இந்த வார வல்லமையாளர் (270)
இவ்வார வல்லமையாளராக அமெரிக்க அதிபர் திரு. டொனால்ட் டிரம்ப் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
டொனால்ட் டிரம்ப் வடகொரியாவில் அமைதியை ஏற்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்படலாம் என ஊடகங்களில் கூறப்படுகிறது. அத்துடன் வடகொரியாவில் மாட்டியிருந்த மூன்று அமெரிக்கர்களையும் விடுதலை செய்து அனைவராலும் பாராட்டுபெற்றார். இவரது உலக அமைதிக்கான முயற்சிகளுக்காக இவரை வாழ்த்தி, இவ்விருதை வல்லமை வழங்குகிறது
அமெரிக்காவின் மிகபெரிய பணக்காரர்களில் ஒருவர் டொனால்ட் டிரம்ப். ஆனால் ஏழை எளிய மக்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தார். குறிப்பாக மிச்சிகன், விஸ்கான்ஸின், பென்சில்வேனியா, வடவர்ஜினியா, கென்டக்கி
போன்ற உற்பத்திதொழில் சார்ந்த மாநிலங்களில் ப்ளூகாலர் எனும் உழைக்கும் வர்க்கத்தின் பேராதரவே இவரை “சுதந்திர உலகின் தலைவர்” என அழைக்கபடும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்த்தியது.
ஒரு பணக்காரரை போல இவர் சிந்திக்காமல் ஒரு அமெரிக்க குடிமகனாக சிந்தித்தார். அமெரிக்க தொழிற்சாலை வேலைகள் வேறுநாடுகளுக்கு செல்வதை கண்டித்தார். சுதந்திர பொருளாதாரம் எனும் பெயரால் நடக்கும் மோசடி வேலைகளை எதிர்த்தார். நிலக்கரி சுரங்க தொழிலாளருக்காக குரல் கொடுத்தார். ப்ரைமரியில் இவரை எதிர்த்த 16 ரிபப்ளிக்கன்களும் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் பெருச்சாளிகள். கோடி, கோடியாக பணம் வைத்திருந்தவர்கள். அனைவரையும் அனாசயமாக ஊதித்தள்ளி ஜெயித்தார். அதன்பின் இலரி க்ளின்டன் அம்மையாரை பொதுத்தேர்தலில் சந்தித்தார்.
இலரி முதல் பெண் வேட்பாளர் என்பதாலும், அவரது அரசியல் அனுபவத்தாலும், பில் க்ளின்டனின் மனைவி, முன்னாள் முதல் பெண்மணி, முன்னாள் செக்ரடரி ஆஃப் ஸ்டேட் (வெளியுறவுத்துறை அமைச்சர்) என்பதாலும் எளிதில் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கபட்டது. ஓபாமா, ஆலிவுட் நடிகர்கள், வாரன் பப்பட், பில்கேட்ஸ் போன்ற கோடீசுவரர்கள், கூகிள், பேஸ்புக் போன்ற பெரும் கம்பனிகள், நடிகர்கள், ஊடகங்கள் என அதிகாரவர்க்கம் முழுக்க இலரி க்ளின்டன் பக்கம் நின்றது. ஆயிரம் பேய்களை ஒற்றை வேப்பிலையால் அடித்து விரட்டும் மாரியம்மன் கோயில் பூசாரி போல ட்விட்டர் எனும் ஒற்றை ஆயுதம் கொண்டு அனைவரையும் வீழ்த்தி, மாபெரும் மக்கள் ஆதரவை பெற்று ஆட்சியை பிடித்தார் வெற்றித்திருமகன் டொனால்ட் டிரம்ப்.
ஆட்சியை பிடித்தபின் மக்கள் நலனே முக்கியம் என கருதி இவர் நடத்திய நல்லாட்சியின் விளைவாக வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவில் குறைந்து, வரிகள் குறைந்து, தொழில் செய்ய இருக்கும் கட்டுப்பாடுகள் குறைந்து பெண்கள், சிறுபான்மையினர் நலன் மேம்பட்டு நாடு வளமாக இருந்து வருகிறது.
இவரை போல ஆட்சிபொறுப்புக்கு வந்து உலக அமைதிக்கு பாடுபட இளைஞர்களுக்கு இவ்விருது ஊக்கமளிக்கும் என வல்லமை நம்புகிறது
வல்லமையாளர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )