நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம்
சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம்
போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம்
போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே!
கோவில்சிலை போகுதென்று போராட்டம் ஒருபக்கம்
கோவிலையே தகர்ப்போமென்று போராட்டம் மறுபக்கம்
சாமியில்லை சாமியில்லை என்றுசொல்லிப் போராட்டம்
சன்மார்க்கம் காத்திடுவார் தம்பாட்டில் போராட்டம்!
மருத்துவர்கள் வசதிக்காய் வகைவகையாய் போராட்டம்
மருந்திலே கலப்படத்தை தடுத்துவிடப் போராட்டம்
நோயாளி சுகம்பெற்று வருவதற்கும் போராட்டம்
போராட்டம் மருத்துவத்தைப் பொறிவைத்தே நிற்கிறது!
கற்றறிந்தார் காசுக்காய் போராட்டம் நடத்துகிறார்
கல்விகற்கும் மாணவரும் போராட்டம் நடத்துகிறார்
அற்பத்தனம் கொண்டுநிற்கும் அனைத்துக் கல்விமுதலைகளும்
ஆதாயம் தேடுதற்கும் போராட்டம் நடத்துகிறார்!
ஊழலென்னும் பேயதனை ஒழித்துவிடப் போராட்டம்
உணர்வதனை இழக்கவைக்கும் மதுவொழிக்கப் போராட்டம்
வாழ்வதற்குத் தொழில்தேடும் மக்களது போராட்டம்
மாற்றுத் திறனாளிகளும் போராட்டம் நடத்துகிறார்!
கதிரையினைப் பிடிப்பதற்கும் போராட்டம் நடக்கிறது
கதிரையிலே இருப்பாரும் போராட்டம் நடத்துகிறார்
போராட்டம் என்பதற்கே அர்த்தமின்றிப் போகிறது
போராட்டம் தனையொழிக்கப் போராட்டம் தேவையன்றோ!
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.