பொம்மை
முனைவர் கி. இராம்கணேஷ்
என்னால் சொல்ல முடியவில்லை
எப்பொழுதும் என் அங்கங்களை
நோட்டமிடும் கழுகுப்பார்வைகள்
என் அனுமதியில்லாமல் அன்றாடம்
என்னைத் தீண்டும் கைகள்…
வீசிய காற்றின் வேகத்தில்
விலகிய ஆடையில்
மார் பார்க்கும் பார்வைகள்
பேசாமல் மௌனியாய்
ஏதோ ஒரு திசையில்
பார்த்துக்கெண்டிருக்கிறேன்
சிலநேரங்களில்
கோடையில் வீசும் தென்றலாய்
தொட்டுச் செல்லும் குழந்தைகளின் ஸ்பரிசங்கள்
இரணமான உடலுக்கு மயிலிறகின் மென்மை
இப்படித்தான் என் வாழ்க்கை
சுழன்று கொண்டிருக்கிறது…
புத்தாடையுடுத்தி புதுப்பொலிவுடன்
பார்க்க அழகாய்த் தெரிகிறேன்.
நின்று நின்று கால்களும் நோகின்றன.
நான் போட்டிருக்கும் ஆடையைப்
பிடுங்கிச் செல்லத்தான்
பலரும் போட்டியிடுகிறார்கள்
பொம்மையாய் இருந்தாலும்
நானும் பெண்தானே…