எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

நீரின்றி வாடுகின்றார்
நீண்டநேரம் நிற்கின்றார்
பார்மீது உழைப்பவர்கள்
பஞ்சமதில் உழலுகிறார்
அவரைவைத்து சொத்துச்சேர்ப்பார்
அடுக்குமனை கட்டுகிறார்
அடுத்தவேளை உணவுக்கு
அலைந்திடுவார் உழைப்பவர்கள் !

நிலமீது காணுகின்ற
நிட்டூரம் ஒழிவதற்கு
நீண்டதொரு போராட்டம்
நெடுநாளாய் நடந்ததுவே
அதன்விளைவாய் உழைப்பவரை
அனைவருமே கண்டார்கள்
அத்தினமே மேதினமாய்
ஆகியதே உலகமெலாம் !

உழைப்பவரை வாழவைப்போம்
ஊதியத்தை உயர்த்திடுவோம்
விலைகுறைவாய் பலவற்றை
விரைவாகக் கொடுத்திடுவோம்
நலம்பயக்கும் திட்டங்கள்
நாங்கள் செய்விருக்கின்றோம்
நம்புங்கள் எனவுரைத்து
நம்பவைப்பார் அரசியலார் !

உரைகேட்ட உழைப்பாளி
உண்மையென நம்பிடுவான்
தலைவாநீ வாழ்கவென்று
தான்குரலை ஒலித்திடுவான்
உழைப்பாளி அறியாமை
உரமாக்கித் தலைமையெலாம்
உல்லாசம் அனுபவித்து
உவப்புடனே இருந்திடுவார் !

மேதினத்தில் வெளிச்சம்வர
வேண்டிநிற்போம் வாருங்கள்
மேதினத்தில் உழைப்பாரை
உயர்த்திநிற்போம் வாருங்கள்
பொய்யுரைக்கும் கூட்டத்தார்
தனைத்தவிர்ப்போம் வாருங்கள்
மெய்யாக மேதினத்தை
ஆக்கிடுவோம் வாருங்கள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *