க.பாலசுப்பிரமணியன்

 

கைப்பந்தாய் கால்பந்தாய் வண்ணமலர் கலைப்பந்தாய்

வான்வெளியில் கோள்கள் எண்ணின்றி இருக்கையிலே

கருப்பந்தில் எனைவைத்து வாழ்வொன்றில் விளையாட

பூப்பந்தில் அழைத்ததேனோ யானறியேன் பூரணனே !

 

புலன்தேடும் தேடலிலே வாழ்வெல்லாம் இரையாக்கிப்

பார்முழுதும் பகலிரவாய் அலைந்தாலும் பயனேது

ஊர்தேடிப் பேர்தேடி உறவுபலவும் தேடித்தேடி

புகழ்தேடிப் பாதையிலே மாய்வதேனோ மாயவனே !

 

கன்றாகிக் காளையாகிக் காமத்தில் வேடுவனாகிக்

காலத்தின் தூதுவனாகிக்  கருமத்தின் சுமையாகிக்

கற்பனையின் இரையாகிக் களைப்பின்றி விளையாடிக்

கடைநிலையில் மூப்பினிலே முதிர்வதே னோ மூத்தவனே !

 

விதிவிரட்ட  ஒருபக்கம் மதிதடுக்க மறுபக்கம்

சதிராடும்  வாழ்வினிலே கதிதேடும் உயிரே

விழிபிதுங்கி மதிமயங்கித் தன்னைத் தேடும்

தேடலின் முடிவென்ன யானறியேன் வேதவனே !

 

பருவங்கள் மாறிடவே பதறுகின்ற நெஞ்சமே

உருவங்கள் மாறிடினும் உண்மைகள் உணராது

தருணங்கள் வீணாக்கித்  தேடிட்ட திரவியத்தை

நிலையென்று நினைத்தே தவிப்பதேனோ பராபரமே !

 

கூவிட்ட சேவலுக்கோ கதிரவனே சொந்தமில்லை

குயில்பாட்டு இனித்தாலும் குயிலுக்குச் சொந்தமில்லை

நறுமணத்தைச் சுமந்தாலும் காற்றுக்குச் சொந்தமில்லை

நானென்று அழைப்பதையே நாமறக்குமோ நாரணனே !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பந்தோடு பந்தாக….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *