சங்கப்பெண் கவிஞர்களின் புறப்பாடல்களில் காணலாகும் உலக வழக்கைத் தழுவிய மெய்ப்பாடுகள்

0

 

ப.சூர்யலெக்ஷ்மி,
பதிவு எண்: 12178
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ் உயராய்வு மையம்,
தமிழியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
திருநெல்வேலி.
ஆய்வு மையம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
அபிசேகப்பட்டி, திருநெல்வேலி-627012 தமிழ்நாடு, இந்தியா.

நெறியாளர்: ந.வேலம்மாள், உதவிப் பேராசிரியர்,
தமிழியல் துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி-627008

 

 

முன்னுரை:-

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் பொது மெய்ப்பாடு என்பது எண்வகை மெய்ப்பாடு அவை நாடக வழக்கினைச் சார்ந்து வரும். அதில் நானான்கு வகையினைக் கூறி 32 என்பார். அவை அல்லாத அதில் அடங்காத 32 மெய்ப்பாடும் உலக வழக்கினைப் பெரிதும் தழுவிய மெய்ப்பாடு ஆகும். உரையாசிரியரான இளம்பூரணரும் பேராசிரியரும் இந்த 32 மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக நிகழும் என்கிறார். “ச.சோமசுந்தர பாரதியார் இவை மூப்பத்திரண்டும்  எவ்வெட்டாய் முறையே இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற்புணர்வு என்ற நான்கு பகுதிகட்கும் தொகுக்கப்பட்டுள்ளன என்றும் இவை அகத்துறைக்கே சிறப்பாக வரும் என்றும் ஏதுக்காட்டி நிறுவுவதுடன் பழைய உரையாசிரியர் இருவர் கொள்கைகளையும் மறுத்துவிடுவர்”. உரையாசிரியர்களின் மாறுபட்ட கருத்தினை நினைவில் கொண்டு சங்கப்பெண் கவிஞர்களின் புறநானூற்றுப் பாடல்களில் உலக வழக்கினைத் தழுவிய மெய்ப்பாட்டினைக் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

உலகவழக்கினைத் தழுவிய மெய்ப்பாடு:-

உலக வழக்கைத் தழுவிய மெய்ப்பாடு 32 ஆகும். அவை உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூவுதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்பவையாகும்.

உடைமை:-

உடைமை என்பது “செல்வம் உரியப்பொருள், அணிகலன், உரியவை” என்று தமிழ் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

உடைமை என்பதனை “யாதானுமொரு பொருளை உடையனாயினால் வருதலாகும் மனநிகழ்ச்சி என்று இளம்பூரணர் கூறுகிறார். “உடைமை என்பது செல்வம், செல்வநுகர்ச்சியாயின் உவகைப்பொருளாம்; இஃது அன்னதன்றி நுகராதே அச் செல்வந்தன்னை நினைந்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம் என்று பேராசிரியர் கூறுகிறார். உடைமை மெய்ப்பாடு பின்வருமாறு,

நிலப்பரப்பு நம்முடையது என்று உரிமை உடைய மன்னன் ஆனவன் இறந்து விட்டால் வலிமை உடையவர்களுக்கு நிலமானது உடைமை உடையதாகும் என்ற செய்தி ஔவையின் பாடலில் பின்வருமாறு, “தமவே ஆயினும் தம்மொடு செல்லா, வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்” (புறம் 367,2-3), பாரிமகளிர் தம்முடைய பறம்பு மலையும் தந்தையும் முன்பு தமக்கு உடமையாக இருந்தமையைப் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார் “எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்” (புறம் 112, 2).

நடுவுநிலை:-

நடுவுநிலை என்பது “நீதி ஒரு பக்கம் சாயாமை” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.

நடுவுநிலை என்பது “ஒருமருங்கு ஓடாது நிகழும் மனநிகழ்ச்சி” என்று இளம்பூரணர் கூறுகிறார். நடுவுநிலை என்பது “ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை” என்று பேராசிரியர் விளக்கமளிக்கிறார்.

சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனோடு மற்போர் புரிந்தான். சிலர் கிள்ளி வெற்றிபெறுவான் என்றனர்; பனை மரத்தின் அடியில் தான்நின்று நடுநிலையோடு அக்காட்சியைக் கண்டதனை நக்கண்ணையார் கூறுவது பின்வருமாறு, “ஆடாடென்ப வொருசா ரோரே, ஆடன்றென்ப வொருசா ரோரே, நல்ல பல்லோ ரிருநன் மொழியே” (புறம் 85, 3-5).

அருளல்:-

அருளல் என்பது “ஈதல், அருள்செய்தல், உண்டாக்கல், காத்தல், கற்பித்தல், கொடுத்தல், அசைதல், சொல்லல், விழித்தல், கட்டளையிடல்” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. “அருளாவது எல்லா உயிர்க்கும் அளிசெய்தல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். பேராசிரியர் அருளென்பது “மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளுதல்” என்கிறார்.

குழந்தையின் மழலைச் சொற்கள் தந்தைக்கு அருளுவது போல ஔவைக்கு அதியமான் அருளுகிறான் என்று ஔவை கூறுவது பின்வருமாறு,   “அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை, என்வாய்ச் சொல்லும் அன்ன; ஓன்னார்” (புறம் 92, 3-4). அதியமான் பரிசில் தருவது தாழ்ப்பினும் அவன் தருவது தவறாது அருளுடையவன் என்பதனை “கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யா காதே” (புறம் 101, 7-8). பொகுட்டெழினி துன்ப இருளினைப் போக்கி நிலவு போன்று அருளும் தன்மையுடையவன் என்பதனை “இசைவிளங்கு கவிகை நெடியோய்! திங்கள், நாள்நிறை மதியத்து அனையை; இருள்” (புறம் 102, 6-7). விறலியிடம், ஔவை பரிசிலரைப் பாதுகாக்க அதியமான் உண்கலத்தில் அருளுவான் என்கிறாள். பின்வருமாறு, “மெழுகுமெல் அடையின் கொழுநிணம் பெருப்ப” என்கிறாள். (புறம் 103, 10).

நாஞ்சில் வள்ளுவன் ஆய் அண்டிரனிடம் விறலியர் சமைக்க அரிசியை ஔவை வேண்ட, அவனோ ஆராயாமல் பெருங்களிறு சுமக்கும் அளவில் உணவினை ஈந்து அருளிய செய்தி பாடலில், “பெருங்களிறு நல்கியோனே யன்ன தோர்” (புறம் 140, 8) காணலாகிறது. அதியமான் இறந்த பின்பு அவன் செய்த அருள் தன்மையினை ஔவை பாடலில் பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு, “சிறிய கட்பெறினே, எமக்கு ஈயும் மன்னே! பெரிய கட்பெறினே, யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! சிறு சோற்றானும் நனிபல் கலத்தன்; மன்னே!” (புறம்235,1-5).

இழந்த தன் கணவனின் அருள் தன்மையினை அவன் மனைவி எண்ணிப் பார்க்கிறாள். இரவலர்க்கு உணவு வழங்கி அவர்கள் கண்ணீரினைப் போக்கி அருளியமையைப் பாடலில் “இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்” (புறம் 250, 2-3).

தன்மை:-

தனிமை என்பது “இயல்பு, குணம், நிலைமை, பெருமை, மெய்மை, அழகு,” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.

தன்மை என்பது “சாதியியல்பு” என்று இளம்பூரணர் கூறுகிறார். தன்மையென்பது, சாதித்தன்மை; அவையாவன: “பார்ப்பாராயிற் குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் நடந்து சேறலும், இடையராயிற் கோற்கையுங் கொடுமடியுடையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றலுமென் றின்னோரன்ன வழக்குநோக்கிக் கொள்க” என்று பேராசிரியர் கூறுகிறார்.

மற குலப்பெண் ஒருத்தி மண்ணாசையால் போர் செய்யும் பகைவேந்தர் உருவாக வேண்டும் என்று நடுகல்லைத் தொழுத செய்தி பின்வருமாறு, “ஓ…..வேந்தனொடு, நாடுதரு விழுப்பகை எய்துக எனவே” (புறம் 306, 6-7). மறகுலபெண்ணைப் பற்றி வினவியவனிடம் இவள் தந்தை வயலில் தனியே வென்ற மன்னருக்கு மனம் பேசியுள்ளார் என்கிறார், அள்ளூர் நன்முல்லையார். மறக்குலத்தின்வீரம் பொருந்திய தன்மையைக் காட்டுகிறது பாடலில், “கரந்தைஅம் செறுவின் பெயர்க்கும், பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே” (புறம் 340, 8-9). என்கிறார். மறக்குலப்பெண் முன்னொரு நாள் தந்தையையும் கணவனையும் போரில் பறிகொடுத்தாள் இருப்பினும் தன் ஒரே மகனான இளைய மகனையும் வெள்ளாடை உடுத்தி வேலைக் கையில் கொடுத்து போருக்கு அனுப்பும் செய்தி பாடலில், “வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇ” (புறம் 279, 8).

அதியமானைப் பகைத்த மன்னனிடம் அவன் நுண்ணிய பூண் அணிந்த மார்பினை உடையவன் நற்போரினைச் செய்யும் தன்மையன் அதனால் அவனை பகைக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறாள் பாடலில், “கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்” (புறம்88, 4).

ஏறைக்கோன் குறிஞ்சி நிலத்துக் குறுநிலத் தலைவன் இவன் பிறர் வருகை கண்டு நாணமடைபவன். தனக்குரியோர் பிழை செய்யின் அதனைப் பொறுப்பவன். பலியிடத்து வலிமையுடையவன் அரசனிடத்தில் வலிமையுடையவன் இத்தகைய தன்மை வாய்ந்தவை என்று குறமகள் இளவெயினி கூறுவது பின்வருமாறு, “தமர்தற் றப்பி னதுநோன் றல்லும், பிறர்கை யறவு தானா ணுதலும்” (புறம் 157, 1-2).

அன்பு:-

அன்பு என்பது “பற்று, ஆசை, தயை, நேசம், கருணை, பிரியம், அருள், பக்தி, சிவம், என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. அன்பு என்பது “பயின்றார்மாட்டுக் காதல்” என்று இளம்பூரணர் கருதுகிறார்.

“பேராசிரியர் அன்பென்பது, “அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம், அஃதுடையார்க்குப் பிறர்கண் துன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாதலின் அவ்வருளானே “அன்புடைமை விளங்கும்” என்று விளக்கம் தருகிறார்.

அதியமான் ஔவையின் மீது பேரன்பு வைத்ததன் காரணமாக அரிய வகை நெல்லிக்கனியைத் தான் உண்ணாது புலவருக்கு ஈந்தமை பாடலில், “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,.. சாதல் நீங்கஎமக்கு ஈத்தனையே” (புறம் 91, 9,11).

வாழ்த்தல்:-

வாழ்த்தல் என்பது “ஆசி கூறு, கடவுள் துதி, மங்களம் பாடுதல்” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.

வாழ்த்தல் என்பது “பிறனை வாழ்த்துதல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். வாழ்த்தல் என்பது “பிறரால் வாழ்த்தப்படுதல், இது பிறவினையன்றோவெனின் ஒருவனை நீடு வாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும் அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையுமென்று” என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.

ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனி ஈந்தமைக்காக நீலமணி போன்ற கரிய கழுத்தினையுடைய இறைவன் போல் வாழ்க என்று வாழ்த்துவது பின்வருமாறு, “நீல மணிமிடற்கு ஒருவன் போல மன்னுக-பெருமே! நீயே”  (புறம் 91, 6-7). ஔவையாரின் மற்றொரு பாடலில் சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி மூவேந்தர்களும் ஒன்றாக இருக்கும்போது நல் அறத்தினைச் செய்தால் வானத்து விண்மீனைக் காட்டிலும், மழைத்துளிகளைக் காட்டிலும் நெடுநாள் வாழ்க என்று வாழ்த்துவது, “வானத்து வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் பரந்து இயங்கு மாமழை உறையினும், உயர்ந்துமேந் தோன்றிய பொலிகநும் நாளே” (புறம் 367, 15-18).

பொகுட்டெழினியிடம் திறை செலுத்தாத பகைமன்னன் நாட்டைக் கழுதையேர் பூட்டி அழித்தாய் நீ வாழ்வாயாக என்று வறியவன் ஒருவன் பாடினான் என்ற செய்தியை ஔவை பாடலில் பின்வருமாறு, “வைகல் உழவ வாழிய பெரிது” கூறுகிறார், (புறாம் 392,11).

அரற்று:-

அரற்று என்பது “அழுது புலம்பு, பலவும் சொல்லி அழுது தன் குறை கூறுதல், ஒலி செய்” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.

அரற்று என்பது “உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு” என்று இளம்பூரணர் கூறுகிறார். அரற்று என்பது “அழுகையின்றிப் பலவுஞ்சொல்லி தன்குறை கூறுதல்” என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.

போரில் கணவன் மார்பில் விழுப்புண்பட்டுக் கிடந்தான் அவனை எடுத்து உன் தாய் இந்நிலை அறிந்தால் என்ன பாடுபடுவாளோ என்று அரற்றுகிறாள். பின்வருமாறு, “யங்கா குவள்கொ வழியில் டானே”(புறம் 254, 11).

ஆராய்ச்சி:-

“ஆராய்ச்சி என்பது துருவிப் பார்த்தால், நுணுகிப் பார்த்தால், புதியன காணல், சோதனை, என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.

ஆராய்ச்சி என்பது ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தென ஆராய்தல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். ஆராய்ச்சி என்பது ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல் என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.

தொண்டைமான் அதியமானிடம் பகை கொண்டான்; போரில் ஈடுபடக் கருதினான். போரின் கொடுமையை அதியமான் எண்ணி ஆராய்ந்து ஔவையைத் தூது அனுப்பியமை பின்வருமாறு, “பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து” (புறம் 95, 4). ஔவையின் மற்றுமொரு பாடலில் அதியமானுக்குத் திறை செலுத்தாத மன்னனிடம் திறை செலுத்த மறுப்பின் உங்கள் மனைவி உங்கள் தோளினைப் பிரிவது உறுதி என்று ஆராய்ந்து கூறுவது “குறுந்தொடி மகளிர் தோள்விடல், இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே” (புறம் 97, 24,25).

அதியமானுக்கும் கோவலூர் மலாடர் கோவிந்தனுக்கும் பகை உண்டாயிற்று. இடையிலுள்ள அதனைக் கண்டு அஞ்சியதனை ஔவை பார்க்கிறார். அதியமானைப் போரில் எதிர்த்து நிற்பவர் யார் போரின் தன்மையை நினைந்து ஆராய்வது பின்வருமாறு, “இறங்குகதிர் அலம்வரு கழனி, பெரும்புனற் படப்பை, அவா அகன் தலைநாடே”  (புறம் 98, 19-20).

நடுக்கம்:-

நடுக்கம் என்பது “அச்சம் துன்பம் கிறுகிறுப்பு” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.

நடுக்கம் என்பது “யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வரு மனநிகழ்ச்சி என்று இளம்பூரணர் கூறுகிறார். நடுக்கம் என்பது “அன்பும் அச்சமும் முதலியன உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ளம் நடுங்குதல், புதல்வாக்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலன்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம்.” என்று பேராசிரியர் கூறுகிறார்.

நக்கண்ணையார் பெருநற்கிள்ளியை கூடப் பொறாமையால் தாய்க்கும் ஊருக்கும் அஞ்சி நடுங்குவது பாடலில், “தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே அடுதோண் முயங்கல் லவைநா ணுவலே” (புறம் 83, 3-4).

முடிவுரை:-

புறப்பாடல்களில் உலக வழக்கினைப் பெரிதும் தழுவிய மெய்ப்பாடு உடைமை, நடுவுநிலை, அருளல், தன்மை, வாழ்த்தல், அரற்று, ஆராய்ச்சி, நடுக்கம் என்பதாகும். இவை மனித மனத்தின் உள்ளுணர்வின் புறதோற்றங்களாக வெளிப்படுகின்றன.

துணைநூற்பட்டியல்:-

  1. ஔவை சு.துரைசாமிப் பிள்ளை (வி.வு), 1977, புறநானூறு (1-200 பாட்டுக்கள்), திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை -1
  2. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை (வி.வு) , 1996, புறநானூறு (201-400) திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை- 18
  3. சுப்புரெட்டியார். ந2011 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை; சந்தியா பதிப்பகம் சென்னை-

அகராதி:-

  1. மு. நிலாமணி (தொ.ஆ) கலா.கே.தாக்கர்(தொ.ஆ), 2005 தமிழ்-தமிழ் அகராதி நல்லற்பதிப்பகம், சென்னை – 600017.
  2. வின்சுலோ.எம், 1984,தமிழ் ஆங்கில அகராதி, ஏசியன் எஜிகேஷனல் சர்வீஸ், நியூ டெல்லி.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், தமிழியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர்க் கல்லூரி,  (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்),
திருநெல்வேலி.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *