்டி வாழும்
……….மனிதனோடு பழகும் பண்பு கொண்டது..!
ஆடலுடன் பாடலும் செய்யும் அதையே
……….அதிசயித்து நமைப் பார்க்கத் தோன்றும்.!
கூடயிருக்கும் குஞ்சுப் புறாவுக்குத் தன்
……….குரல்வளைச் சேர்த்த உணவு ஊட்டும்..!
ஊடல் கொள்ள இணையாய் ஒன்று
……….உரு வானால் வேறொன்றை நாடாது..!

துணையாய்த் தேடி வந்த சோடியுடன்
……….தன் தலைசாய்த்து வட்டமிட்டு ஆடும்..!
இணையிடும் முட்டையை தன்னல மின்றி
……….இரவுபகல் அடை காக்கும் குணமாம்..!
பிணைக் கைதி போலதனை அடைத்து
……….பின்னர்ச் சோடி பிரித்து பறக்கவிடுவார்.!
கிணற்றுத் தவளைபோல வாழு மதற்குக்
……….கிட்டுமா இனியும் சுதந்திர வாழ்க்கை..!

பந்தயத்தில் பறக்கவிட புறா வளர்ப்போர்
……….பாங்கா யதனைக் காப்பார் பணமாக்க..!
பந்தமென வரும்போது ஒன்றாகக் கூடியே
……….பாங்காகப் பிரித் துண்ணும் தானியத்தை.!
குந்தகமும் ஆபத்தும் நிறைந்த வாழ்வில்
……….குணமுள்ள பறவை யெனப் புகழுண்டு..!
அந்தகனை அடையாளம் காணத் தெரியா
……….அகப்பட்டுக் கொள்வ ததன் விதியோ..!

*****

மாமிசம் உண்டு வந்ததோ பெண்புறா என்று அதன்மீது காதல்கொண்ட ஆண்புறா அதனை ஐயுற்றுக் கடிந்துகொள்வதை அழகிய கவிதையாக்கியிருக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

சேவல்-
என்னடி ஹப் அடிக்குது? எதைத் திண்டு தொலைச்சே
கீழ் மாடி மேசையிலே கெடக்குதே பழங்களெல்லாம்
கூடத்துக் கோணியெல்லாம் குவிஞ்சிருக்கே தானியங்க
அதையெடுத்துத் தின்னாம ஆட்டுக்கறி தின்னியா?
குவிச்சிருந்த விதவிதமாப் பழத்தையெல்லாம் விட்டுப்பிட்டு
கவுச்சியில ஆசப்பட்ட போக்கத்த புழுப் பொறுக்கி

அடச்சே! உன்னால பெரிய பேஜாராப் போச்சு
இந்த நாத்தத்தோட எப்படியுன்னை
நான் பக்கத்தில வச்சுக்கிறது.
ஓடு போ சீக்கிரம் சொண்டைக் கழுவிட்டு வா!

பேடு-
எதுக்காம்?

சேவல்-
ஏன் உனக்குத் தெரியாதா
புதுசாக் கேக்கிறியே! அதுக்குத்தான்.
பழம் மணக்கும் சொண்டோட
பக்கத்த வந்து நில்லு.
இழவுக் கவுச்சி மணம் எனக்குச் சகிக்காது
ஓடு போய் வாய ஒடனே கழுவிட்டுவா
ஒட்டி உரசிக்கலாம் உயிரைக் கலந்துக்கலாம்.

*****

புறவின் சிறப்புக்களைப் படிப்போர் இரசிக்கும்வண்ணம் துடிப்போடு கவி வடித்துத் தந்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் பாராட்டும் நன்றியும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவு பெற்றிருக்கும் கவிதை அடுத்து..

புறாக்கள் சொல்லும் பாடம்

பிறன்மனை நோக்காமை பேராண்மை!
பகன்றது வள்ளுவன் சொல்லாண்மை!
தன்னிணை மண்ணில் வாழும்வரை
தரங்கெட் டடுத்ததை நாடாமல்
உயரிய வாழ்க்கை வாழ்ந்திடுதே
உலகில் உள்ள புறாக்கூட்டம்!
மனிதா உனக்கு உரைக்கிறதா?
மனதில் ஏதேனும் பதிகிறதா?

கூட்டங்கூட்டமாய் வாழ்ந்திடுமே! புறாக்கள்…
கூடி உண்டு களித்திடுமே!
காக்கை குருவி எங்கள் சாதி!
கவி பாடினான் பாரதி!
மனிதா… மனிதா… நீ…
சகமனிதனுடன் மோதி…
சுடுகாட்டிலும் சாதி!
சுட்டிக்காட்டுவதென்ன நீதி???

கீழ்மேல் என்றெல்லாம் பாராது
காழ்ப்புணர்ச்சி தம்முள் இருக்காது
சமாதானத் தூதுவன் நம்
சமுதாயத்திற்குச் சொல்லிடும் பாடமிது!
தன்னலம் கொண்ட மனிதரெல்லாம்…
தரணியில் படைத்த சாதிமதங்கள்…
கூட்ட உணர்வைக் கொண்டுளது!
கூட்டு உணர்வைக் கொண்டுளதா???

கூட்டங்கூட்டமாய் ஒற்றுமைபேணி வாழ்கின்றன புறாக்கள். மனிதனோ ஒற்றுமையில் நாட்டமின்றிச் சக மனிதனோடு எப்போதும் மோதி, சுடுகாட்டிலும் பார்க்கின்றான் சாதி! இஃதென்ன நீதி?

வள்ளுவன் மாந்தருக்குரைத்த ஒழுக்கத்தையும், பிறன்மனை நோக்காப் பேராண்மையையும் பின்பற்றி நடப்பதென்னவோ பறவையினத்தைச் சேர்ந்த புறாக்களே! என்று புறவினத்தின் பெருமையினைப் பரக்கப்பேசும் – உரக்கப்பேசும் இக்கவிதையினை யாத்த திரு. ஆ. செந்தில்குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வுசெய்யப்படுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 148-இன் முடிவுகள்

  1. சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்கட்கு நன்றி.
    அருமையான கவிதைகள் படைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *