க. பாலசுப்பிரமணியன்

 

சிந்தனைகள் வாழ்வின் வளத்திற்கு அடிப்படை

வாழ்க்கையின் வளம் என்பது எல்லோருக்கும் ஒன்றாக அமைவதில்லை. பிறக்கும் நாடு, ஊர், அங்குள்ள சமுதாய பழக்க வழக்கங்கள், இயற்கை வளங்கள் மற்றும் அதன் தாக்கங்கள், குடும்பச் சூழ்நிலைகள், போன்ற பல ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து அறிவாலும், முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேறித் தன்னுடை வாழ்க்கை வளத்தை மாற்றிக்கொண்டவர்கள் பலர். இவர்களின் அறிவு, உழைப்பு, செல்வம் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக அமைந்தது அவர்கள் சிந்தனைத் திறனே. வெறும் அதிர்ஷ்டத்தால் முன்னேறியவர்கள் என்று எண்ணப்படுவார்கள் மிகக் குறைவு. அவர்களுக்கும் வாழ்வில் சிந்தனை பல நேரங்களில் உதவியாக இருந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய சிந்தனையாளரான பிளாட்டோ என்பவர் கூறுகின்றார் “சிந்தனை என்பது நீங்கள் உங்கள் ஆன்மாவோடு நடத்தும் ஒரு உரையாடல்.” (Thinking: Talking of the soul with itself -Plato) எனவே இளம் வயது முதல் நாம் குழந்தைகளுக்குச் சிந்தனைத் திறனை வளர்ப்பது மிக அவசியம். பல சமுதாயங்களில் முந்திய நாட்களின் கருத்துக்கள் அடுத்த சமுதாயத்தின் மீது புகுத்தப்படுகின்றன. இதனால் அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சி குன்றிவிடுகின்றது. அந்தச் சமுதாயத்தின் மக்கள் பெரும்பாலும் அடிமைகளாக வாழ்கின்றார்கள். அவர்களின் தன்னம்பிக்கை முன்னேற்ற உணர்ச்சி ஆகியவை பெருவாக பாதிக்கப்படுகின்றன

சரித்திரத்தை திரும்பிப் பார்க்கும் பொழுது எவ்வாறு பல நாடுகளில் மக்களின் சிந்தனைத் திறன் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களைத் தங்கள் ஆட்சிக்கு அடிமைகளாக வைத்திருந்தனர் என்பதற்கான பல சான்றுகள் கிடைக்கின்றன. இதை மாற்றுவதற்கான ஒரே வழி சிந்தனையை வளர்க்கும் கல்வி முறையே. ஆனால் துரதிருஷ்டவசமாக நமது கல்வி முறை மாணவர்களின் சிந்திக்கும் திறனுக்குச் சவாலாக அமைந்துள்ளது. அவர்களை வெறும் ‘நினைவுப் பெட்டகங்களாக” மாற்றி ‘தொழில் சார் சமுதாயத்தில்’ இருந்தது போல் வெறும் இயந்திரங்களாக மாற்றிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலை ஒரு வளரும் மறுமலர்ச்சி தேடும் சமுதாயத்திற்கு ஏற்றதல்ல. .

“நான் சொன்னதைச் செய்’ என்பதும் “உனக்கு கேள்விகேட்கும் உரிமையோ தகுதியோ அல்ல” என்ற அணுகுமுறையைக் கொள்வதும் ஒரு ஆதிக்க மனப்பான்மையை வளர்க்கும். இதனால் கருத்துக்கள் பரிமாற்றம் குறைந்து மூட நம்பிக்கைகளும் அறிவியல் சிந்தனையில் தேக்கங்களுமே ஏற்படும். “உங்கள் சிந்தனையின் ஆளுமை எப்படி இருக்கின்றதோ அப்படியே உங்கள் வாழ்க்கை அமையும்:” என்று பல பேரறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.

பல நாட்டுக்கு கல்வி முறைகளில் ஆரம்பக்  கல்வி முதலே குழந்தைகளுக்கு சிந்திக்கும் திறனையும், கேள்விகள் உருவாக்கும் திறனையும் வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். “ஒரு மனிதனை அவன் அளிக்கும் பதில்களால் அல்லமால் அவன் கேட்கும் கேள்விகளால் எடைபோடு” (Judge a man by his questions rather than by his  answers) என்று வோல்டைர்(Voltaire) என்ற தத்துவ மேதை கூறுகின்றார். கேள்விகள் ஒரு மனிதனின் அறிவின் ஆரோக்கியமான

வளர்ச்சிக்கு அடிப்படை. கேள்விகள் வளமான சிந்தனைக்கு அடிப்படை. இதே நேரத்தில் நாம் பல காலங்களால் போற்றப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் அவைகளைப் போற்றவும் அறிந்துகொள்ள வேண்டும்.

நாம் சிந்திக்க விழைவதால் நம்முடைய முன்னோர்கள் கூறிய கருத்துக்களும் சிந்தனைகளும் தவறானது என்றோ ஆதிக்க உணர்வோடு உள்ளது என்ற கருத்தோ கொள்ளுதல் தவறாக இருக்க வாய்ப்புண்டு. காலத்திற்கு ஏற்ற முரண்பாடான சிந்தனைகளை மாற்றுதலும் பழமைக்கு எதிர்மறையல்ல.

சில ஆண்டுகள் முன்னால் நான் ஒரு பள்ளியிலே பதினொன்றாவது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்த பொழுது ஒரு மாணவன் கேட்ட கேள்வி என்னை அதிர்ச்சி செய்தது. “அய்யா. நீங்கள் உங்கள் வீட்டிற்கு பால் எங்கே வாங்குகின்றீர்கள்?”  நான் சிறிது நேரம் அந்தக் கேள்வியின் உள்நோக்கம் அறியாமல் திகைத்தேன். அமைதியாக “அருகில் உள்ள ஆவின் பாலகத்தில் சென்று” என்று பதிலளித்தேன். அதைத் தொடர்ந்து அவன் கேட்டான் “உங்கள் வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் எங்கிருந்து வாங்குகின்றீர்கள்?”  தயக்கத்துடன் பதிலளித்தேன் “அருகில் உள்ள மளிகைக் கடையிலிருந்து”  தன் கேள்விக்கணைகளை நிறுத்தாமல் அவன் கேட்டான் “உங்கள் மருந்துகளை எங்கிருந்து வாங்குகின்றீர்கள்?”

உடன் பதிலளித்தேன் “அருகில் உள்ள மருந்தகத்திலிருந்து”

அவன் சிரித்துக்கொண்டே கேட்டான் “நீங்கள் பால் வாங்க ஒரு இடத்திற்கும் மளிகைப் பொருட்கள் வாங்க ஒரு இடத்திற்கும் மற்றும் மருந்து வாங்க இன்னொரு இடத்திற்கும் செல்கின்றீர்கள். நான் மட்டும் இயற்பியல், வேதியல் மற்றும் கணக்கு போன்ற எல்லா பாடங்கையும் ஏன் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும். நான் வெவ்வேறு பள்ளிகளில்  வெவ்வேறு பாடங்களை படிப்பதில் என்ன தவறு? முடியுமா?”  எனக் கேட்டான். நான் திகைத்து நின்றேன். கேள்வி சரியா தவறா என்பதே கருத்தல்ல. அந்த மாணவனின் சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது. ஒருக்கால் நாளைய பள்ளிகள் அப்படித்தான் அமையுமோ?”

“ஒரு பிரச்சனையை அணுகுவதற்கு அதன் உள்வட்டத்தில் இருந்து சிந்தித்தால் அதற்கு விடை கிடைக்காது. அந்த வட்டத்திற்கு வெளியே சென்று சிந்திக்க வேண்டும்”  (You cannot solve the problems from the same leel of consciousness which created them) என்று மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) கூறுகின்றார்.

சிந்தனைகள் இல்லாத வாழ்வு சிறக்காது. சிந்தனைத் திறன்களை நாமும் வளர்த்து நமது குழந்தைகளையும் வளர்க்க உதவி செய்யலாமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *