குளிர்ச்சியின் கொழுந்து நான்; நெருப்பன்று!
கவியோகி வேதம்
குளிர்ச்சியின் கொழுந்தை உறிஞ்சிட என்றன்
கொடிய மனமும் தாபமுறும்;.
தளிரின் மென்மையைக் கவிச்சொல்லில் புகுத்திடத்
தவிக்கும் நெஞ்சமும் வேகமுறும்;.
நெளியும் பாம்புகள், நிமிரும் விதைகள்-என்
நேசம் கலந்த நுண்உயிர்கள்;
களிப்பைச் செய்யும் ப்ரம்மனின் கைகள்-என்
காவல் மந்திரம் உணருங்கள்!.
வெட்ட வெளியினில் கொட்டிக் கிடக்கும்
விந்தையும் நரம்பினில் உள்ளதடீ!
கட்டப் படுமுன் பட்டிடும் ஓலமும்
கர்வ மனத்துள் அடங்குதடீ!
கொட்டும் மழையும் வெட்டும் அலையும்
கொஞ்சமும் வெளியில் இல்லையடீ!
நிட்டை வரணுமா? சட்டென மனக்கண்
நிச்சயம் அதனில் ஒடுங்குதடீ!
கள்ள மனஎண்ணம் என்முன் நிற்கையில்
கருப்பாய்ப் பொடிந்தே பொசுங்குமடீ!
வெள்ளம் எனஒரு வேதனை பிறக்கையில்
விரல்கள் தடவிட மறையுமடீ!
சள்ளைக் குமுறலும் தடுக்கும் புலம்பலும்
சட்டெனக் கண்முன் நசுங்குமடீ!
கொள்ளை கொள்ளையாய்த் துர்க்கை சிரிக்கிறாள்!
குலவத் தொல்லைகள் வருமோடீ?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^